Wednesday, December 18, 2013

PART -1, Chapter - 29

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 29

விச்வம் என்கிற சப்தத்தினால் பரசுராமர்  சொல்லப்படுகிறார்.  தசாவதாரத்திலே வரக்கூடிய இவரை "பார்கவ ராமர்"  அழைப்பது உண்டு. சாமான்யரால் பார்க்க முடியாதவர்.  பகவதவதாரத்திலே எத்தனையோ அவதார வகைகள் உண்டு.  சாஷாத் அவதாரம், அனுப்ரவேசாவதாரம், ஆவேசாவதாரம் என்று இப்படிப் பல சாஷாத் அவதாரமென்றால், ராமர், கிருஷ்ணர், நரசிம்ஹர் என்று பிரத்தியட்சமாய்ப் பார்க்கப்பட்ட அவதாரங்கள்.   அனுப்ரவேசாவதாரம் என்பது இன்னொரு உருவிலே பகவான் உட்புகுந்து வந்த அவதாரம்.  வியாசாவதாரம் என்பது அனுப்ரவேசாவதாரம்.  இதிலே ஆவேசவதார வகையைச் சேர்ந்தது பரசுராம அவதாரம்.
இந்த அவதாரத்திலே பகவான் ஆவேசித்து முழுமையாய் நின்று பிரகாசிக்கிறான்.  இந்த அவதாரம் ஏன் ஆவேசாவதாரமாகிறது என்று பார்த்தோமானால், நித்யம் ஜபம், ஹோமம் பண்ணக்கூடியவளாலே தான் அதைப் பார்க்க முடியுமே ஒழிய, சாமான்ய ஜனங்களால் பார்க்க முடியாது.  அத்தனை தேஜஸ் அந்த அவதாரத்துக்கு!

23 தலைமுறை சத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அழித்தவர் இந்த பரசுராமர்!   சத்ரிய இரத்தத்தினாலே தர்ப்பணம் பண்ணினவர்.  உலகம் எல்லாம் சஞ்சாரம் பண்ணினவர் என்பதாலே விச்வம் என்கிற சப்தத்தினால் இவர் அழைக்கப்படுகிறார்.

ரசுராமரை அடுத்தவன் சாஷாத் விச்வ ரூபியாய் விளங்கக்கூடிய விச்வ சப்தத்தினால் சொல்லக்கூடிய ராகவன்.  அது எப்படித் தெரிகிறது..?
விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே வருகிறது.  ராமாவதாரத்தைக் குறிக்கக்கூடிய முக்கியமான, விஷேசமான 16 திருநாமங்கள் வருகின்றன.  அதை நன்றாக நாம் கவனிக்க வேண்டும்.
புருஷ சூக்த ஹோமம் செய்ய வேண்டும் என்பதை விதிக்கின்ற ரிக் வேதத்தில் கூட 16 ரிக்குகள் - மந்திரங்கள் இருக்கின்றன.  16 என்பது அத்தனை சிறப்புடையது.  பகவான் ராமனும் 16 குணங்களை உடையவன்.
வால்மீகி ராமாயணத்திலே, வால்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கிறார் "16 குணங்களை உடைய ஒருவன் இருக்கிறானா என்ன?"  அதற்குத்தான் ஸ்ரீ ராமனை முன்னிறுத்தி பதில் சொல்கிறார் நாரதர்: "குணவான் அவன்: குணக்குன்று அவன்: குணக் கடல் அவன்"
குணவான் என்று சொல்லும்போது என்ன குணம் சொல்லப்படுகிறது?  ஒரு குணத்தைக் காட்டி இந்தக் குணம் உடையவனா" என்று வால்மீகி கேட்கவில்லை.  நாரதரும் அப்படி ஒரே ஒரு குணத்தைக் காட்டி பதில் சொல்லவில்லை.  அளவிட முடியாத குணங்களைச் சொன்னார்.
கோவிந்தராம் என்பவர் வியாக்யானத்திலே எழுதுகிறார்.  "சௌசீல்யம்" என்பதே பகவானின் குணம் - உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பாராமல் சகலரிடத்திலும் கலந்து நிற்றல், தன் உயர்த்தி பார்ப்பதில்லை பகவான்.
மகாதேசிக சுவாமிகள், பகவானை சௌசீல்ய சாகரம் என்று சொல்கிறார். அத்தனை காருண்யம் அவனுக்கு.  தயா சதகத்திலே சொல்கிறார், "ஏ, ஏழுமலை பெருமாளே,  காருண்யத்தை  அப்படியே நடுங்கிப் போகிறது" என்று.  அத்தனை கருணை.
குகனுடன் ஐவரானோம் என்று சொன்னானே.. வாத்சல்யத்தால் அவனை நனைத்தானே.  சுக்ரீவனுக்காக எதையும் செய்யத் தயாராய் இருந்தானே:  யாரோ ஒருத்தி அந்த சபரி. அவளுக்கு உயர்ந்த கதியைத் தந்தானே!  சபரி எவ்வளவு கெட்டிகாரி பாருங்கள்.  பிரபோ, உன் பார்வை என் மேல் பட்டது; அது ஒன்றே எனக்குப் போதும்.  உயர்ந்த கதியை  அடைந்து கொண்டிருக்கிறேன்;  மோக்ஷம் போய்க் கொண்டிருக்கிறேன் என்று போய் விட்டாள் அவள்.
அதனால் தான் சுவாமி தேசிகன், "சபரிக்கு மோக்ஷம் தந்தவனே.. என்று சொல்லாமல், சபரி மோக்ஷம் போவதற்கு சாட்சியாய் நின்றவனே" என்று சொன்னார். மோக்ஷத்துக்கு உண்டான காரியத்தை சபரி பண்ணி இருக்கிறாள்.  அதனாலே பகவான் அதை அவளுக்குக் கொடுக்க வேண்டியதே இல்லை.  அவன் வெறுமனே அவளைப் பார்த்தபடி நின்றானாம்.

ப்படி  சபரி, குசேலர் என்று சொல்லி பகவானுடைய சௌசீல்ய குணத்தை விஷேஸமாய்ச் சொல்லலாம்.
விச்வ மூர்த்தியாகிய பரமாத்மா, இப்படி சௌசீல்ய குணவானாக இஷ்வாகு வம்சத்திலே வந்தான்.
சஹஸ்ரநாம ரீதியாக அவனுக்குச் சொல்லப்படுகிற குணங்களைப் பார்ப்போம்.  
16  குணங்களிலே முதல் குணமாக சொல்லப்படுவது உத்தம குணம்.
அதாவது, பகவான் இராமபிரான் இருக்கிறானே.. அவன் எப்படிப்பட்டவன் என்று கேட்டால், ரூபத்திலும், ஸ்வரூபத்திலும், வாக்கு, நடை, உடை, பாவனை என்று எதை எடுத்துக் கொண்டாலும் உத்தமமானவன்.  அவன் வடிவ அழகை நாம் பார்க்கிறோம்.  எப்படி இருக்கிறது அந்த அழகு?
ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தாய்  என்கிறார் கம்பர்.
வாலி ராமனைப் பார்த்து சொல்வதாக வருவது  இந்த வாக்கு!
"அடடா! என்ன சுந்தர வடிவம்!  ஒரு சித்திரம் எழுதக்கூடியவன் இந்த அழகை  எழுத முடியுமா?  எத்தனை நாழி எழுதினாலும் கிழித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
வால்மீகியின் வர்ணனனையைப் பாருங்கள்!
சந்திரகாந்தாநனம் ராமம்! - சந்திரனைப் போன்று பிரகாசிக்கிறான்.   புருஷர்களுடைய திருஷ்டி சித்தத்தைக்  அபகரிக்கிறான்.   சமஸ்தத்தையும் துறந்தவர்கள் கூட அவன் தோளை   ஆலிங்கனம் செய்து கொள்ள   ஆசைப்படுகிறார்களாம்.
எழுத முடியாத அழகு, எழுத முடியும் என்கிறார் சுவாமி தேசிகன்.  அது எப்படி என்று கேட்டால், "நாமாக எழுத முடியாது.   ஆனால்,அந்த அழகை  அவனே எழுதினால் நம்மாலே அதை அழித்து விட முடியுமா என்ன"? என்று கேட்கிறார்.
விளையாட்டு என்கிற எழுதுகோலைக் கையிலே எடுத்துக் கொண்டு, காருண்யம் என்கிற மயிலே தோய்த்து, நம் ஹ்ருதயம் என்கிற பலகையிலே, அவனே தன் உருவத்தை எழுதினால் அதை அழிக்க முடியுமா?

டிவழகிலே உயர்ந்த பரமாத்மா, குணங்களிலும் உயர்ந்தவன்தான்.
தசரத சக்ரவர்த்தி ராமருக்குப் பட்டாபிஷேகம் பண்ண முடிவு செய்து பிரஜைகளை அழைத்துக் கேட்டாராம், "ஹே மகா ஜனங்களே!  என் குழந்தைக்குப் பட்டாபிஷேகம் பண்ணனும் என்று நினைக்கிறேன்.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று. "நாங்களும் அதையே விரும்புகிறோம்.   காரியத்தைச் செய்யுங்கள்" என்று அத்தனை ஜனங்களும் வேத மந்திரத்தைச் சொல்கிற மாதிரி உடனே பதில் சொன்னார்களாம்.  ஒருத்தருக்கொருத்தர் கலந்து ஆலோசிக்காமல் அத்தனை பேருமே எப்படி இவ்வாறு  சொன்னார்கள்?
"வெண்கொற்றக் குடை திருமுக மண்டலத்தை மறைக்க, யானை மீது பவனி வரும் அவனை நாங்கள் சேவிக்க இச்சை கொள்கிறோம்" என்றார்கள்.
அது மாத்திரமல்ல..."அறுபதாயிரம் வருஷம் பரிபாலனம் பண்ணின தள்ளாத கிழவர்;  இப்போதாவது உனக்கு இந்த எண்ணம் வந்ததே.. சீக்கிரம் இறங்கு" என்றார்களாம்.
இந்த வார்த்தைகள் தசரதனைச்  சுரீரென்று சுட்டதாம். "நான் என்ன தப்பு பண்ணினேன்?  என்னை இறங்கச் செய்வதில் ஏன் இத்தனை ஆவல்"? என்று கேட்டானாம்.
மக்கள் சொன்னார்கள்: "ஹே ராஜாவே!  தாங்கள் தவறாக எண்ணக் கூடாது.  தங்கள் ஆட்சியிலே குறை கண்டதாலே இதை நாங்கள் சொல்லவில்லை.  தங்கள் மகனிடத்திலே உள்ள குண நிறையைக் கண்டு சொன்ன வார்த்தைகள் இவை"
முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர், ராமாயணத்தில் இந்தக் கட்டத்துக்கு சிறப்பான ஓர் அர்த்தத்தைச் சொல்லுவார்:
"ந்ருப" என்ற பதத்தை "ராஜாவே" என்று விளியாக நான் மேலே சொன்னேன். சுவாமி தேசிகன் இந்த "ந்ருப" என்கிற பதத்தை "குணங்கள்" என்கிற சொல்லுக்கு அடை மொழியாக இடம் மாற்றிப் பொருள் சொல்லுவார்... "பஹவ; ந்ருப கல்யாண குணா:"  "அரசகுணங்கள் - அதாவது அரசனாக இருப்பதற்குரிய அத்தனை தகுதிகளும், கல்யாண குணங்களும் - உடையவன் ராமன்" என்று பொருள்.
சரி, பிரஜைகளின் பதிலைக் கேட்ட தசரதனுக்கு வருத்தம் போய் ஆனந்தம் ஏற்பட்டது.  எப்பேர்ப்பட்ட ஆனந்தம் அது என்று பாருங்கள்:
புத்ரகாமேஷ்டி யாகம் பண்ணி, குழந்தையைப் பெற்ற ஆனந்தம், பிற்காலத்தில் அவன் தாடகையை வதம் செய்தபோது விருத்தியடைந்த ஆனந்தம், சிவதனுசை முறித்து சீதா கல்யாணம் செய்து கொண்டதைப் பார்த்த போது விளைந்த ஏகமான ஆனந்தம், பரசுராமனை பங்கப்படுத்தியபோது ஏற்பட்ட கரையில்லா களிப்பு.  அத்தனை ஆனந்தத்தையும் தூக்கி வேறுபுறம் தள்ளி விட்டது இந்த ஆனந்தம்!  இந்த ஆனந்தத்துக்குச் சமானமேயில்லை.
ன் புத்திரன் குணவான் என்று பிறர் சொல்லக் கேட்கும்போது விளையும் ஆனந்தம் அலாதி அல்லவா!
இப்படி உத்தமமான நல்ல பிள்ளையாக அவன் இருந்ததாலே பராதி: (உத்தமன்) என்று சஹஸ்ரநாமம் ஸ்ரீரமனைச் சொல்கிறது.

