Thursday, March 6, 2014

PART - 1, Chapter - 37


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 37


ஹாலட்சுமி, நமக்காக பகவானிடத்திலே சிபாரிசு செய்வதனாலே, அவன் சரணார விந்தத்தைப் பற்றி, அதன் மூலம் நாம் மகா விஷ்ணுவைப் பற்ற வேண்டும்.  லக்ஷ்மி இல்லாமல் நாராயணன் இல்லை.   சூட்சுமமான "இரட்டை"  உயர் நூல்கள்.  ஆதியிலிருந்தே அப்படித்தான் இருந்து வருகிறது லக்ஷ்மி நாராயண தத்துவம்.  ஆதலால், ஒன்றை இட்டே ஒன்றைச் சொல்ல வேண்டும்.  ஒன்றின் பெருமை ஒன்றின் இடத்திலே உள்ளது.   நாராயனின் பெருமை லக்ஷ்மியினிடத்திலும் உள்ளது.
இரண்டும் சேர்ந்திருக்கும்படியானதைத் தான் நாம் வரிக்க வேண்டும்.  ஸ்ரீ சூக்தம் இருக்கிறது - லக்ஷ்மியைக் குறித்த சூக்தம்.  ஆனால் அதில் உள்ள பிரார்த்தனை யாரிடத்திலே  செய்யப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.
"ஹே ஜாதவேதா, மஹாவிஷ்ணு!  உன்னுடைய தர்மபத்னியான மஹாலக்ஷ்மியை எப்போதும் என்னிடத்தில் இருக்கும்படியாக நீ பண்ணு.."  ஸ்ரீ சூக்தம்தான் இது!  பிரார்த்தனை மஹாவிஷ்ணுவினிடத்தில் இருக்கிறது.  அவளை நம்முடன் இருக்கப் பண்ண வேண்டுமானால் அவனுடைய அனுமதி வேண்டுமில்லையா..?  அதனால் தான் ஜாதவேதா!
நன்றாக கவனிக்க வேண்டும்.  இவனுடைய பெருமையை அங்கே சொல்ல வேண்டும்.  அங்கே இருக்கிற பெருமையை இவனிடத்திலே சொல்ல வேண்டும்.  அப்படிச் சொன்னால் பெருமை கிடைக்கும் என்கிறார்கள்.
இது ஏதோ அங்கே உள்ளதை இங்கே சொல்லி, இங்கே உள்ளதை அங்கே சொல்லி கலகம் விளைவிக்கிற விஷயமில்லை.  ரொம்ப உத்தமமான நிலை!
இந்தப் பெருமையை அங்கேயும் அந்த பெருமையை இங்கேயும் எடுத்துச் சொன்னவர் யாரென்றால் ஆஞ்சநேயர்.  ஆசார்ய ஸ்தானத்தை வகிக்கிறார் இந்த ஆஞ்சநேயர்!  அந்த ஆஞ்சநேயரிடத்தில்தான் தூத்யம் என்கிற தூது போகும் கலையைக் கற்றுக் கொண்டானாம் ராமன்.  அவ்வளவு உயர்ந்த முறையிலே, தூது போதல் என்பதை நடத்திக் காட்டினார் ஆஞ்சநேயர்.
ராமன் ஏன் ஆஞ்சனேயரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி... அடுத்த அவதாரத்த்தில் - கிருஷ்ணாவதாரத்தில் - தூது போக வேண்டியிருந்ததனாலே அதைக் கற்றானாம் பகவான்.
ஆஞ்சநேயரின் தூது பூரண பலனைக் கொடுத்தது.  ஆனால், கிருஷ்ணனின் தூது பூரண பலனைக் கொடுக்கவில்லை!  பகவான் காரியம் கூடத் தப்பிப் போகலாம் - ஆனால் ஆசார்யர்கள் பண்ணக் கூடிய காரியம் ஒரு நாளும் கெடாது என்பதை இந்த இரண்டு இதிகாசங்களும் காட்டிக் கொடுக்கின்றன.
இவ்வாறு ஆஞ்சநேயரின் ஆசார்ய ஸ்தானத்திலே இருப்பதை சங்கல்ப்ப சூர்யோதயம் என்கிற நூலில் சுவாமி தேசிகன் அதி ஆச்சர்யமாக விளக்கிக் காட்டுகிறார்.
அப்படிப்பட்ட ஏற்றமுடிய ஆஞ்சநேயன், ராமனுடைய எற்றங்களை எல்லாம் சீதையிடம் எடுத்துச் சொன்னான்.
"ராமபிரானுக்குத் தூக்கமே வராது.  எப்போதாவது ஒரு சமயம், அவனையும் அறியாமல் அப்படி கண்ணை இழுக்கும்.  உடனே விழித்துக் கொள்வான்.  என்ன சொல்லிக் கொண்டு எழுந்திருப்பான்..? "சீதா சீதா" என்று அழைத்தபடியே எழுந்திருப்பான். அம்மா, எப்போதும் உங்களுடைய நினைவாகவே இருக்கிறான்.  அதைத் தவிர வேறொன்றுமில்லை" என்று ராமனுடைய பெருமைகளை அங்கே போய்ச் சொன்னான்.
சீதையினுடைய பெருமை மொத்தமும் இங்கே வந்து சொன்னான்.  அதனால் அவனுக்கு என்ன பலன்..? இப்படி உத்தமமான முறையில் இரண்டு பேர் மனத்தையும் சேர்த்து வைத்தானே.. அந்த ஆஞ்சநேயனுக்குப் பெரிய வெகுமானம் கிடைத்தது.  அப்படியே எம்பெருமான் ராமன் கட்டி அணைத்துக் கொண்டு ஆனந்த பாஷ்பத்தினாலே ஆஞ்சநேயனை மஞ்சனமாட்டி விட்டான்.  உயர்ந்த ரீதியிலே அவனை அப்படியே குளிப்பாட்டி விட்டான்.  வேறு யாருக்கு இதைப் போன்ற இன்பம் கிடைக்கும்...?
கடைசியில் எல்லோரும் கிளம்பிப் போகும்போது,"வைகுண்டத்துக்கு வருகிறாயா..? என்று ராமன் ஆஞ்சநேயனிடம் கேட்டானாம்.
"அங்கே இராமாயண பிரவசனம் உண்டா"? என்று கேட்டாராம் ஆஞ்சநேயர்.
"அங்கே சுவாமியாக பகவான் உட்கார்ந்திருப்பான் - மகாவிஷ்ணு - அதைத்தான் சேவிக்க வேண்டும்" என்றார்கள்.
அந்த எம்பெருமான் ராமனைத்தவிர மற்றொன்றை நினையாத, அந்த வடிவகைத் தவிர மற்றொன்றைப் பார்க்காத உத்தமன் ஆஞ்சநேயன்!
இந்த இஷ்ட தெய்வ ஆராதனையின் மேன்மை குறித்து வேதமே சொல்கிறது.