(தொடரும்)...




Saturday, November 30, 2013

PART -1, Chapter - 28

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 28

ஒரு சமயம் மனசுக்கும், வாக்குக்கும் இடையே பெரிய சண்டை வந்தது.  வாக்கு, மனசைக் கேட்டது "சதா  என்னை சச்சரவு பண்றியே. கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு நீ... நான் இல்லன்னா உனக்குப் பிரயோஜனம் உண்டா ? என் உதவியினால் தானே நீ வெளியில் வர முடியறது"?
மனசிலே ஆயிரம் எண்ணங்கள் இருக்கும்.  அடியேன் இங்கே வந்து உட்காருகிறேன்.  ராத்திரி 9 மணி வரைக்கும் வாயைத் திறக்காமலே உட்கார்ந்திருந்தால், என் மனத்திலே என்னதான் விஷயங்கள் ஓடினாலும், அது எதிரே இருப்பவர்களுக்கு ஏதாவது புரியுமோ?
வாக்தேவதை இல்லாத மனத்தினாலே பிரயோஜனமில்லை - என்று வேதமே சொல்கிறது.  இன்னொரு இடத்தில், மனிதர்கள் ஒருத்தரோடு ஒருத்தர் தொடர்பு கொண்டு எதனாலே மேன்மையுறுகிறார்கள் என்றால், வாக்கினாலேதான் அவ்வாறு மேன்மையுறுகிறார்கள் என்கிறது வேதம்.
உலகிலே மனிதர்கள் வாக்கினால் பரிமாறிக் கொண்டுதான் உறவு முறையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  வாக்கு கேட்ட கேள்விக்கு வருவோம்... அதற்கு மனசு சொன்னது: "நான் மட்டும் இல்லாவிட்டால் நீ தனியாக பேசிவிட முடியுமா?  நான் விஷய தானம் பண்ணினால்தானே நீ பேச முடியும்?"
வாக்கு வாதம் தொடர்ந்தது.  ஏகமாய்ச் சண்டை.  கடைசியில், இரண்டுமே, "பிரும்மாவிடம் போய்க் கேட்போம்" என்று நியாயம் கேட்கக் கிளம்பிப் போயின.

வாதி - பிரதிவாதி இரண்டுமே பிரும்மாவிடம் போய்  நின்றன.  "எங்களுக்குள் யார் பெரியவன்" என்று  கேட்டன. இந்த பிரும்ம பாவம்.  லௌகிகமே தெரியாதவர்.  உலகம் முழுவதையும் படைக்கிறார் என்றாலும் அவருக்கு லௌகிகம் தெரியவில்லை.
"என்னுடைய படைப்பை சொல்கிறேன் - நீங்கள் சண்டை போடக் கூடாது" என்றார்.
"மனசை முன்பு சிருஷ்டி பண்ணினேன் - வாக்கை பின்பு சிருஷ்டி பண்ணினேன்"
பிராணனை முன்பு சிருஷ்டி பண்ணினேன்.  அபானனை பின்பு சிருஷ்டி பண்ணினேன்.  கவே மனசுதான் பெரிது.  வாக்கு சிறியது!  "ஏ வாக்கே, மனசுடன் சண்டை போடதே" என்று சொல்லிவிட்டார்.
வாக்குக்கு ஏகமாய்க் கோபம்.  "என்னையும் படைத்து, மனசையும் படைத்து.. இப்படி நாங்கள் மத்யஸ்தம் கேட்க வந்த நேரத்தில் என்னை மட்டம் என்று சொல்லி விட்டீரே... அதுவும் அந்த மனசை பக்கத்திலே வைத்துக் கொண்டே சொல்லி விட்டீரே..என்னால் உமக்குப் பிரயோசனமே இல்லாமல் போகக் கடவது!" என்று சாபம் கொடுத்து விட்டது வாக்கு!
இந்தச் சாபம் காரணமாகத்தான் பிரும்மாவுக்கு என்ன மந்திரம் சொன்னாலும் உரக்கச் சொல்லக்கூடாது என்று வழக்கம் ஏற்பட்டுள்ளது.  உரக்கச் சொல்லப்படும் மந்திரம் பிரும்மவுக்குப் போய்ச் சேரவே சேராது!

சபித்துவிட்டுப் போன வாக்தேவதை அதோடு விட்டு விடவில்லை.  கோபத்துடன் ஒரு மூலையிலே போய்  உட்கார்ந்து அழுதது.  இந்த மனசு சும்மா இருக்கலாமல்லவா!  அது தான் இல்லை! அங்கேயிருந்து வந்து வாக்தேவதையை முதுகிலே ஒரு தட்டு தட்டியது.  "பெரிசா பேசினியே.. பிரும்மா என்ன சொன்னார் பார்த்தியா...அதுக்கப்புறமும் உனக்குத் தெளிவு வரலை.  இப்படி விசாரப்பட்டுக் கொண்டு அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கியே..? என்னைப்  பெரியவன் என்று ஒப்புக் கொள்வதில் உனக்கென்ன கஷ்டம்? என்று கிண்ட ஆரம்பித்தது.
"சரி, பிரும்மா சொன்னதை விட்டுடு: இப்போ உனக்கும் எனக்கும் போட்டி.  நான் பரப்ரும்மத்தைப் பார்க்கப் போறேன்.  உனக்கு சக்தி இருந்தால் ஓடி வா பார்ப்போம்".. என்று மேலும் சொல்லிவிட்டு குடுகுடுவென்று ஓட ஆரம்பித்து விட்டது.
வாக்குக்கு அந்த கணத்தில் ரொம்ப பௌருஷம் வந்துவிட்டது.  அப்படியா சங்கதி! நானும் வருகிறேன் என்று மனசோடு சேர்ந்து ஓடியது.  மனசு ரொம்ப ரொம்ப வேகமாகப் போயிற்று.  அந்த வேகத்தில் போக முடியாமல் வாக்கு ஏதோ தன் வேகத்திலே ஓடிப் போனது.  ஆனால் இரண்டும் எத்தனை வேகமாய்ப் போய்த் தேடியும் அந்த பரப்ரும்மத்தைக் காண முடியவில்லை!
வேகமாய் வந்து கொண்டிருந்த வாக்கு திரும்பி ஓடி வந்து கொண்டிருந்த மனசைப் பார்த்துக் கேட்டது.
"ஏ  மனசே, என்னைக் காட்டிலும் அதிவேகமாய் ஓடினாயே.. அந்த பரப்ரும்மத்தைக் கண்டாயா..?  இல்லை..! என்று கையை விரித்து விட்டது மனசு.  வாக்குக்கு ஒரே சந்தோசம்.  ஒரு எகிறு எகிறி மனசினுடைய தோள்  மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, "நீயும் நானும் கூட்டாளி தான்;  நீயும் நானும் ஒண்ணு தான்.. வா! என்றதாம்.
இப்படி ஒப்புவமை சொல்லிக்கறதுலே சிலர் சமர்த்தர்கள்.  ஒருத்தர் சொல்கிறார் "அந்த சதுர்முக பிரும்மாவும் நானும் ஒண்ணுதான்" என்று.  "எப்படி"?  ஒருவிதத்துலே சமம்.. எந்த விதத்திலே?  "அந்த சதுர்முக பிரும்மாவுக்கும் பரப்ரும்மத்தைக் குறித்துப் பிரமாணமாய்த் தெரியாது.  எனக்கும் தெரியாது" என்றார்.  அந்த மாதிரிதான்.  மனம் ஓடியதையும் வாக்கு ஓடியதையும் அட்டவணை போட்டுப்  பார்த்தால், மனம் ஓடிய தூரம் ரொம்ப அதிகம். ஆனால், வாக்கு, மனம் இரண்டுக்கும் வாய்த்த பலன் ஒன்று தான்!  ஓடிய தூரம்தான் வேறுபட்டது.

ப்படி மனசும் வாக்கும் தேடி ஓடிய திருவடி, அவை தேடியும் காண மாட்டாத திருவடி, தம்மை நாடி வந்ததே என்று பிரும்மவுக்கு ஒரே சந்தோசம்.  சத்ய லோகத்தில், அவர் பக்கத்தில் பகவானின் திருவடி தெரிய பிரும்மா அதைத் தம் கமண்டல தீர்த்தத்தால் அலம்புகிறார்.   அந்த திருவடி தீர்த்தம், பகவானின் பாதம் துளைத்துக் கிழித்த ஆவரண தீர்த்தம்,  பலி சக்ரவர்த்தி பகவானின் கையிலே விடுகிற தீர்த்தம் என இந்த மூன்றும் ஏக தாரையாக - ஒரே நேர்க்கோடாக விழுந்ததாம்.
அவ்வாறு விழுந்ததென்றால், பகவான் எத்தனை வேகத்தில் உலகளந்தான் என்பதை நாம் யோசனை செய்து பார்க்க வேண்டும்.  கற்பனைக்கெட்டாத வேகம் அது.

லகளந்த சேவடியை உயர்த்திய நிலையில் பகவானை சீர்காழியில் பார்க்கலாம்.  அந்த காட்சியை திருஞானசம்பந்தர் முன்னிலையில் பாடியிருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.  
சின்னக் குறள்  உருவாய் வந்தான்.  இந்த இரு நிலத்திலும் மூன்றடி கேட்டான்.  இரண்டாவது அடியால் அளந்து முடித்துவிட்டு, மூன்றாவது அடியை "எங்கே வைக்க" என்றான்.
ஆழ்வார் இதைப் பாடிய உடனே திருஞானசம்பந்தர் தம் கையில் இருந்த வேலை அவரிடம் கொடுத்து விட்டாராம்.  ஒரு வித்வானுக்குத்தானே இன்னொரு வித்வானின் சிரமம் தெரியும்!
இந்த சீர்காழிப் பெருமான் ஒரு காலை உயர்த்தி இருப்பதுடன் ஒரு விரலையும் உயர்த்தி, மூன்றாவது அடியை எந்த இடத்தில் வைக்க? என்று கேட்கிறான்.  அந்த மூன்றாவது அடிக்குத்தான் மகாபலி தன தலையைக் காட்டிவிட்டானே.  பிறகு ஏன் விரல் இன்னும் உயர்த்திய  நிலையிலேயே இருக்க வேண்டும்.
நாமும் பலியைப் போல் அவனுக்கு தலைதாழ்த்த வேண்டும் என்பதை நினைவுப்படுத்தத்தான்.   ஆளவந்தார் அப்படித்தான் பகவானிடம் போய்க் வேண்டிக் கொண்டார்.  "ஹே பிரபு!  நாராயணா! திரிவிக்ரமா!  மறுபடி உன் திருவடியை என் சிரசில் வையேன்..
மறுபடி என்ற சொல் கவனிக்கத்தக்கது.  "முதலில் நீ திரிவிக்கிரமனாய் இந்த உலகை அளந்தபோது நான் என்ன வஸ்துவாக இருந்தேனோ தெரியாது.  அப்போது என்னையும் சேர்த்து தானே அளந்திருப்பாய்.. எனவே இப்போது இரண்டாவது முறையாக".. என்று ஆளவந்தார் உட்பொருள் வைத்து வேண்டுகிறார்.

கையினாலே, பகவான் எல்லா இடத்தையும் சமமாக அளந்து எடுத்துக் கொண்ட அவதாரம் வாமன அவதாரம்.  விச்வமாகிற  பரமாத்மா, தன்னையே தான் கேட்டுப் பெற்றுக் கொண்டான்!  கேட்டால் பலி சக்ரவர்த்தி கொடுக்கிறானா இல்லையா என்று பரீட்சித்து பார்த்தான்.   
அதே போல் தான் நமது ஆத்மாவும் அவனுடையது.  அதை நாம் அவனிடம் கொடுக்கிறோமே என்றுதான் அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான்.  நமது ஆத்மா அவன் சொத்து.  அதைப் பெற வேண்டும் என்கிற முயற்சியிலேயே அவன் இருப்பான்.  அதைத்தான் இந்த விச்வம் என்கிற சப்தத்தினால் உணர்த்தப்படும் வாமன அவதாரமும் காட்டிக் கொடுக்கிறது.
ஒருவர் கையிலே ஒரு சவரன் மோதிரம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.  மோதிரம் காணாமல் போய்விடுகிறது.  தொலைத்தவருக்கு ரொம்ப விசாரம்.  ஆனால், விரலைப் பிரிந்தோமே என்று மோதிரம் விசனப்படுகிறதா என்ன...
அந்த மோதிரத்தின் நிலைமை தான் நம்முடையது!  பகவான் நமக்காக விசனப்படுகிறார்.  எப்போது நாம் நற்கதி அடைவோம் என்பது அவருக்குக் கவலை.  நாமோ, கீழே விழுந்த மோதிரம் மாதிரி எதையம் லட்சியம் பண்ணாமல் உட்கார்ந்திருக்கிறோம்.  ஆனால் நம்மை விட்டு விடுவானா பரமாத்மா...?  நம்மைக் கரை சேர்ப்பதே காரியமாய் இருப்பான்.


(தொடரும்)...

 


Monday, November 25, 2013

PART -1, Chapter - 27

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 27

தூக்கத்திலே நம்மை ரட்சிக்கிற பரமாத்மா, விழிப்பின் போதும் ரட்சிக்க மாட்டானா? என்று பராசர பட்டர் கேட்டாரல்லவா?
தூக்கம் என்பதை நமக்கு விதித்ததே இந்தப் பேருண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.  அவன் சர்வாந்தர்யாமி என்பதை உணர்த்துவதற்குத்தான்!
பகவானே ரட்சகன் என்பதை சகல சித்தாந்தங்களும் ஒப்புக் கொள்கின்றன.  இப்படிப்பட்ட பகவானை ஆவாகனம் பண்ணி சாதரணமாய் யாக பூஜைகளுக்கு வரவழைக்க வேண்டும்.  ஆனால் அதெல்லாம் பண்ணாமலே பலி சக்ரவர்த்தியின் அசுவமேத யாகத்துக்கு வருகிறான் பரமாத்மா.  மகாபலியுடைய யாகத்தின் பயனே நேரே வருகிறது!
எங்கும் வியாபித்து இருக்கக்கூடிய விபு - விச்வமாக இருப்பவன், தன்னை ஒடுக்கி எல்லாவற்றையும் மறைத்து, குள்ளமாய் வாமனனாய் அல்லவா வருகிறான்!  அவன்  விபு - அவன் பிரபுவும் கூட - எல்லாவற்றுக்கும் மேலானவன்;  எல்லாவற்றையும் நியமிக்கக்கூடியவன்,  அவனே யாசித்தலுக்கு வருகிறான் என்றால்.. அதுதான் பரமாத்மாவினிடத்திலே இருக்கிற உத்தமமான குணம்.
இந்த வாமன அவதாரத்திலே ஆண்டாள் ரொம்ப ஈடுபாடு கொண்டு வாமன மூர்த்தியை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று கொண்டாடுகிறார். 
உத்தமன்...? பிறருக்காக காரியம் செய்கிறவன் உத்தமன்.   
தம்மை ஆச்ரயித்தவர்களுக்காக எதையும் செய்பவன்.  
தன்னை ஆச்ரயித்த அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்தான் பகவான்.  "உனக்கு நான் சாரதியாக இருக்கிறேன்" என்று தானே அந்த வேலையைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.  எடுத்துக் கொண்ட காரியத்துக்கு ஏற்ப பவ்ய மூர்த்தியாய் விளங்கினான்.  ரதத்தை நிறுத்திய போதெல்லாம் தான் முன்னதாகக் கீழே இறங்கி, அர்ஜுனனுக்குக் கைகொடுத்து கீழே இறக்கி விட்டான்.  அவ்வளவு பவ்யம்!  "இங்கே நிறுத்து, அங்கே கொண்டு போ" என்று அர்ஜுனன் இட்ட வழக்காய் வேலை செய்தான். 
கடைசியில் யுத்தமெல்லாம் முடிந்த பிறகு பகவான்  மாறி விட்டான்! தான் முன்னே இறங்காமல் அர்ஜுனனை இறங்கச் சொன்னான்.  "கீழே இறங்கி, தூரப் போய்விடு" என்றான்.  அர்ஜுனன் நகர்ந்ததும் பகவான் இறங்கினான்! அந்த ரதம் அப்படியே கருகிப் போய்விட்டது! அத்தனைக் காலமும் பாணங்களின் சக்தியால் அந்த ரதம் அழியாமல் பகவான் அல்லவா ரக்ஷித்துக் கொண்டிருந்தான்.
அதைப் போல, இந்திராதி தேவர்கள் தன்னை ஆச்ரயித்தற்காக அவர்கள் பொருட்டு - இந்த யாசகத்தை மேற்கொண்டான் பகவான்.   வாமனனாக அவதரித்து வந்தான்.  இந்த யாசகம் இருக்கிறதே... ரொம்ப சிரமமான காரியம்.
கேட்கிறபோது கை நடுங்கும்.  வாக்கு குழறும்.  உடலெல்லாம் வியர்க்கும். என்ன கேட்பதென்று புரியாமல் வார்த்தையே வராது.  "அடியேன், அடியேன்" என்று யாசிப்பவர் மேலே கேட்கத் தெரியாமால் தவிப்பார்.
அந்திம காலத்திலே என்னென்ன விகாரங்கள் எல்லாம் ஏற்படுகிறதோ, அது மொத்தமும் ஒருத்தரிடம் கையை நீட்டி யாசிக்கும்போதும் ஏற்படும் என்று சாஸ்திரம் சொல்கிறது.    ஆகையினாலே இரத்தல் இறத்தலுக்குச்  சமம்!  அப்படியிருந்தும் அந்தத் தொழிலையே  மேற்கொண்டானே...!

ந்து நின்ற பகவானைப் பார்த்து ஒரே ஆச்சர்யமாம் மகாபலிக்கு!

"தாங்கள் யார் தெரியலையே"... என்று அவன் கேட்கிறான்.
யாரென்று சொல்வான் பரமாத்மா...? 
"அபூர்வ" என்று பதில் சொல்கிறான்.  "என்னை நீ பார்த்திருக்க முடியாது.  நான் யார் என்பதைச் சொன்னாலும் புரியாது".
தினமும் இங்கே நான் வந்து உபன்யாஸம் பண்ணுகிறேன்.  இதில் சொல்வது எல்லாம் புரிகிறதா என்றால், இல்லை...  எனக்கே இன்னும் பல விஷயங்கள் முழுவதுமாய்ப் புரியவில்லை.  விச்வ சப்தத்தினுடைய முழு அர்த்தமும் புரிந்து விட்டதாகச் சொல்ல முடியுமா?  ஏதோ பரஸ்பரம் இங்கே வந்து பகவான் குணத்தை நாம் பரிமாறிக் கொள்கிறோம்.
"கொண்டி பசுவுக்கு தடி கட்டி விட்டாற்போல" என்று பழமொழி சொல்வார்கள்.  அது  மாதிரி தான் இந்த உபன்யாஸம்.
ஒருத்தன் 100 பசு வைத்திருந்தான்.  அதிலே ஒரு பசு ரொம்ப துஷ்டை. புல்லை மேயாமல் கதிர் விட்டிருக்கிற பயிரைப் போய்  மேயும்.  பயிருக்குச் சொந்தக்காரரான விவசாயி அதை நன்றாகப் போட்டு அடித்து விட்டார்.  பசு மாட்டுக்காரனுக்கு ஒரே வருத்தம்.  இந்தப் பசு இப்படி அடி படறதே என்று ஒரு மரக்கட்டையை அதன் கழுத்திலே கட்டி வைத்தான்.  பசு இப்படி அப்படிப் போனால் அந்தக் கட்டை ஆடி, அதன் முட்டியிலே இடிக்கும்.  இடித்தால் ஏகமாய் வலிக்கும்.  அதனாலே பசு மேயப் போவதை நிறுத்தி விட்டது!
நாமும் அப்படித்தான்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் என்கிற தடி கட்டி வைத்திருக்கு நமக்கு!
"தினமும் இரண்டு மணி நேரம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலே மனம் அங்கே இங்கே போகாமல் இருக்கிறது.  எல்லோரும் ஒரே இடத்திலே, ஒரே மனத்துடன் பகவானை நினைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.  கலியுகத்திலே இதைப் போன்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு மகிமை அதிகம்.  இப்படி உபன்யாசம் சொல்லிக் கொண்டேயிருந்து, கேட்டுக்  கொண்டேயிருந்தால் பகவத் அனுக்கிரஹத்தினாலே ஒரு நாள் எல்லாம் புரிய ஆரம்பிக்கும்.  அதுவும் அவன் அருளால்தான் நடக்கிறது"  