ரொம்ப ரொம்ப பூர்வ பரம்பரையில் இருந்து வரக்கூடிய விக்ரஹ ஆராதனை ஒரு கிரஹத்திலே நடக்கிறது.  பூஜை பண்ணுகிறார் ஒருத்தர்.  ஆனால் அங்கே ஏகமாய் தாரித்ரியம்!  சொல்லத்தரமன்று அந்த ஏழ்மை.  ஒவ்வொரு நாளும் நடப்பதே ரொம்ப சிரமமாக இருக்கிறது.
ஒரு நாள் அந்த கிரஹத்துக்கு ஒருத்தர் வந்தார்.  "இந்த விக்ரஹம் உங்களுக்கு எதற்கு.. இதை எடுத்து வீதியிலே போட்டுவிடும்.  இதைப் பூஜை பண்ணுவதால்தான் உங்களுக்கு தாரித்ரியம் வடியாமல் இருக்கிறது. நான் ஒரு விக்ரஹம் கொடுக்கிறேன்.  அதை வைத்துக் கொண்டு பூஜை பண்ணுங்கள்" என்று பழைய விக்ரங்களை தூர எடுத்து வைக்கச் சொல்லிவிட்டார்.  ஒரு புது விக்ரஹத்தையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்!
புதிதாக வந்த மூர்த்தியை வைத்துக் கொண்டு பூஜை பண்ண ஆரம்பித்தார் அந்த கிரஹஸ்தர்.  இன்னும் தாரித்ரியம் அதிகமாய்ப் போய்விட்டதாம்!
"ஏன் அப்படி ஆயிற்று"? என்று கதை கேட்கிற நமக்கு ஒரு சந்தேகம் உதிக்கிறது.
புதிதாக வந்திருக்கும் தெய்வம் ஒரு நல்ல பயனைக் கொடுக்கக் கூடாதோ..?  அது கொடுக்க மாட்டேன் என்கிறது!  ஏன் கொடுக்கவில்லை..?
"தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக வந்த மூர்த்திக்கே இந்த கிரஹத்தில் கதியில்லை; தூக்கித் தெருவிலே போட்டுவிட்டான்!  நாளைக்கு நம்மையும் தூக்கிபோடும்படி  யாராவது சொன்னால், போட்டுத் தானே விடுவான்!  ஆகையினால் இவனுக்கு ஸ்திரமான ஒரு பிரக்ஞை இல்லை - தன்னுடைய பாப விமோசனத்துக்காக சிரமப்படுகிறோம் என்கிற ஞானமில்லை. அதனால் தான் நம்முடைய சக்தியை இவன் அளவிடுகிறான்.  தெய்வத்துக்கு சக்தி இல்லை என்று அவன் நினைக்கலாமா".. - புதிய தெய்வம் இப்படி எண்ணமிட்டே முடிவுக்கு வந்ததாம்!

ஹ்ருதயத்திலே ராமனைத் தவிர வேறு யாரையும் நினையாத  ஆஞ்சநேயனுக்கு, மஹாலக்ஷ்மியின் அனுக்கிரஹம் ஏற்பட்டது.  அதே மாதிரி ராமனுடைய அனுக்கிரஹமும் ஏற்பட்டது.
ஆனால், ராமனையும் சீதையையும் பிரித்தவளான சூர்ப்பனகை, மூக்கறுபட்டு காதறுபட்டு பங்கப்பட்டுப் போனாள்.  ராவணனோ,  சீதையைப் பற்றினான்;  கிளையோடு மாண்டான்!
இரண்டு பேரையும் - ராமன், சீதை -  வணங்கினான் விபீஷணன்.  ராஜ்யத்தோடும் சகல போக்யத்தொடும் விளங்கினான்.
ஆகையால், ஒரு நாளும் இந்தத் தம்பதிகளை நாம் பிரிக்கக்கூடாது.
இஞ்சிமேட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர் சொல்லுவார்:
நமக்கு ஆசார்யன், அவருக்கு ஆசார்யன், அவருக்கு ஆசார்யன் என்று  பரம்பரையை நாம் வகுத்துக்கொண்டே போனோமானால் லக்ஷ்மியோடு கூடிய நாராயணனின் திருவடிகளில் போய்  அது முடியும்.  அவனைத்தான் நாம் பற்ற வேண்டும் என்கிற தர்மத்தை வால்மீகி ராமாயணம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இரட்டை என்றாலே ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது.  மந்த்ரத்திலே கூட இரட்டை மந்த்ரம் என்று ஒன்று உண்டு. த்வய மந்த்ரம் என்று பெயர்.  
பகவான் வைகுண்டத்திலேயே அதை உபதேசம் பண்ணினார் - மகாலக்ஷ்மிக்கே உபதேசம் பண்ணினார்.  
மஹாலக்ஷ்மி அதை விஸ்வக்சேனருக்கு உபதேசம் பண்ணினார்.
விஸ்வக்சேனர்தான் பூலோகத்தில் நம்மாழ்வாராய்ப் பிறந்தார்.  அவர் திருவாய்மொழியிலே இந்த த்வய மந்த்ரத்தை பூரணமாய் விவரித்தார். 
ராமாயணம் மொத்தமும் த்வய விவரம்தான்.  இது சீதையினுடைய சரித்திரம் - உயர்ந்த சரித்திரம் - என்று வால்மீகி கொண்டாடியிருக்கிறார்.  அதிலே பகவானுக்குக் கூட கொஞ்சம் வருத்தம் என்று வேடிக்கையாய்ச் சொல்வார்கள்.
"மரமே கண்டாயா ? மட்டையே கண்டாயா
ஹா சீதே! ஹே  சீதே! என்று தேடி அலைந்தோமே - நாமல்லவா அலைந்தோம்.  இதை சீதை சரித்திரம் என்று வால்மீகி எழுதிவிட்டுப் போய்விட்டாரே!  எதனால் இருக்கும்" என்று யோசனை பண்ணினானாம் பகவான்.  

நாமும் யோசிப்போம் - அடுத்த அத்தியாயம் வரைக்கும்.(தொடரும்) ...

aapadaam apahartaaram daataaram sarvasaMpadaam |
lokaabhiraamam shriiraamam bhuuyo bhuuyo namaamyaham ||
"I bow again and again to Sri Rama Who removes (all) obstacles, grants all wealth and pleases all."

Tuesday, March 4, 2014

PART - 1, Chapter - 36

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 36

ர்ம சப்தத்தினாலே சொல்லப்படக்கூடியவன் பரமாத்மா.  அவன் நடத்திக் காட்டிதெல்லாம் தர்மம் தான். மனிதனாகப் பிறந்த நாம் பின்பற்ற வேண்டிய கடமை என்ன என்பதை பரமாத்மா ராமாவதாரத்திலே காட்டியருளினான்.
ஸ்ரீமத் பாகவதத்தில், சுகப்ரும்ம மகரிஷி இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.    பரீட்சித்தைப் பார்த்து அவர் இதைப் பேசியிருக்கிறார்.
மனிதனாக ராமன் பிறந்தான் என்று கதை கேட்கும்போது, ராட்சஸ வதைக்காகத்தான் அப்படி அவதரித்தான்; ராவணனை வதைக்கவே அந்த அவதாரம் என்று எண்ணிக்கொள்கிறோம்.
அது மாத்திரமே காரணம் இல்லை.  ராட்சஸ வதை என்பது ஒரு வியாம்.  முக்கிய குறிக்கோள் என்னவென்றால்:
மனிதர்களை காப்பதற்காக!  மனிதருடைய கடமை என்ன?  ஒரு தந்தையாக இருக்கக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும்?  தாயாராய் இருக்கக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும்?  புத்ரனாய்  இருக்கக்கூடியவனின் கடமை என்ன?  அதிலே ஜேஷ்டபுத்திரனின் கடமை என்ன? இளையவர்களாக இருக்கக்கூடியவர்களின் கடமை என்ன? பந்து மித்திரர்களிடத்திலே நாம் எப்படி இருக்க வேண்டும்?  விரோதிகளிடத்திலே எப்படிப் பழக வேண்டும்?  இந்த பூம்னியில் நாம் எப்படி வாழ வேண்டும்?  சம தர்மம் என்றால் என்னது?... இப்படி எல்லாவற்றையும்  காட்டி, நாம் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தோமா என்று யோசிக்க வைக்கிறான்.