க, அறிய முடியாத தன்மையைத்தான் "அபூர்வ" என்கிற பதில் மூலம் பலிக்கு உணர்த்தினான் பகவான்.
பலி அடுத்தக் கேள்வி கேட்கிறான்.
"சரி, உங்களுக்கு எந்த ஊர்?"  "பிரும்ம சிருஷ்டியிலே இருக்கும்படியானது மொத்தமும் என் ஊர்தான்"
இந்த பதிலைக் கேட்டு பலி சக்ரவர்த்திக்கு, "ஐயோ பாவம்" என்று தோன்றியதாம்.  இவ்வளவு தேஜஸ்வியாய் இருக்கிறாரே... இவருக்கு இவ்வளவு ஏழ்மையா" என்று வருத்தம் வந்ததாம்.
"இந்த சென்னை மொத்தமும் என்னுது" என்று ஒருத்தர் சொன்னார் என்றால் அர்த்தம்?   ஒரு அடி மண் கூடச் சொந்தமில்லை - மேலே ஆகாசம், கீழே பூமி என்று தானே அர்த்தம்.  அப்படி அர்த்தம் புரிந்து கொண்டான் மகாபலி.
அடுத்தக்  கேள்வி கேட்டான்.
"உங்க அப்பா என்ன பண்ணுகிறார்?  யாருடைய பிள்ளை நீர்"?
"நான் அநாதை.  எனக்கென்று யாரும் கிடையாது".
இதைக் கேட்டு பலிக்கு ரொம்ப வீர்யம் ஏற்பட்டுப்  போய்விட்டது.
"ஆஹா! எப்பேர்ப்பட்ட பாத்திரமிது!   நல்ல பாத்திரத்திலே தானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரமல்லவா... வந்திருப்பவரோ ஏழை.  அப்பா - அம்மா கிடையாது.  பிரும்ம தேஜஸ் வேறு சொட்டுகிறது அவரிடத்திலே என்று எண்ணுகிறான்.  பெரிதாக ஒரு வார்த்தை வருகிறது அவனிடமிருந்து.
"என்ன வேண்டும் உனக்கு..? என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்".
பகவான் தன சின்ன திருவடியைக் காட்டிச் சொல்கிறான் - "இந்த அடியினாலே மூன்றடி மண் வேண்டும்".
"அதற்கு மேலே வேண்டாமா...?
"வேண்டியதில்லை.  அதிலேயே சந்தோஷம் எனக்கு ஏற்படும்".
இந்த சம்பாஷணையை சுக்ராச்சார்யார் பார்த்து கொண்டேயிருக்கிறார்.  இவனுக்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு யாகத்தைச் செய்து கொண்டிருக்கிறோம்... இந்தச் சமயத்திலே ஏமாற்றுவதற்கென்றே ஒருவன் வந்திருக்கிறானே...!
மகாபலியை எச்சரித்தார் சுக்ராச்சார்யார்.  
ஆனால் பலிச்சக்ரவர்த்தி கேட்கவில்லை!  "சாஷாத் நாராயணனே வந்தாலும், அவன் கை தாழ்ந்து யாசிக்க, என் கை உயர வேண்டும் என்று இருக்கிறதே.  அதுவும் அவனுடைய சங்கல்பத்தினாலேதானே அமைந்திருக்கிறது.  அதனால் அவன் கேட்டதைக் கொடுப்பேன் என்றான்.
பரம பாகவதோத்தமன் அந்த பலி.  தேவதைகளைச் சித்ரவதை பண்ணினாலும் சொன்ன வாக்கைக்  காப்பாற்றியவன், தன்னிடம் யாசித்தது பகவானே  என்று உணர்ந்த பிறகும் அவன் பின்வாங்கவில்லை.
பலியின் தர்மபத்தினி விந்த்யாவளி. அவன் தானம் கொடுக்கும்போது அருகிலிருந்து தீர்த்தம் சேர்க்க வருகிறார்.  அப்போது சுக்ராச்சார்யார் தவளை வடிவாக மாறி, கமண்டலத்தில் இருந்து  ஜலம் விழுவதை தடுக்கிறார்.  அப்போது பகவான் தம் கையில் அணிந்திருந்த விச்வாமித்ர தர்பத்தினால் அந்த கமண்டலத்தின் தாரையைக் குத்துகிறார். 
தர்ப்பத்தை பகவான் கையிலே  வைத்திருக்கிறார். தேஜஸ் மிகுந்த பிரும்மச்சாரியாய் வந்தார் என்று பார்த்தோமல்லவா.  அந்த கோலத்துக்கு உரியதுதான் இந்த தர்ப்பம்.  கிருஷ்ணாஜினம் என்னும் வஸ்த்ரத்தாலே மார்பைப் போர்த்திக் கொண்டு வருகிறார்.  மார்பை ஏன் மறைத்துக் கொள்கிறார் என்றால் அந்த பிரும்மச்சாரி கோலத்திலும் மஹாலக்ஷ்மி தாயார் விடாமல் அவன் திருமார்பிலே வாசம் பண்றாளாம்.  அவள் பார்வை பலியின் பக்கம் படக்கூடாது என்பதற்காக மார்பை மறைத்துக் கொண்டானாம் பரமாத்மா.  லக்ஷ்மி கடாக்ஷம் பட்டு விட்டால் பலிக்குக் கொள்ளக் குறையாமல் செல்வமல்லவா ஏற்படும்.  அப்புறம் அவதார பூர்த்தி ஆகாது அல்லவா!.
எனவே கிருஷ்ணாஜினம் போர்த்தி வருகிறார் பகவான்.  பலியின் மனைவி தீர்த்தத்தை அவர் கையிலே விடும்போது அதை வாங்கிக் கொள்வது போல, தம் கையில் இருக்கும் தர்ப்பத்தை கொண்டு சுக்ராச்சார்யாரின் கண்ணைக் குத்தி விடுகிறார்.  அவருக்கு ஒரு கண்ணே போய்  விட்டது. 
தர்ப்பத்தால் குத்தினால் கண் போய்விடுமா என்று கேட்டால், பகவான் சுதர்சன சக்ரத்தை அல்லவா பவித்ரமாகப்  (விரலில் மோதிரம் போல் அணியப்படும் தர்ப்பை) போட்டுக் கொண்டிருக்கிறான். அதனால் அத்தனை சக்தி, தர்ப்பத்தை கொண்டு செய்த அந்த பவித்ரத்துக்கு. 
கிண்டியிலிருந்து ஜலம் பகவான் கையிலே விழுகிறது.  அந்த நேரத்திலே அவன் திருவடி எங்கே போச்சு என்று கேட்டால், நீண்டு கொண்டே போகிறது.  பூலோக மேலோகங்களெல்லாம் தாண்டி பிரும்மாவின் உறைவிடமான சத்யலோகம் வழியே போகிறது அந்த திருவடி.  சத்ய லோகத்தையும் தாண்டிப் போய் ஆவரண ஜலத்தை கிழித்து விடுகிறது.
பிரும்ம லோகத்தைத்  நோக்கிப் போன அந்தத் திருவடியை பிரும்ம பார்த்தார். நான்கு வேதங்களும் தேடிக்  தோற்ற திருவடி!  மனசும் வாக்கும் அலைந்து தேடியும் கண்டறியாத திருவடி!
மனமும் வாக்கும் அந்தத் திருவடியைத் தேடி அலைந்த கதையொன்று உபநிஷத்தில் உண்டு.  அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.












(தொடரும்...) 

Saturday, October 26, 2013

PART -1, Chapter - 26

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 26

ஓலைப் பெட்டியில் இருந்த பூணூலை எடுத்து, மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் அந்த ஏழை பிராமணர்.  
"இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது?  பாவம் இது கூடத் தெரியாமல் இவர் அதன் எடைக்கு நிகராகப் பொருள் கொடுத்தால் போதும் என்கிறாரே" என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டான் ராஜா.
ஒரு காசை எடுத்துத் தட்டிலே போட்டான்.  அந்தத் தட்டு கூடத் தாழவேயில்லை!  இரண்டு காசுகள் போட்டான்... பத்து... எவ்வளவு போட்ட போதும் அசையாமல் நின்றது.  தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி பூணூலுக்கு நிகராக எடை போட்டுப் பார்த்தான்.  அப்போதும் அதன் இணையை எட்ட முடியவில்லை.   இரத்தின கிரீடத்தை எடுத்து  வைத்தான். "என்னிடம் இருக்கிற மொத்தத்தையும் எடுத்து வச்சுட்டேன்" என்கிறான்.

உடனே அந்த நாட்டின் மந்திரி போய், ராஜாவின் காதோடு சொன்னான்; "அவசரப்பட வேண்டாம்!  இந்த பிராமணரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாளைக்குத் திரும்பவும் வரச் சொல்லுங்கள்..."
ராஜாவும் அந்த உத்தமரைப் பார்த்து, "நீங்கள் நாளைக்கு வந்தால் இந்த நூலுக்கு நிகரான எடையில் செல்வத்தைத் தருகிறேன்" என்றான்.
பிராமணர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தார்.  "இப்படி பூணூல் எடைக்கு மேல் வாங்கிக்கலை என்று சொல்லி விபரீதத்திலே மாட்டிக் கொண்டோமே" என்று அவருக்கு ஒரே பயம்.
அந்த பயத்துடனேயே புறப்பட்டுப் போனவர் மறுநாள், "சிரச்சேதம் பண்ணி விடுவானோ அரசன்...? என்கிற பயத்துடனேயே திரும்பி வந்தார்.

தராசு கொண்டு வரப்பட்டது.  பூணூலை வைத்தார் அந்தணர்.  ராஜ ஒரு காசை எடுத்துப் போட்டான்.  உடனே பூணூல் தட்டு மேலே போய்  விட்டது.
"அதே நூல்தான், அதே  தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நடந்தது?  நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது?  ராஜ மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.
மந்திரி அதற்கு விளக்கம் சொன்னான்.
நேற்று அவர் கொண்டு வந்தது யக்ஜோபவீதம்.  யக்ஜோபவீதம் பரமம் பவித்ரம்னு சொல்வதுண்டு.  மிகவும் புனிதமானது அது.  அதற்கு நிறை காண முயல்வதே தப்பு.  நமக்கெல்லாம் ஆத்மா என்று பெயர்.  பகவானை மட்டும் பரமாத்மா என்று "பரம" - "உத்தமமான"  என்கிற அடை மொழி சொல்லி அழைக்கிறோம்.  அதே அடைமொழி இந்த யக்ஜோபவீதத்துக்கும் சொல்லப்படுகிறது.  அவ்வளவு பவித்ரமானதாக அது இருந்ததினாலேதான் ராஜ்யத்தையே எடை கொண்டது.  ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய்  விட்டது.  அதனாலே சுலபமாக அதை எடை போட்டு விட்டோம்.
"ஏன் போனது அதனுடைய பவித்ரம்" என்று கேட்டான் அரசன்.
"பூணூலைத் திரிப்பவர்கள் (தரிப்பவர்களும்) நியமங்களில் இருந்து தவறவே கூடாது.  ஆனால், இந்தப் பெரியவர் தமது பயம் காரணமாக இன்றைக்கு அந்த நியமங்களைச் செய்யவில்லை.  அதனாலே தான் அதன் பவித்ரம் போனது"


நியமமாகச் செய்யப்படும் பூணூலின் மகிமையைச் சொல்வது இந்தக் கதை.  சர்வமேன்மை பொருந்திய பரம பவித்ரமான யக்ஜோபவீதம் பகவானுக்கு வாமன அவதாரத்தின் போது அணிவிக்கப்பட்டது.  சூரியனே அவருக்குப் பிரம்மோபதேசம் பண்ணினார் என்று சொன்னேனில்லையா...? பார்வதி தேவி  வந்து அவருக்கு முதல் பிட்சை இடுகிறாள்.  பலாச தண்டத்தை பகவானின் கையிலே தருகிறார்கள்.
பலாச தண்டம் என்பது என்ன...? தண்டம் என்பது சந்நியாசிகளின் கரத்தில் கொடுக்கப்படும் கோல்.   உபநயன காலத்தில் பலாச மரத்தின் கிளையை இப்படி 'வடு'வின் கையில் கொடுப்பதுண்டு.
ஏன் பலாச மரத்தின் கிளையைக் கொடுக்க வேண்டும்?  வேறு மரத்தின் கிளையைக் கொடுத்தால் என்ன என்று கேட்டால் அதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.
வேத வித்துக்கள் பலர் ஒரு சமயம் பாலச மரத்தடியில் கூடினார்கள்.  அங்கே அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை ஓதி அதன் மகிமையைப் பேசினார்கள்.  இதைக் கேட்டுக் கொண்டே இருந்த பலாச மரத்தின் வட்டமான இலைகள் மூன்று மூன்று கூறுகளை உடைய இலைகளாக வடிவத்தில் மாறிவிட்டன.  காயத்ரி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு.  அந்த மந்திரத்தைக் கேட்டதும் அதன் மூன்று பாகங்களையும் தன் இழையிலேயே காட்டியது பலாச மரம்!  அதனால்தான் பலாச தண்டத்தைக் கொடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.
"மாயா வாமனனே மதுசூத நீயருள்வாய்" என்று "வாமனனையும், மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்று கண்ணனையும் பாடுகிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மாயன்தான் மூவுலகளந்த திரிவிக்கிரமனாய் விச்வரூபம் எடுக்கவிருக்கிறான்.

விச்வ சப்தத்துக்குரிய இந்த மாயன், நர்மதா நதி தீரத்திலே, பிரஹலாதனுடைய பேரனான பலி சக்ரவர்த்தி செய்த அசுவமேத யாகத்துக்கு வருகிறான்.
யக்ஞ சம்ரக்ஷகன் அந்த பரமாத்மா.  சிரார்த்த சம்ரக்ஷகன் என்றும் அவனைச் சொல்வதுண்டு.  சிரார்த்தம் பண்ணும்போது ஸ்ரீ மகாவிஷ்ணும் ஆவாஹயாமி என்று அவனை ஆவாஹனம் பண்ணுகிறோம்.  எனவே அவன் சிரார்த்த சம்ரக்ஷகன் ஆகிறான்.
சிரார்த்த சம்ரக்ஷகனாக மட்டுமா - அவன் இருக்கிறான்?  எல்லாவற்றுக்கும் சம்ரக்ஷகன் அவன்தான்  சர்வதா ரக்ஷகன்.  எப்போதும் ரக்ஷிக்கிறவன்.  சர்வத்ர ரக்ஷகன் - எங்கும் ரக்ஷிக்கிறவன்!
இதை உணர்த்த வேடிக்கைக் கதை ஒன்று சொல்வார்கள்.  ஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்;  "அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும்.  அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்" என்றார் அவர். 
25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை!  மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம்!  அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார்.  எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்...!  திரவிய ரக்ஷணம்.  இவரே ஒரு ரக்ஷகர்.  அப்புறம் பரமாத்மா...? சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.
இது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல்!  உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன்.  அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா...? நினைக்கத்தான் முடியுமா?  அவன் தான் நம்மை எப்போதும்  ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.
பராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் - பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.  உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்:  "வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா?  புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா?  எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்?  அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க!  ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே... பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்?"
"அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா" கேட்டார் பட்டர்.
"ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்"
பார்த்தார் பட்டர்.  "இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன்.  காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர்.  கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார்.  கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.
பட்டர் கேட்டார்:  "ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா?"
"சாப்பிட்டேன் "
"நன்றாக தூங்கினீரா"?
"தூங்கினேன்".
"எத்தனை மணிக்குப் படுத்தீர்"?
"9 மணிக்கு"
"எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது"?
"ஒரு ஒன்பதரை மணியிருக்கும்".
"எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் "?
"காலை நாலரை மணிக்கு"
"ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா"?
"தூக்கத்திலே யார்தான் உணர்வார்கள்"?
"இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா"?
"தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்"?
"தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம்.  துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம்.  இதில் இருந்து எல்லாம் ந
ம்மைக் காப்பாற்றி அந்த மாத்மா ரட்சிக்கவில்லையா?  இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா"? என்று கேட்டார் பராசர பட்டர். 












 
(தொடரும்)

Friday, October 18, 2013

PART -1, Chapter - 25

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 25

பிள்ளை ரொம்ப துஷ்டன், சதா அப்பா அம்மாவோடு சண்டை போடுகிறவன்.  அப்படிப்பட்ட பிள்ளையை அடி அடின்னு அடிச்சுட்டார் அப்பா! பையன் கோபத்தில் வீட்டை விட்டே போய்விட்டான்.  " அவன் எங்கே போய் அலைகிறானோ?  சாப்பாட்டுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறானோ...? என்று தாயார் கதறுகிறார்.
பசியெடுத்தா, தானா வீடு வந்து சேர்வான்.  ஏன் கவலைப்படறே"  என்று அப்பா சுலபமாகச் சொல்லி விடுகிறார்.
இந்த நேரத்திலே அந்த வீட்டுக்கு வந்தவர் ஒருத்தர், "உங்க பிள்ளையை அந்தச் சத்திரத்து வாசல்லே பார்த்தேன்" என்கிறார்.
உடனே அங்கே போய், குழந்தைக்குப் பசியாற்ற வேண்டும் என்று அம்மா நினைக்கிறாள்.  நேரடியாகப் போய்  உணவைக் கொடுத்தால், அவன் வாங்கிச் சாப்பிட மாட்டான் என்று தெரியும் அவளுக்கு. சத்திரத்து வாசலிலே இட்லி, தோசை போன்றவற்றை விற்கும் ஒரு கடையைப் போட்டாள்.  துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கே அடுப்படியில் உட்கார்ந்தபடி பலகார வியாபாரம் பண்ணினாள்.
மகன் வந்து சத்திரத்து வாசலிலே உட்கார்ந்தான்.  "அப்பா, உன்னைப் பார்த்தால் பசியாகத் தெரியறதே... ஏதாவது வாங்கிச் சாப்பிடேன்" என்றாள் அம்மா.   "என்கிட்டே பணமில்லையே" என்றான் மகன்.  "நிதானமாகக் கொடுக்கலாம்.  கையிலே பணம் கிடைக்கறச்சே கொடுத்தால் போதும்..."  மகன் பசியாறினான்!
மறைந்திருந்து அந்தத் தாயார் மகனுக்கு  ஊட்டினதுபோல, மகாலஷ்மி தாயார் நமக்கு மறைந்திருந்து கொடுக்கிறாள்.  பகவான் சொல்வதை நாம் கேட்காமல் போகும்போது அவன் நமக்கு தண்டம் கொடுக்கிறான்.  தாயார் பரிவு காட்டுகிறாள்.  பிறகு பகவானே நம்மை உய்விக்கறதுக்காக வேறு யார் மூலமாவது அனுக்கிரஹம் பண்ணி விடுகிறான்!  வேதம் சொல்கிறது - பகவான் நேரடியாக உதவாமல் வேறு ஒருத்தர் மூலமாகத்தான் செய்வார் என்று...

மகாபலியின் அட்டகாசம் தாங்காமல் தேவர்கள் துன்பப்பட்டபோது, அதிதி அவனிடம் போய்  வேண்டினாள்.  பகவான் நினைத்திருந்தால் தானே நேரடியாக தேவர்களுக்கு உதவி இருக்கலாம்.  ஆனால், அவன் என்ன பண்ணினான்...? ஓர் உயர்ந்த விரதத்தைச் சொல்லி, அதைப் பண்ணினால் கஷ்டம் நிவர்த்தியாகும் என்றான்!
அந்த விரதத்தைச் செய்து பூஜை பண்ணினாள் அதிதி... அந்த விரதத்திலும், எல்லா யக்ஜங்களிலும் ஆராதிக்கப்படுகிறவன் அந்த நாராயணன் தானே!
பித்ரு தேவதைகளுக்கு நாம் ஆராதனை செய்தால் கூட அது அந்த நாரயனனுக்குத்தான் போய்ச் சேருகிறது.
சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கும் ராஜாவுக்கு சேவகன் சந்தனம் பூசுகிறான்;  பன்னீர் தெளிக்கிறான்.  அந்த ராஜா உடலை மறைத்து அங்கி அணிந்து கொண்டிருக்கிறார்.  அதற்கு மேலே பட்டு-பீதாம்பரம்.  அதற்கும் மேலே இன்னொரு அங்கி!  சேவகன் தடவுகிற சந்தனத்தை அந்த ஆடை, ஆபரணமா ஏற்கிறது?  உள்ளே இருக்கிற ஆத்மா தானே ஏற்கிறது!
அதுபோலத்தான், அதிதி செய்த விரதத்தின் பலன் பகவானையே போய்  அடைந்தது.  அவனே அதிதியின் மகனாய் அவதாரம் பண்ணினான்.
கல்யாண காலத்திலே ஒரு மந்திரம் சொல்வதுண்டு.  கோடி உடுத்தும்போது சொல்வது... இவரே எல்லா ஜன்மாவிலும் எனக்கு பர்த்தாவாக இருக்க வேண்டும் என்று வேண்டும் மந்திரம்.
அன்னியோன்ய தம்பதிகள்-சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபடுபவர்களின் வீட்டிலே, மஹாலக்ஷ்மி வாசம் செய்வாளாம்.

அன்னியோன்ய தம்பதி என்றால்...? சீதையையும் ராமரையும்தான் முதல் உதாரணமாகச் சொல்லுவார்கள்.
கோதாவரி தீரத்திலே ராமனும் சீதையும்  இருக்கும் நேரம்.  இருவரும் மௌனமாய் இருக்கிறார்கள்.  திடீரென்று ராமன் சிரித்தான்.  அவன் ஏன் சிரித்தான் என்று சீதபிராட்டிக்குச் சந்தேகம் வந்தது.  ஆனால் கேட்கத் தயக்கம்.  மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.  சற்று தூரம் நடந்து போனதும் சீதை சிரித்தாள்.  அதைப் பார்த்துவிட்டு ராமன் கேட்டான்.  "சீதா! எதற்குச் சிரிக்கிறாய் நீ"?   அவர் இப்படிக்  கேட்டதும் சீதைக்குத் தைரியம் வந்ததாம்.
"நீங்கள் எதற்குச் சிரித்தீர்கள்?  அதை முதலில் சொல்லுங்கள்" என்றாள்.
"நீதான் முதலில் சொல்ல வேண்டும்".  "அதோ அப்படிப்  பாருங்கள்".  சீதை சுட்டிய திசையில் ஒரு யானைக் கூட்டம்.  அந்த யானைகள்  எல்லாம் ராமனின் கம்பீரமான நடையைப் பார்த்து விட்டு, தங்களின் நடையை எண்ணி வெட்கம் கொண்டனவாம்.  "அதைக் கண்டுதான் சிரித்தேன்" என்றாள் சீதை.
உடனே ராமன் சொன்னான், "நானும் அதே காரணத்துக்காகத்தான் சிரித்தேன்.  சற்றுமுன் நாம் நடந்து வந்த பாதையில் அன்னப் பறவைகளின் கூட்டம் ஒன்று வெட்கித் தலைகுனிவதைக் கண்டேன்.  தாங்கள் நடை அழகிலே உன்னிடம் தோற்றுவிட்டதை எண்ணித்தான் அந்த அன்னப் பறவைகள் வெட்கமுற்றன என்பது தெரிந்தது.  அதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது".
அவனும் சிரித்தான்.  அவளும் சிரித்தாள்!  இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது!  ஆனால் இருவருமே நடையைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.  இவர்கள் கருத்தொருமித்த தம்பதி என்றாகிறதல்லவா!
இப்படிக் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தும் தம்பதிக்கு பகவான் அருள் செய்கிறான்.