திருமலையிலே,  பெரிய திருமலை நம்பிகள் என்ற ஆசார்யர் எழுந்தருளியிருந்தார்.  ராமானுஜருடைய சொந்த மாமா அவர்.  பஞ்சாசார்ய பதாச்ராயர் என்று இராமானுஜருக்குப் பெயர்.  ஐந்து ஆசார்யர்களை அணுகி ஒவ்வொருத்தரிடம் ஒவ்வொரு வித்தையை அப்யசித்தார்.
அந்தக் காலத்தில் வித்வான்கள் மிகவும் சிரமப் பட்டு அப்யாசம் செய்தார்கள்.  இந்த காலத்தில் அவ்வளவு சிரமம் இல்லை.   ஏனென்றால், எங்கும் கல்விக்கூடங்கள் நிறைந்திருக்கின்றன.  படிக்க வாய்ப்பு உள்ளது.  முன் காலத்தில் அப்படி இல்லையே...!
அஹோபில மடத்தில் இஞ்சிமேட்டு ஸ்ரீ அழகிய சிங்கர், காசி வரை நடந்தே சென்று தர்க்கம் பயின்று வந்தார்!  எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் பாருங்கள்!  அந்த சிரமம் பிறர் படக்கூடாது என்றுதான் மதுராந்தகத்தில் பாடசாலையை நிறுவப் பண்ணி தர்க்கம் சொல்லிக் கொடுக்க வைத்தார்.
ராமானுஜருக்குத் திரும்பி வருவோம்.. மாமாவான பெரிய திருமலை நம்பியிடத்திலே ராமாயணம் கேட்கணும் என்று ஆசைப்பட்டாரல்லவா?  திருமலை ஏறிப் பொய் அவரைப் பிரார்த்தித்தார்.
பெரிய திருமலை நம்பிகள் உடனே பிடிகொடுக்கவில்லை.  இப்போ இல்லை, அப்புறமா வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்.  மீண்டும் அணுகியபோதும், அதே பதில்.  இப்படி 18 முறை அவரை அலைக்கழித்தார் நம்பிகள்.   கடைசியாக சரி இப்போது சொல்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
ராமனுஜரின் பொறுமையைப் பாருங்கள்! ஓரிருமுறை கேட்டு மறுத்தாலே, சரி ஊர் உலகத்தில் இவருக்கு மட்டும்தானா ராமாயணம் தெரியும்? என்று அலுத்துக் கொண்டு வேறு ஆசார்யரைத் தேடத் தோன்றும்.  ஆனால் ராமானுஜர் அப்படிச் செய்யவில்லை.  அந்த ஆசார்யாரிடத்திலேதான் கேட்கணும் என்று காத்திருந்தார்.
பெரியவர்களும்  பண்ணுவார்கள்.  சிந்தாமல் கொள்ளக்கூடிய கலமா, அதற்கு தரிக்கும் சக்தி இருக்கிறதா என்று பார்த்துத்தான் உபதேசம் பண்ணுவார்கள்.  குரங்கு கையில் பூமாலை கொடுப்பது போல் காரியம் செய்ய மாட்டார்கள்.
நல்ல தாகம் இருக்கலாம்.  அதற்காக மண்டை ட்டிலே தீர்த்தம் கொடுத்தால் குடிக்கப் பிடிக்குமா?  இல்லையே! பசுவின் பாலைக் கறந்து நாய்த் தோலிலே வைத்தால் பருகப் பிடிக்குமா..!  அப்படித்தான் கல்வியும்.  ஆசார்யர்கள் பாத்திரம் அறிந்துதான் புகட்டுவார்கள்.  நாற்சந்தியில் அவல் பொறியை அவிழ்த்து கொட்டியது போல் வித்யையை வீணடிக்க மாட்டார்கள்.
சாஸ்திரக்ர்கள் பேசும்போது, உத்தம சிஷ்யனின் குணம் என்ன என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். 
தைல புத்தி உடையவன் உத்தம சிஷ்யன் என்று சொல்வார்கள்.
ஒரு பாத்திரத்தில் தீர்த்தத்தை வைத்துக் கொண்டு மேலே எண்ணெயை  விட்டோமானால்,தீர்த்தத்தின் மேலே அந்த எண்ணெய் அப்படியே பரவும்.  அந்த மாதிரி, கேட்ட விஷயத்தை நன்றாகப் புரிந்து கொண்டு, இதரர்களுக்கும் அதைச் சொல்லித் தெளிவிப்பான் அவன்.  அதைத்தான் தைல (ண்ணெய்) புத்தி என்பது.
இன்னொரு வகை உண்டு.  கிபுத்தி.  நெய்யை வழித்து ஒரு பாத்திரத்தில் ஜலத்தில் போட்டோமானால்,அந்த நெய் அப்படியே மிதக்கும்!  அந்த மாதிரி ஆசார்யர் இடத்திலே கேட்ட விஷயத்தைத் தான் மட்டும் அனுபவிப்பவர் இந்த கிரதபுத்திக்காரர்.  யாராவது கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியாது.  உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் ஓடும்.  ஆனால் இதரர்களுக்குச் சொல்லித் தெளிவைப் பிறப்பிக்கும் படியான சக்தி இராது. 
இன்னொரு புத்தி கம்பள புத்தி!  கீழே துப்பட்டி, ஜமக்காளம் எல்லாம் போட்டிருக்கிறது.  காலட்சேபம் முடிந்த பிறகு ஒருத்தர் அதை எடுத்து மடித்து வைப்பார் அல்லவா?  அவர் வெறுமனே மதிக்காமல், தும்பு தூசி போகிதுக்காக ஒரு உதறு உதறி மடிப்பார். கம்பள புத்திக்காரர் அப்படித்தான் - ஆசார்யரிடம் வரும்போது ஒன்றும் தெரியாமல் வருவார்.  திரும்பிப் போகும் போதும் உதறிய துப்பட்டி போல், ஒன்றும் ஒட்டிக் கொள்ளாமல் போய் விடுவார்.  
ஒரு விஷயமும் புத்தியில் ஏறாமல் இருப்பவரும் உண்டு - களிமண் புத்திக்காரர்!
இந்த நால்வகையினருள் தைல புத்திக்காரர்களைக் கண்டால் ஆசார்யர்களுக்கு ரொம்பப் ப்ரியம். கன்றுக் குட்டியினிடத்திலே பசுவானது எப்படி வாத்ல்யத்தோடு அன்பைப் பொழிகிறதோ அந்த மாதிரி கங்கா பிரவாகமாகப் பொழிவார்கள்.
18 முறை ராமானுஜரை சோதித்த ஆசார்யர் அவர் பொறுமையைக் கண்டு அப்படித்தான் பொழிந்தார்.
இவ்வளவு பொறுமை இருந்ததால்தான் ராமாயணம் புரியும்!  திடீரென்று கேட்டுக் கொள்கிற விஷயமில்லை அது.
18 முறையும் பொறுமை காத்த ராமானுஜருக்கு 18 வித அர்த்தங்களை ராமாயத்துக்குச் சொன்னார் பெரிய திருமலை நம்பிகள்!

ப்படிப்பட்ட ராமாயணத்தில் தன்னைத் தெளிவாக பரமாத்மா காட்டிக் கொடுத்திருக்கிறான்.  பரப்ரும்மமான தன்னை ஆசரிக்கும்படி சொல்கிறான்.  தான் வெறும் மனிதனல்ல.. மனித வேஷத்தில் வந்திருப்பவன் என்று உணர்த்தினான்.
அவன் மனித வேம் போட்டிருந்ததால் அதற்கேற்ப நடிக்க வேண்டியதைப் போயிற்று!  தான் பரமாத்மா என்பது அவனுக்குத் தெரியாமல் போய்  விடுமா?  ஒரு நாடகத்தில் ஒரு ஆண், பெண் வேடம் போட்டுக் கொள்கிறான் - பெண் போன்ற நடை, உடை, பாவனை அவனுக்கு... அதனால், தான் ஆண் என்பது தெரியாமல் போய் விடுமா?  அந்த மாதிரி பரமாத்மாவும் உயர்ந்த ரீதியில், தான் பரமாத்மா என்பது தெரிந்தே மனித ரூபம் தரித்தான்.
சரி, இந்தப் பரமாத்மாவை அடைவதற்கு என்ன வழி? என்று கேட்டால், அதற்கும் அவன் செயலிலேயே பதில் கிடைக்கிறது.
பரமாத்மா எடுத்துக் கொண்ட காரியம் என்ன..? 
துஷ்ட: சந்துஷ்டியை - மகிழ்ச்சியைத் தந்த காரியம் - ஹிதம் (மனதுக்கு இதம்) ஏற்படுத்திய காரியம் - அந்த காரியம்..? 
சரணாகத ரக்ஷணம் என்னும் காரியம்!

ராமானுஜ நூற்றந்தாதி என்று ஒரு நூல்.  உயர்ந்த பிரபன்ன காயத்ரி என்று அதற்குப் பெயர்.  திருவரங்கத்த முதனார் என்கிற ஆசார்யர்.  ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே இதை எழுதி, அவர் எதிரிலேயே வாசித்துக் காண்பித்தார்.  அவ்வளவு உயர்ந்தது!
ப்ரபன்னர்கள் நித்தியம் இதை ஒரு தடவை சொல்ல வேண்டும் என்று பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள்.  அந்த நூலிலே, "படிகொண்ட சீர்த்தி ராமாயமென்னும் பக்தி வெள்ளம்" என்று குறிப்பிட்டிருக்கிறது.
பக்திப் பிரவாகம் ராமாயணம்!  எங்கு தொட்டாலும் பக்தி இருக்கிறது:  எங்கு தொட்டாலும் சரணாகதி இருக்கிறது.
அதனால்தான் பகவானே பக்தி, சரணாகதியின் மேன்மைகளைப் பேசினான்.  பவித்ரம் இதம் உத்தமம் என்றான் பகவத் கீதையில் பரமாத்மா!
"என்னுடைய திருவடியில் கைங்கர்யம் பண்ணனும் என்கிற எண்ணம் யாருக்கு இருக்கிறதோ... அவர்கள் என்னை அடையலாம்.  என்னை அடைய இரண்டு வழிகள் உண்டு.
முதல் வழி: பக்தி மார்க்கம் - இது ரொம்ப உயர்ந்தது.  உத்தமமானது.  பவித்ரமானது.  அப்படிப்பட்ட பக்தி யோகத்தால் நான் அடையத் தகுந்தவன்.
அப்படியில்லையென்றால், பிரப்த்யாவா - சரணாகதியினாலே அடையத் தகுந்தவன் நான்.  இவை தவிர மற்றதனால் என்னை அடைய முடியாது" என்று பகவானே பேசியிருக்கிறான்.
ஆகையினாலே, நம்மைப்போல நோற்ற நோன்பில்லாதவர்கள், சாமான்யர்களாய்  இருக்கக்கூடியவர்களுக்காகவே பரமாத்மா சொன்னான்:
"என் திருவடியைப் பற்று... பற்றினால், பக்தி யோகம் கொடுக்கக்கூடிய சந்தோஷத்தை உனக்கு நான் கொடுப்பேன்.."
பக்தி, சரணாகதி தவிர, ஆராய்ந்து பார்த்தால் இன்னொன்றும் இருக்கிறது ராமாயணத்தில்.
அதுதான் புருஷகாரம்.  
புருஷகாரம் என்றால்..?  
சிபாரிசு!  
மஹாலக்ஷ்மி நமக்காக பகவானிடத்திலே பரிந்து பேசுகிறாள்!

(தொடரும்)