யோக சித்தியை அடையும்படியான நிலையை ஒரு தம்பதி விரும்பினர்.  அதற்காக பகவானை நோக்கி இணையாக தபஸ் பண்ணினார்கள்.  பகவானும் அவர்கள் தவத்துக்கு இறங்கி காட்சி கொடுத்தான்.  ஆனால், பகவானுடைய பேரழகைப் பார்த்ததும் அந்த தம்பதியின் மனம் மாறிவிட்டது!  யோக சித்தியைக் கேட்பதற்குப் பதிலாக, "நீயே எங்களுக்குக் குழுந்தையாகப்  பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்டுவிட்டார்கள்.  பகவானும் அவர்களுக்கு அனுக்கிரஹம் பண்ணினான்.  அவர்களுக்குக் குழந்தையாய் அவதரித்தான்.  "பிரச்னிகர்பன்" என்று அவனுக்குப் பெயர் அந்த அவதாரத்திலே!
இப்படி வேண்டித் தவமிருந்து பெற்ற பிள்ளையாகத் தான் அதிதியின் கர்ப்பத்தில் வாமனனாக அவதிரித்தார் பகவான்.  அந்த அதிதியையேதான் பின்னால் தேவகியைப் பிறக்கச் செய்து, அவள் கர்ப்பத்திலே கிருஷ்ணனாக அவதரித்தார்.   (ஆகையினாலே,கிருஷ்ண அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வாமன அவதாரம்.)

ழ்வார்கள் வாக்கிலே வாமன அவதாரம் குறித்தும், கிருஷ்ண அவதாரம் குறித்தும் தான் நிறைய பாசுரங்கள் அமைந்துள்ளன.
வாமன அவதாரத்திலே பகவானுக்கு உபநயனம் நடக்கிறது!  சூரியனே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் பண்ணுகிறார்!
இதைக் கேட்கவே எவ்வளவு அழகாய் இருக்கிறது.  அது சரி... பகவான் இங்கே பூமியில் வந்து இப்படி உபநயனம் பண்ணிக் கொண்டான் என்றால் அதற்கு என்ன காரணம்...?  அந்த சம்ஸ்காரம் தொடர்ந்து இங்கே நடக்கணும் என்பதற்காக!  
அந்த வாமன அவதாரத்தை நினைத்து வேண்டிக் கொண்டாலே குழந்தைகளுக்கு சீக்கிரமாய் உபநயனம் ஆகிவிடுமாம்.

நாற்பது சம்ஸ்காரத்திலே மிக உயர்ந்த சம்ஸ்காரம் உபநயனம்தான்.  அந்த உபநயன மந்திரத்திலே என்ன போதிக்கப்படுகிறது?  "கர்மாவைப் பண்ணு", "பண்ணுகிறேன்" என்று பதில் சொல்ல வேண்டும் உபநயனம் செய்து கொள்ளும் சிறுவன்.  "ஆசார்யரிடம் அபிமானமாக இருக்கணும்".  "இருக்கிறேன்"... "ஆசார்யருக்குக் குடை பிடிக்கணும்", "பிடிக்கிறேன்.."  "ஆசார்யர் உயர்ந்த ஸ்தானத்திலே உட்கார்ந்தால் நீ கீழே உட்காரணும்... அவர் உட்காரு என்று சொன்னால் தான் உட்காரணும்", "செய்கிறேன்".  "ஆசார்யருக்கு ஆசார்யர் பக்கத்திலே இருந்தால் அவருக்கு முதல் வந்தனம் பண்ணனும்", பண்ணுகிறேன்".
இவ்வாறு வாழ்க்கை முறையை உபதேசிப்பதுதான் உபநயனம்.  அந்த சமயத்தில் அணிவிக்கப்படும் பூணூலும் பவித்ரமானது. 

பூர்வ காலத்திலே ஒரு மகான் பூணுல் திரிப்பதையே தொழிலாகச் செய்து வந்தார்.  அதைத்  தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.  மந்திரம் சொல்லித்  திரித்து, அதை பகவான் திருவடியிலே வைத்து எடுக்க வேண்டும்.  அப்புறம் ஓலைப் பெட்டியிலே பரம பவித்ரமாக அதை வைக்க வேண்டும்.  வெகு சிரத்தையாய் இதைப் பண்ணி வந்தார் அந்த மகான்.  யாராவது வந்து கேட்டால் அந்த யக்ஜோபவீதத்தை எடுத்துக் கொடுத்து அனுக்கிரஹம் பண்ணுவார்.
ஒரு நாள் அந்த மகானின் பத்னி அவரை வந்து சேவித்தாள்.  "நீங்கள் எப்போது பார்த்தாலும் இப்படிப் பூணூலைத் திரித்துக் கொண்டிருக்கிறீர்களே!  நம் குழந்தைக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா" என்று நினைவு ஊட்டினாள்.
"பக்கத்து தேசத்திலே ஒரு ராஜா, விஷேசமாய் எழுந்தருளியிருக்கிறார்.  அவரைப் போய் உதவி கேட்டால்  வாரிக் கொடுப்பார்.  ஒரு தடவை போய்ப் பார்க்கக் கூடாதா? என்று யோசனையையும் சொன்னாள்.
மனைவியிடம் அவர் உறுதியாக ஒன்றும் பதில் சொல்லவில்லை.  போய்த்தான் பார்ப்போமே என்று அரசனிடம் போனார்.  அவரிடமிருந்து பிரும்ம தேஜஸ் சொட்டுவதைப் பார்த்ததும் அந்த ராஜாவே எழுந்து நின்று விட்டார்.  முதலில் அவரை உட்கார வைத்தார்.
துரியோதனன்  சபையிலே, பகவான் கிருஷ்ணன் நுழையும்போது யாரும் நின்று மரியாதை செய்யக் கூடாது என்று சகுனி உத்தரவு போட்டிருந்தானாம்.  ஆனால் பகவான் நுழைந்ததும் துரியோதனன் தன்னை அறியாமலேயே தானே எழுந்து நின்றானாம்!  அவன் பின்னோடேயே துச்சாதனனும், கர்ணனும் அந்தச் சகுனியும் கூட எழுந்து நின்றார்களாம்! அப்படிப்பட்ட தேஜஸ் பகவானுடையது.
அந்த மாதிரி, ராஜாவும் அந்த மகானின் தேஜசுக்குக் கட்டுப்பட்டு எழுந்தார்.  அவரை அமர்த்தி, "சுவாமி, உங்களுக்கு என்ன வேண்டும்?  இவ்வளவு பிரும்ம தேஜஸோடு இருக்கிறீர்களே!  உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்..." என்றார்.
கேட்டு அறியாதவர் அந்த ஏழை.  எப்படிக் கேட்க வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை.  யோசித்து விட்டுச் சொன்னார் - "நான் ஒரு யஜோபவீதம் (பூணூல்) கொண்டு வந்திருக்கிறேன்.  அதன் எடைக்கு நிகராகத் தங்கம் கொடுத்தால் போதும்.. அதைக் கொண்டு என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவேன்.."
"அது போதுமா?  அதற்கு மேலே வேண்டாமா"?
"போதும்"

தராசைக் கொண்டு வரச் சொன்னான் ராஜா.

(தொடரும்)






Thursday, October 17, 2013

PART -1, Chapter - 24


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
 
அத்தியாயம் 24
 
கவானைத் தம் முன்னே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய யோகியைப்  பார்க்க ஆளவந்தார் என்கிற ஆசார்யர் வந்தார்.  அவர் வந்த நேரத்திலே யோகி ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார்.  "சரி, இவர் யோக நிலை மாறட்டும், பிற்பாடு பேசலாம்" என்று அவர் பின்னாலே போய்  ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டார் ஆளவந்தார்.
அந்த சமயத்திலேதான் பகவானின் பார்வை யோகியின் பேரிலிருந்து ஆளவந்தார் பேரில் திரும்பியது.  "பகவான் தம் பக்கமிருந்து பார்வையைத் திருப்பி விட்டாரே!, என்கிற அதிர்ச்சியில் யோகியின் மோனம் கலைந்து போனது.  ஒருநாளும் பக்கம் நோக்கி அறியாத பகவான் இன்று பக்கம் நோக்கினது ஏன் என்று மகான் யோசித்து வர, "இங்கே சொட்டை நம்பி வம்சத்திலே வந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா"...? என்று பெருத்த குரலில் கேட்டார்!
அவர் அப்படி கேட்டதற்கு அர்த்தம் என்ன?
நாதமுனிகளின் மகன் சொட்டை நம்பி வம்சத்திலே பகவானுக்கு மிகுந்த அபிமானம் உண்டாம்.   அந்த வம்சத்தை சேர்ந்த யாரேனும் வந்தாலொழிய பகவானின் பார்வை திசை திரும்ப வழியில்லை என்பது யோகியின் கணிப்பு.
அந்த கணிப்பு சரியான கணிப்புத்தான்.  ஏனென்றால் அவர் பின்னாலே வந்து அமர்ந்த ஆளவந்தார் நாதமுனியின் பேரன் ஆவார்.
பகவானின் பார்வை தம் மேல் திரும்பியதும் அந்த ஆளவந்தார் என்ன சொன்னார் தெரியுமா...?
"நான் ரொம்ப சிறியவன்; எளியவன்.  ஆனால் என் உருவத்தைப் பாராதே.. பகவானே,
என்னுடைய தாத்தாவுக்காக என்னை கடாஷித்து அனுக்கிரஹம் பண்ண வேண்டும்..." என்று கேட்டுக் கொண்டாராம்.  

இந்த உலகத்திலே பொதுவாக உறவுகளை உதறிவிட வேண்டும்.  தேக சம்பந்தம் கூடாது என்று நாம் பேசினாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விதிவிலக்கு இருக்கிறது.  உத்தம அதிகாரிகளின், ஆசார்யர்களின் தேக சம்பந்தம் நமக்கு அருள் செய்கிறது என்று ஏற்கிறோம்.
உயர்ந்த ஆசார்யரின் சம்பந்தம் மட்டும் ஏற்பட்டால் எப்பேர்ப்பட்ட உயர்நிலையையும் நாம் அடைந்து விடலாம்.
புண்யாத்மாக்களாயிருந்தாலும் சரி;  பாவாத்மாக்களாக இருந்தாலும் சரி, ஆசார்ய சம்பந்தம் பெற்றால்தான் உயர்ந்த கதியை அடையலாம்.
ஒரு காலத்திலே ஷத்ரபந்து என்று ஒருவன் இருந்தான்.  அவன் திருடுவதையே தொழிலாகக் கொண்டு இருந்தான்.  போகிற, வருகிறவர்களை அடித்துப் போடுவான்.  வழிப்பறி செய்து அவர்களுடிய செல்வத்தை எல்லாம் மூட்டை கட்டித்  தன் வீட்டுக்கு கொண்டு போவான்.  இப்படி அவன் திருட்டுத் தொழில் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள், நாரதர் தம் வீணையை மீட்டிக் கொண்டு அந்த வழியாய் வந்தார்.
"நீ இவ்வளவு தூரம் மூட்டை மூட்டையாய்க்  கட்டிக் கொண்டு போய்  மனைவி மக்களுக்கெல்லாம் கொடுக்கிறாயே... கூடவே இன்னொரு மூட்டை வருகிறதே, அது உனக்கு தெரியுமா...? என்று கேட்டார்.
அவன் மேலும் கீழும் பார்த்தான்.  "அதென்ன மூட்டை சுவாமி? நான் எடுத்துக் கொண்டு போகிற மூட்டையை தவிர வேறு மூட்டை நான் பார்த்ததேயில்லையே, ஒரு நாளும் பார்த்ததேயில்லையே" என்றான்.
நாரதர் சொன்னார்: "அது பார்க்கக்கூடிய மூட்டை இல்லை;  பாவம் என்கிற மூட்டை அது!  இந்தப் பண மூட்டையை எல்லாம் உன் வீட்டிலே கொண்டு போய்க்  கொடுக்கிறாய்;  மனைவி, மக்களும் சுற்றமும் அதைப் பங்குபோட்டுக் கொள்கிறார்கள்.  அவர்களிடம் போய்க் கேள்.  இந்த செல்வ மூட்டை போலவே பாவ மூட்டை ஒன்று இருக்கிறது.  அதையும் அவர்கள் பங்குபோட்டுக் கொள்ளத் தயாரா என்று கேளேன்" என்றார் "சரி சுவாமி; கேட்கிறேன்" என்று புறப்பட்டுப் போனான் அவன்.