Saturday, March 1, 2014

PART - 1, Chapter - 35

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் - 35

ராம: என்றால், எல்லோரையும் ரமிக்கப் பண்ணுகிறவன் என்று பொருள்.  யோகிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகிறவன் ஸ்ரீராமன்!
குழந்தை ராமன் படுத்திருக்கும் போது, வசிஷ்டர் கிட்டே போனார் - குழந்தையைப் பார்ப்பதற்கு... அந்தக் குழந்தையைப் பார்த்தபோது வசிஷ்டருடைய ஹ்ருதயத்தையே அது கொள்ளை கொண்டுவிட்டது. 
இந்த மாதிரி குழந்தை ஒன்று நமக்கு இல்லையே.. என்று தோன்றிவிட்டதாம் முனிவருக்கு!
தோன்றிய கணத்திலேயே அந்த எண்ணத்தின் தவறும் அவருக்குப் புரிந்ததாம். நமக்கே இப்படி ஒரு எண்ணம்   வரலாமா? எவ்வளவு தப்பான எண்ணம்.
உடனே தப்பு தன்னுடையதில்லை என்று உணர்ந்து விட்டார் அவர்.  இவன் இவ்வளவு அழகாய் இருக்கிறானே, அதனாலல்லவா நமக்கு அப்படியொரு எண்ணம் உண்டாயிற்று என்று பழியை அவன் மேலேயே போட்டுவிட்டார்.
அகலிகை வெண்பா என்றொரு கிரந்தம் இருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்.
"நல்லார் உள்ளத்தும், நல்லார் அல்லாதார் உளத்தும் பொல்லாங்கு புகுவது இயல்பே.. 
நல்லார், புகுந்தவுடன் விட்டிருவார்;  அல்லாதார் மிகுந்துரைய விட்டிருவர் வேட்டு"...
நல்லோருக்குக் கூட தீய எண்ணம் வருமாம்!  ஆனால், அவர்கள் அதை உடனே விட்டு விடுவார்கள்.  தீயவர்களோ அந்த எண்ணத்தை மிகுந்துரைய விட்டு விடுவர்!
வசிஷ்டருக்கும் பொருந்தாத எண்ணம் ஒன்று தோன்றியது.  ஆனால் உடனே அதைக் கைவிட்டார்.  ராமனுடைய சௌந்தர்யமே தன்னை அவ்வாறு பேச வைத்தது என்று உணர்ந்து கொண்டார்.
அலகிலா விளையாட்டுடையவன் பரமாத்மா! நம்மையெல்லாம் ஒரு பந்தாக வைத்துக் கொண்டு அவன் விளையாடுகிறான்! 
வசிஷ்டரோடும் விளையாடியிருக்கிறான்!
குழந்தையைப் பார்த்த வசிஷ்டர் ராம: என்கிற பரம மங்களமான பெயரை அதற்குச் சூட்டினார். எல்லா பலன்களையும் தரவல்லது அந்த நாமம்.
காச்யாம் மரணாந் முக்தி  (காசியில் மரணமுற்றால் முக்தி நிலை அடையலாம்)  என்பார்கள். எதனால் முக்தி..? காசியில் உரையும்படியான விச்வேச்வரன், அங்கு மரிப்பவர்களின் செவியிலே ராம நாமாவைச் சொல்வதனாலே..! 

பரமமான, உயர்ந்த ப்ரும்ம ரூபமான ராம நாமாவை பஜிக்கிறேன் பஜிக்கிறேன் என்று நான்கு தடவை ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்கிறார். இதனாலேயே அந்த நாமத்தின் ஏற்றம் நமக்குத் தெரிகிறது.   நம்முடைய பிறப்பின் வித்தை அது பொசுக்கிவிடும். எல்லா சொத்துக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும்.  யம தூதர்களை விரட்டி அடிக்கும்.  எப்போது விரட்டியடிக்கும்..?
"ராம ராமேதி:" என்று கர்ஜனம் செய்யும்போது... அந்தச் சமயத்தில் யமதூதர்கள் கிட்டே வரமுடியுமா!
யமன் யம தூதர்களைக் கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னானாம்.  "இந்த ராமநாமத்தைச் சொல்லக்கூடிய விஷ்ணுபக்தர்களிடத்திலே போகாதீர்கள்.  ஏனென்றால், நாமெல்லாம் அதைச் சொல்லாதவர்களுக்குத்தான் அதிகாரிகளேயொழிய அதைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கிங்கரர்கள்"!
இந்த விஷயத்தை யமன் ஏன் ரகசியமாய்க் காதிலே சொல்ல வேணும்?  இதை உரக்கச் சொல்வது கூட அபசாரம் என்பதால்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி விஷ்ணுசித்தர் வியாக்யானம் பண்ணியிருக்கிறார்.  
அவர் எழுதுகிறார்:  "ஒரு ராஜகுமாரத்தி - இளவரசி... "நான் இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்.." என்று யாராவது உரக்கச் சொல்ல முடியுமா..?  அந்த மாதிரி தான், விஷ்ணு பக்தாளிடம் போகாதே என்று சொல்வது கூட - உரக்கச் சொல்வது கூட அபசாரமாகும்.
இதுதான் பகவான் நாமாவின் உயர்த்தி.  "ராம" என்ற இரண்டு எழுத்துக்கள் எல்லா நலனையும் உண்டாக்கக் கூடியது.  எல்லோரையும் ஒய்வுரச் செய்யக்கூடியவன் பரமாத்மா.  எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவன். அவன் ஒருத்தன் இருந்துவிட்டால் எல்லோருமே அடங்கி விடுவார்கள்.  அதனால்தான் சுவாமி தேசிகன், அந்த பகவானை "ஜெய ஜெய் மகா வீர" என்று கொண்டாடினார்.

ன்னொரு விஷேஸத் திருநாமமும் ராமனுக்கு உண்டு.
தர்ம: 
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்.
தர்மம் எது என்று பார்த்தோமானால், அதற்குப் பல பொருள் சொன்னார்கள்.  ஆனால், தர்மம் என்கிற சமஸ்கருத சொல்லின் பொருளை அப்படியே அடக்கிய இன்னொரு சொல் அகப்படவில்லை.  எந்த மொழியிலும் அகப்படவில்லை!
ஏனென்று கேட்டால், தர்மம் என்கிற சொல்லுக்கு பகவான் என்று பொருள்.  தர்மம் என்கிற சொல்லுக்கு வேதம் என்று பொருள்.  தர்மம் என்கிற சொல்லுக்கு வேதோச்சாரணம் என்றும் பொருள்.  அவரவர் நிலைக்கு ஏற்ப சொல் பிரயோகமாகிறது.
அந்தணர்களின் தர்மம் எது என்று கேட்கிறோம்.  அப்படியென்றால் என்ன..?  பிராமணர்களுடைய தெய்வம் எது.. என்று கேட்பதாகவா அர்த்தம்? கிடையாது!  பிராமண தர்மம் என்று ஆறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. வேதத்தைக் கசடற கற்க வேண்டும் என்பது ஒன்று. இது அவ்வளவு சுலபமான காரியமா?  கிட்டே நெருங்கி உட்கார்ந்து ஆசார்யர் சொல்லிக் கொடுக்கும்போது கஷ்டப்பட்டு கிரஹித்துக் கொள்ள வேண்டும்.  எத்தனையோ கடினமான விஷயங்கள் வேதத்திலே உண்டு.
ஒருத்தர் வித்யாரண்ய சுவாமியிடம் போய்,ருத்ர தாண்டவத்தைக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார். அதற்கு அவர் சொல்கிறார்: "ருத்ர தாண்டவத்தைக் காட்டுவதென்ன?  பார்ப்பது என்ன?  நீர் அத்யயனம் பண்ணியவர்தானே?  வேதத்திலே கனம் சொன்னாலே அந்த ஒலிகளிலே ருத்ர தாண்டவத்தைப் பார்க்கலாமே" என்றார் சுவாமிகள்.
"வேத மந்திரங்களிலே ருத்ர தாண்டவத்தைப் பார்ப்பதோடு நந்திகேசுவரரின் மிருதங்க வாத்திய ஒலியையும் கேட்கலாம்" என்றார் வியாரண்யர்.
அந்த வேதத்திலே இல்லாதது என்பதே கிடையாது.
நீர்  இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.  இந்திரனை ஸ்துதிக்க வேண்டும்.  அவன்தான் மழைக்கு அதிகாரி.  வருணனை ஏவுவான்.  மழையைப் பொழிவிக்கச் செய்வான்.
அதற்காக ஓதப்படும் மந்திரத்தின் ஒலியைக் கேட்டால், மழைகாலத்தில் நிரம்பிய நீர் நிலைகளில் தவளைகள் ஓசை எழுப்புவது போலவே இருக்கும்!  மந்திரத்தின் த்வனியைக் கொண்டே, "ஓஹோ! இவர்களுக்கு நீர் வேண்டும் போலிருக்கிறது, நீர் நிலைகள் மொத்தத்தையும் நிறைத்து விடுவோம்" என்று தேவதைகள் எண்ணமிடுவார்களாம்! இப்படி ஒலியின் பங்கு முக்கியமாய் இருப்பதால் உச்சாரணமும் மிகவும் முக்கியம்.  உச்சாரணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு சரித்திரம் வேதத்திலேயே வருகிறது.