ந்தக் கதையைப் படிக்கும்போதே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.  இவ்வளவு தூரம் வழிப்பறி செய்கிற துராத்மா இப்படிப் பொறுமையாக இருந்து முனிவரின் உபதேசத்தைக் கேட்டு நடப்பானா;  முதலில் அவர் சொல்வதை அவன் பொறுமையாகக் கேட்க வேண்டும்;  அப்புறம் செயல்படுத்த வேண்டும்;  அதன் பிறகு பாடம் கற்றுத் திருந்த வேண்டும்.   இது சாத்தியமா...?
சாதுக்கள், மாகான்களின் தரிசனம், தொடர்பு எப்படிப்பட்டவரையும் மாற்ற முடியும் என்பதையே இக்கதை காட்டுகிறது.
ஒரே கணத்தில் ஷத்ரபந்து சிந்தனை வயப்பட்டான்.  மனம் தணிந்து, பத்னியிடம் போய்க் கேட்டான்.
"பாவ மூட்டையில் பங்கு எடுத்துக் கொள்வாயா"?
மனைவி சொன்னாள்: நீங்கள் பார்த்தா - அதாவது பாரத்தை தாங்குபவர்.  நியாயமாய்ச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு,  நீங்கள் அக்கிரமமாக சம்பாதித்தால் அந்த பொருளிலே தான் எங்களுக்குப் பங்கே ஒழிய பாவத்திலே பங்கு கிடையாது: என்று சொல்லிவிட்டாள் அவன் குழந்தைகளும் அதையேதான் சொன்னார்கள்!
திரும்பி நாரதரிடம் வந்தான் திருடன்.  நாராயண மந்திரத்தை அவரிடத்திலே உபதேசமாகக் கேட்டான்.  அவனுக்கு மோக்ஷமே கிடைத்து விட்டது!
நாரதர் சம்பந்தம் மட்டும் அவனுக்கு வாய்த்திருக்காவிட்டால், இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா?

புண்டரீகர் என்று ஒருத்தர்.  "அனந்த பத்மநாபனை எங்கே பார்க்கலாம்" என்று கேட்டாராம் அவர்.   சமுத்திரத்திலே தான் அவர் இருப்பார் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.  உடனே புண்டரீகர் சமுத்திரத்துக்குள்ளேயே நடந்து போக ஆரம்பித்தார்!.   கழுத்து வரை ஜலம் வந்து விட்டது.  மேலே போக முடியாத நிலை.
பார்த்தார் புண்டரீகர்... சமுத்திர ஜாலம் முழுவதையும் இறைத்து எடுத்துவிடலாம் என்று இறைக்க ஆரம்பித்தார்!  அப்போதும் நாரதர்தான் அங்கு வந்து கை கொடுத்தார்.
"இதை இந்தக் காரியத்தை உடனே நிறுத்து,  இப்படி ஜலத்தை இறைத்து அவனைப் பார்க்க முடியாது,  என்னுடன் வா" என்று திருக்கடன்மலை (மகாபலிபுரம்) என்கிற ஷேத்திரத்துக்கு புண்டரீகரை அழைத்துப் போனார் நாரதர்.
அங்கே பார்த்த பெருமாளின் கோலத்தைக்  கண்டு ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார் புண்டரீகர்.  வரக்கூடியவர்களை, "வாருங்கள், வாருங்கள்" என்று வரவேற்கும் தோற்றம், அங்கே எம்பெருமானுக்கு.  அதைக் கண்டு மகிழ்ந்து ஆயிரம் தாமரைப் புஷ்பங்களாலே அர்ச்சனை பண்ணினார் புண்டரீகர்.
கோணலான மார்க்கத்திலே போனவரை மாற்றி, குறுக்கு வழியிலே பகவானிடத்திலே கொண்டு சேர்த்து விட்டார் நாரதர்.  ஆகையால், ஆசார்ய சம்பந்தம் மட்டும் இருந்து விட்டால் எப்பேர்ப்பட்டவரும் உயர்கதி அடையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ப்படி வழிகாட்டி உயர்கதி அடையச் செய்யவல்ல ஆசார்யர்களுள் ஒருவராக இருந்தார் சுக்ராச்சார்யார்.
மாண்டு போனவர்களைக் கூட எழுப்பி உட்கார வைக்கும் சக்தி அவருக்கு இருந்தது!
"சுகர தசை"என்று சொல்கிறோம்.  அந்த கால கட்டம் ஒருவரது வாழ்க்கையிலே அமைந்தால் எல்லா உயர்வுகளும் அவனுக்கு அந்த நேரத்திலே ஏற்படும்.  அனுகூலமான காலம் அது!
அது போலதான் சுக்ராச்சார்யாரை குருவாகக் கொண்டவ்வனுக்கு அனுகூலங்கள்  அவருக்கு எல்லா மந்திரங்களும் தெரிந்து இருந்தன.  அவற்றிலே ஒரு மந்திரம் ம்ருத சஞ்சீவனி மந்திரம் என்று சொல்லப்படுகிறது.  இது சுக்ராச்சாரியாருக்கு ரொம்ப நன்றாகத் தெரியுமாம்.  தேவ குருவான பிரஹஸ்பதிக்குக் கூட தெரியாதாம் இந்த மந்திரம்.   மாண்டு போனவர்களையும் பிழைக்க வைக்கவல்ல மந்திரம் அது.
இப்படிச் சொன்னால், ஒரு சந்தேகம் வரும்.  மாண்டு போனவர்களை எழுப்புவது ஒரு மந்திரத்தால் சாத்தியமானால் அந்த மந்திரத்தை அறிந்தவர்கள் அதைச் சொல்லி பலபேரின் துயரைப் போக்கலாமே.  அடியேன் போன்றோர் உபன்யாசம் பண்ணுவதற்குப் பதில் இந்த உபகாரத்தைப் பண்ணலாமே என்று கேட்கத் தோன்றும்.
ஒரு விஷயத்தை நன்றாக நாம் கவனிக்க வேண்டும்.  மந்திரம் பலருக்கு தெரிந்து இருந்தாலும் அது பலித்தது சுக்ராசார்யாருக்கு மட்டும் தான்.  வேறு ஒருத்தருக்கும் அது பலிக்கவில்லை!
காரணம்...?
இந்த மந்திரத்தை மிகவும் சிரமப்பட்டு சித்தி செய்துகொண்டார் அவர்.
இப்போது அதே மந்திரத்தை நாம் சொன்னால் கணம் போதவில்லை!  சக்தி போதவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
"இந்திரா ஆச்ராவாயா" என்று யாகம் பண்ணும் போது இந்திரனை அழைப்பதுண்டு.  அப்படி மும்முறை அழைத்தும் அவன் நேரில் வரவில்லையானால் யக்ஜத்தையே முடித்துக் கொள்ள வேண்டுமாம்!  ஏனென்றால், முறையாக முழு மனசுடன் கூப்பிட்டால் அவன் வந்தே தீருவான்.  அவன் வராவிட்டால், போதுமான பலத்துடன் நாம் அழைக்கவில்லை என்றே அர்த்தமாகிறது!
 
பிரும்ம வித்துக்களும் பெரிய மகான்களும் மந்திரத்திலே பூர்ண சித்தி அடைந்தவர்களும் கூப்பிட்டால் தேவதைகள் எதிரில் காட்சி அளிப்பார்கள். மந்திரங்களின் பரிபூரண பலனை அவர்கள் அடைவிப்பார்கள்.  அப்படிப்பட்ட மகான்கள் வரிசையில் வந்தவர் சுக்ராச்சார்யார்.  என்ன ஆச்சர்யம்!  அந்த யக்ஜத்தின் ஹோம குண்டத்தில் இருந்து வில், அம்புராத்தூணி என்று விதவிதமான ஆயுதங்களும் கவசங்களும் வெளிப்பட்டன.  "இவற்றை வைத்துக் கொண்டு நீ உயர்நிலை அடைவாய்" என்று பலி சக்ரவர்த்தியிடம் அவற்றைக் கொடுத்து மந்திரம் ஓதி அனுப்பினார் சுக்ராச்சார்யார்.
 
 அந்த ஆயுதங்களைக் கொண்டு தேவலோகத்தையே சூன்யமாக்கினான் மகாபலி.  அப்படி சமஸ்த தேவதைகளையும் நடுங்கச் செய்யும் சாமார்த்தியம் ஆசார்ய அனுக்கிரகத்தினாலே மகாபலி சக்ரவர்த்திக்கு கிடைத்தது.




(தொடரும்)