ந்ருமேதர் என்று ஒருத்தர். பருச்சேபர் என்று  இன்னொருத்தர். இரண்டு பேரும் குருகுலவாசம் செய்து ஏக காலத்தில் வேதம் பயின்றார்கள்.
சமயத்திலே அக்னி வளர்த்து, அக்னியை உபாசிக்கும்படியான வித்யை, மந்திரம் கற்றார்கள். 
15 ஆண்டுகள் அதைக் கற்றார்கள்.  15, 17, 21 என்று கூட்டம் கூட்டமாக மந்த்ரங்கள் இருக்கும்.  எல்லாவற்றையும் கற்றார்கள்.  ஆசார்யரும் ஓர வஞ்சனை இல்லாமல், இரண்டு பேருக்கும் சமமாகக் கற்று கொடுத்தார்.
குரு தட்சிணையைச் சமர்ப்பித்து விட்டு இருவருமே புறப்படும் காலம் வந்தது.  காட்டின் வழியே நடந்து போனார்கள்.  காட்டைக் கடந்தால் இவர் இவர் ஊருக்கும், அவர் அவர் ஊருக்கும் பிரிந்து போக வேண்டும்.  பிரிய வேண்டிய கட்டம்!  15 ஆண்டுகள் ஒரு குருகுலத்திலே இருந்தவர்களுக்குப் பிரிவு ரொம்ப வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் நாம் இரண்டு பேரும் பரீட்சை பண்ணிப் பார்ப்போம் என்று தீர்மானம் செய்தார்கள். 
இந்த கால பரீட்சைக்கும் அந்தக் கால பரீட்சைக்கும்  வித்தியாசமுண்டு!  இந்தக் காலத்தில், வேதத்தைச் சரியாக சொல்கிறானா?  உச்சாரணம், உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.   அந்தக் காலத்திலோ, வித்யை பரீட்சிப்பது என்றால் தேவதையையே எதிரில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்!
இருவரும் நடந்து வந்த காட்டில் மரங்கள் முறிந்து கீழே விழுந்து விட்டன.  ஒரு கட்டை, ஜலத்திலே நனைந்து கிடந்தது.  "இந்த கட்டையில் நீரும், நானும் கற்ற மந்திரத்தைப் பரீட்சிப்போம்" என்று முடிவு செய்து கொண்டார்கள்.  "இதிலே அக்னியை உண்டு பண்ணி விடுவோம்".
பண்ணலாமா..?
ஆஹா, பண்ணலாம்!
இரண்டு பேரும் ஒன்றாக கைக் கூப்பி மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம் யோசனை வந்தது.
இப்படி இரண்டு பேரும் ஒன்றாக சொன்னால் யார் சொன்னதற்கு பலன் என்று கண்டுபிடிக்க முடியாது.  எனவே நீர் முன்னே சொல்லும், நான் அப்புறமாக தனித்துச் சொல்கிறேன் என்று முடிவாயிற்று.
தனித்துச் சொல்வதில் ஒரு குணமுண்டு!  எங்கள் ஊர் முக்கூரில் ஒரு சீமந்தம் பண்ணி வைத்துக் கொண்டிருந்தார் என் தாத்தா. அப்போது அஹோபில மடத்த் 44வது பீடாதிபதியானவர் பூர்வாசிரமவாசியாய் அங்கு இருந்தார்.
அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் வேத வித்துக்கள் வந்திருந்தார்கள்.  அவர்களுள் ஒருவராக மந்த்ரமே தெரியாத ஒருத்தர்!  மற்றவர்கள் கூட்டமாக வேதம் சொன்னபோது இவர் மட்டும் ஜிகுபுகு ஜிகுபுகு என்று சொல்லிக் கொண்டிருந்தார்!  கடைசியில், ஹரி ஓம் என்று முடித்த பிறகும் ஜிகுபுகு ஜிகுபுகு என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். சபையில் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் சிரித்து விட்டார்கள்.
பீடாதிபதி சுவாமி மட்டும் சிரிக்கவில்லை.  மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார். "இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை.  15 வருஷம் அத்யயனம்  பண்ணியவர்கள் எந்த இடத்தில் என்ன மந்திரம் சொல்வதென்று உணர்ந்து சொல்வதில்   ஆச்சரியமில்லை. இப்படி ஜிகுபுகு ஜிகுபுகு சொல்வதுதான் கஷ்டம். ஒரு இடத்திலே, உட்கார்ந்து இரண்டு மணி நேரம் சொல்லியிருக்கிறாரே!  ஆகையினாலே, மற்றவர்களுக்கெல்லாம் என்ன சம்பாவனையோ அதை விட இரண்டு மடங்காக சம்பாவனை வாங்கிக் கொடுத்து விட்டார்!
கொடுத்து விட்டு, அவரைத் தனியே அழைத்துப் போய்ச் சொன்னார்.  "இப்படி ஒவ்வொரு இடத்துக்கும் நான் வந்து சம்பாவனை வாங்கித்தர முடியுமா?.  அதனால் ஜாக்கிரதையாய் இரும்.  உரிய மந்திரங்களை நெட்டுருவு பண்ணி வையும்".
பிற்பாடு,அவர் பீடதிபதியானபோது, அவரை சேவிக்க இந்த ஜிகுபுகு ஜிகுபுகுக்காரர் போயிருந்தார்.  "உதக சாந்தி வந்து விட்டதோல்லியோ!  இப்போது நான் சந்நியா ஆசிரமத்திலே இருப்பதனாலே முன் போல் வந்து காப்பற்ற முடியாதே" என்று வேடிக்கையாகச் சொன்னார்!  

தனால் என்ன தெரிகிறது?  பல பேர் உரக்கச் சொல்லும்போது ஒருத்தர் தனியாகச் சொல்லும் மந்திரம் காதில் விழாது!  அதனால்தான் காட்டில் இரு நண்பர்களும் தனித்தனியே மந்திர சக்தியைச் சோதிக்க முடிவு செய்தார்கள்.
முதலில் ந்ருமேதர் கைகூப்பி மந்திரத்தை ஓதினார்.  கட்டையில் இருந்து வெறும் புகைதான் வந்தது!
பருச்சேபர் ஓங்கி, கச்சிதமாக மந்திரத்தை உச்சாரணம் பண்ணி அக்னியை உண்டு பண்ணிவிட்டார்.
"ரிஷி" என்று பருச்சேரை அப்போது அழைத்தார் ந்ருமேதர்.  ரிஷி என்கிற வார்த்தையே அப்போதுதான் உண்டானது.  
மந்திரத்தை வாயால் சொன்னால் போதாது.  அதன் உள்ளீடான தேவதையை மனத்தால் நினைக்க வேண்டும். மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனை முதலில் ஆராதிக்க வேண்டும் - இவ்வாறு, மந்திரத்தினிடத்திலும், அதை உபதேசித்த ஆசார்யனிடத்திலும், தேவதையிடத்திலும் சமமான பக்தி யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் மந்திரம் சித்திக்கும்.  அப்பேர்ப்பட்ட சித்தி பெற்றவர்கள் மந்திரம் சொல்லி ஆசீர்வாதம் பண்ணிவிட்டால் அந்த ஆசீர்வாதத்துக்கு மறுப்பு உண்டோ!

வ்வாறு வேதோச்சாரணம் என்பதிலேயே பெரிய தபஸ் இருக்கிறது!  இந்த வேதம் தும் காரியத்தை அத்தனை தர்மம் என்று சொல்வது.
தர்மம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி ஆரம்பத்தில் வந்தது.  இவ்வாறு, ஆற்ற வேண்டிய நியமங்களை, கடமைகளை அர்ப்பணத்துடன் ஆற்றுவது தர்மம் என்பது பொருள்.
எல்லாவற்றுக்கும் மேலான தர்மம் என்ன என்று கேட்டால் "பரமாத்மாதான்"!
தர்மத்துக்கே கை, கால் முளைத்து பூமியில் சஞ்சாரம் பண்ணினால், அதுதான் ராமன் என்று விவரித்தார்கள். 

அப்படிப்பட்ட சக்ரவர்த்தி திருமகனுடைய பரிபூர்ண அனுக்ரஹம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

(தொடரும்)