Saturday, October 12, 2013

PART -1, Chapter - 23

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 23

விச்வ சப்தத்தினால் அறியப்படக்கூடியவன் வாமனன் என்கிறார்கள் வித்வான்கள்.
வித்வான் என்பவர் யார்...? எந்த மந்திரத்தினால் ஒரு தேவதை பேசப்படுகிறதோ அந்த தேவதையை எதிரில் கொண்டு வந்து நிறுத்தக்கூடியவன் வித்வான்.  மந்திரங்களை வெறுமனே ஒப்பிப்பவன் வித்வான் அல்ல...  பரப்பிரும்மத்தைக் கொண்டு வருவாயா...? காட்டுவாயா...?  அவ்வாறு கொண்டு வந்து காட்டக்கூடியவன் வித்வான்.
நாம் அப்படியில்லை.  பெரியவர்கள் சொல்லித் தந்த மந்திரங்களைத் திருப்பிச் சொல்கிறோம், அவ்வளவுதான்.  அந்தக் காலத்திலேயே அவர்கள் அனுஷ்டித்ததைப் போல் கடும் விரதங்கள் நோன்புகளை நாம் அனுஷ்டிப்பதில்லை.  எல்லா பதார்த்தங்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அன்றைக்கு அந்த வித்வான்கள் உபாசித்து, தேவதைகளைக் கொண்டு வந்து நிறுத்தி வரம் கேட்டார்கள்  அப்படியே கிடைத்து, சுபிட்சம் நிலவியது.
அப்படிப்பட்ட வித்வானின் உபாசனையினாலே பகவான் சர்வவியாபியாய், விச்வவியாபியாய் திரிவிக்கிரமனாய்  அவதாரமெடுத்துப் பரவி நின்றான்.  அந்த விச்வத்தை ஆவிர்பவித்து எவர் யக்ஞம் செய்கிறாரோ அவருக்குப் பூரண பலம் கிடைக்கிறது. 
க்ஞம் செய்ய பலவித ரித்விஜ்கள் இருப்பார்கள்.  அவர்களுக்கு தட்சிணை கொடுக்கப்பட வேண்டும்.  அதைக் கொடுத்தால்தான் யக்ஞம் பூர்த்தியாகிறது.  யக்ஞம் செய்பவர்கள்  எல்லாம் விசாரமில்லாமல் இருக்க வேண்டுமல்லவா...?  அது என்னாச்சு?  இது என்னாச்சு? என்று எண்ணம் வந்தால் யக்ஞம் கெட்டுப் போய்விடும்.
ஆகையினாலே, யக்ஞத்துக்கு ரித்விஜ்களை அழைக்கும்போது, ஒரு பகுதி தட்சிணையை இப்போதே கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியே அழைப்பார்களாம்.  அதை வாங்கி அவர்களும் கிரஹத்திலே வைத்து விட்டு வந்து யக்ஞத்தை நடத்திவிட்டு பிறகு பூரண தட்சிணை வாங்கிக் கொள்வார்களாம்.
லௌகிகத்திலே இதைத்தான் அட்வான்ஸ் என்று சொல்கிறோம்.!
இப்படியிப்படி யக்ஞ கர்மா நடத்த வேண்டும் என்று ஆபஸ்தம்பர் சொல்கிறார்.  எதை தட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்றால் குள்ளமான பசுவை கன்றோடு கொடுக்க வேண்டுமாம்!
ஏன்? உயரமான பசுவைக் கொடுக்கக் கூடாதா என்றால், பகவான் வாமன ரூபியான எம்பெருமானை நாம் நினைப்பதற்காகத்தான்  குள்ளமான பசுவாகப் பார்த்து தட்சிணையாகக் கொடு என்கிறது வேதம்!
ஆகையினாலே குள்ளமான பசுவைக்  கொடுக்க வேண்டும்.  அப்படிக் கொடுக்கும் ஒரு பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள், இவனுக்கு (கொடுப்பவனுக்கு) சுவர்க்க லோகத்திலே வாசம் கிடைக்குமாம். 
இவ்வாறு குள்ளப் பசுவால் நினைவூட்டப்படுகிற வாமன ரூபியாணவனே உலகத்தை அளந்தவனும் ஆகிறான்.  உலகை அளந்தவனே என்று திரும்பத் திரும்ப அவனைக் கொண்டாடுகிறது வேதம்.  
நர்மதை நதி தீரத்துக்கு விச்வம் போனது என்று சொன்னேன் அல்லவா...? அது வாமன ரூபனாய்த்தான் அங்கே முதலில் எழுந்தருளியது.

வாமன அவதாரம் விச்வ சப்தத்தினால் அறியப்படுகிறது என்று அதன் உயர்வுகளை எடுத்துச் சொல்லும்போது நரசிம்ஹ அவதாரத்தை உயர்ந்ததுன்னு சொன்னீர்களே என்று கேள்வி வரும்.  இனிமேல் சொல்ல போகிற ராமர், கிருஷ்ணர் அவதாரங்களையும் அப்படித்தான் உயர்ந்தவையாகச் சொல்லப்  போகிறேன்.  அதனாலே, வாமன அவதாரமே மகிமை குறைந்தது போய்  விடாது.  எல்லா அவதாரங்களுமே உயர்ந்தவைதாம்.
வாமன அவதாரத்துக்கு வருவோம்.  அந்த அவதார மகிமையைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆசார்ய (குரு) மகிமை பற்றித்  தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆசார்யரைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை  என்கிறார் சுவாமி தேசிகன்.   பகவானை எப்படியெல்லாம் உபாசிக்கிறோமோ அப்படியெல்லாம் ஆசார்யனையும் உபாசிக்க வேண்டும் என்கிறது உபநிஷத்.
ஆசார்யன் என்றால் யார்...?
நிறைய சாஸ்திரத்தைப் படித்தவர் ஆசார்யன்.  எல்ல வித்யா ஸ்தானங்களும் அவர் நுனி நாக்கிலேயே தாண்டவமாடும்.  எதைக் கேட்டாலும் சொல்லக்கூடியவர்.  நல்ல வாக்கு உடையவர்.
வி
த்யை என்பது நிரந்தரமானது.  பொருள் (செல்வம்) அப்படி இல்லை.  வரும் - போகும்.  நாளை வரப்போகும் செல்வத்தை நம்பி இன்று ஒரு காரியம் பண்ண முடிகிறதா?
இப்படிப்பட்ட நிரந்தரமான வித்யைகள் நிரம்பப் பெற்றதனால் மட்டுமே ஒருவர் ஆசார்ய ஸ்தானம் வகித்து விட முடியாது.  தாம் எடுத்துச் சொல்லும் விஷயங்களை அனுஷ்டிப்பவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.  அப்படி அனுஷ்டிக்காதவர் ஆசார்யராக இருக்கவே முடியாது.
"கிருஷ்ணம் வந்தே ஜகத் கு
ரும்" என்று பிரார்த்தனை பண்ணுகிறோம்.  ஜகத்துக்கெல்லாம் குரு அவன்.  எல்லா சாஸ்திரங்களிலும் குருவாக, பரமாசார்யனாகச் சொல்லப்படுகிறவன் நாராயணன்.   அந்த நாராயணன் கூட கீதாசாரியனாக கிருஷ்ணாவதாரத்திலே உபதேசம் செய்ததை அப்படியே ராமவதாரத்திலே நடத்திக் காட்டினான். 
எனவே, கற்றதை அனுஷ்டித்து நடத்திக் காட்டி பிறருக்கு உபதேசிப்பவ
ன்தான் ஆசார்யன்.  அவர் எதை மனத்தால் நினைக்கிறாரோ அதையே நாவால் சொல்ல வேண்டும்.  எதை நாவால் சொல்கிறாரோ அதையே நடத்திக் காட்ட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்துக்காக எத்தனையோ மருந்துகளைச் சாப்பிடுகிறோம்.    ஆனால், அதெல்லாம் மருந்தில்லை என்கிறது சாஸ்திரம்.  பின்னே எது நல்ல மருந்து...?
நினைவு, சொல், செயல் என்று மூன்றும் ஒன்றாக வாழ்க்கை நடத்துவதே உயர்ந்த மருந்து.  அப்படியில்லாமல் நினைப்பது ஒன்று, சொல் வேறு, நடப்பது வேறு என்று இருந்தால்... அப்படிப்பபட்டவர்கள் துராத்மாக்கள்!  மகாத்மாக்களுக்கு இந்த மூன்றும் - சிந்தை, சொல், செயல் - ஒன்றுபட்டிருக்கும்.
அப்படிப்பட்ட மகாத்மாக்களை ஆசார்யராக அடைவதால் நமக்கு என்ன பலன்...?  அதற்கு ஒரு கதை சொல்கிறேன்.

திருப்பதி மலையை எல்லோரும் பார்த்திருக்கிறோம்.  இங்கே ஒரு சிகரம்; அங்கே ஒரு சிகரம்.  ஒரு சின்ன எறும்பு... ஒரு சிகரத்தில் ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.  அதற்கு, அதோ.. அந்த மலைச் சிகரத்துக்குப் போக வேண்டும் என்று ஆசை!
எவ்வளவு அல்பமான ஜீவன் அந்த எறும்பு!  ஒரு மலைச் சிகரத்தில் இருந்து மற்றொன்றுக்கு ஏறிப் போவதற்குரிய அங்கங்களோ, அவயங்களோ அதற்கு இல்லை.  ஆனால் அதுவும் அந்த சிகரத்தை அடைந்தது.  எப்படி...?
எப்படியென்றால், ஒரு சிங்கம் அந்த இடத்திலே மலைக்கு மலை தாவி ஓடிக் கொண்டிருந்தது. எறும்பு, தான் நினைத்த மாதிரியே சிங்கமும் இந்த சிகரத்திலிருந்து அந்த சிகரத்துக்குப் போக இருப்பதைப் பார்த்தது.  உடனே இதுதான் சமயம் என்று அங்கே இருந்து போய்,  அந்த சிங்கத்தின் சரீரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.  சிங்கம் சிகரத்துக்குச் சிகரம் தாண்டியபோது, எறும்பும் தாண்டி விட்டது.
ஆகையினாலே, ஓர் ஆசார்யனின் திருவடியை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோமானால், சம்சார சாகரத்தை அவர் தாண்டும்போது நாமும் கூடவே தாண்டி விடுகிறோம்!  அந்த மாதிரி ஒரு உயர்ந்த கதியை நமக்கு அடைவிக்கக் கூடியவர்கள் தான் ஆசார்யர்கள்.
தனத்தை உடையவனை தனவான் என்கிறோம்  குணம் உடையவனை குணவான் என்கிறோம்.  ஆனால், எப்படிப் பட்டவனும் ஆசார்ய சம்பந்தத்தோடு தான் இருக்க வேண்டும்.  அது மட்டும் இல்லாமல் போனால் வேறேது இருந்தும் பயனில்லை.
 

ஆசார்யவான் புருஷோ வேத - ஒரு நாளும் தனித்து இராதே.  ஆசார்ய சம்பந்தத்தோடுதான் நீ இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
ஆகாசத்தில் பிரகாசிக்கிறானே சூரியன்...அவன் கிரணங்கள் பட்டதுமே தாமரை புஷ்பமானது விகசிக்கிறது.  எப்படி விகசிக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
ஒரு பெரிய தாடகத்திலே தீர்த்தம் நிறைய இருந்தால், சூர்ய ரச்மி பட்டவுடனேயே தாமரை விகசிக்கிறது.  ஆனால், தாடகத்திலே தீர்த்தமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்;  சூர்ய ரச்மி வந்து பட்டால்...? அந்தத் தாமரையானது வாடி வதந்கித்தான் போகுமே ஒழிய விகசித்து மலராது!
அப்போ, தாமரை மலர்வதற்கு முக்கியமான பொருள் தீர்த்தம்.  தீர்த்தத்திலே இருக்கிற தாமரையை மலரச் செய்பவன் சூர்யன்.  அதுபோல ஆசார்ய சம்பந்த்தத்தைப் பெற்ற ஜீவனை பரமாத்மா அனுகிரஹித்து விகசிக்கச் செய்வான்.  தாமர - ஜீவன்.  தீர்த்தம் -
ஆசார்யன்.  சூர்யன் - பரமாத்மா.  தீர்த்த சம்பந்தம் போலே, எப்போதும் ஆசார்ய சம்பந்த்தம் வேண்டும்.  மோஷம் பெறுவதற்கு இந்த சம்பந்தம் கட்டாயம் வேண்டும்.
யோகத்திலே கெட்டிக்காரரான ஒரு ஆசார்யர் இருந்தார்.  சமாதி நிலையிலே அவர் அமர்ந்தாரானால் எம்பெருமானை நேருக்கு நேரே பார்க்கக்கூடியவர்.  ஒரு நாள் அப்படி அவர் யோகத்திலே இருந்தார்.  பகவானை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.  ஆனால், வழக்கமாக இவர் பார்வையை நேருக்கு நேராகச் சந்தித்த பகவானின் நோக்கு அன்று மட்டும் வேறு திசையில் திரும்பி இருந்தது. அந்த யோகிக்கு இந்த மாற்றத்தைக் குறித்து வியப்பும் விசாரமும் உண்டாயிற்று. 


பகவானின் பார்வை மாறியதற்குக் காரணம் என்ன..?
(தொடரும்)





 










Thursday, September 5, 2013

PART -1, Chapter - 22

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 22

ட்டபல்லி க்ஷேத்திரத்தில் குகைக்குள்ளே வாசம் பண்ணுகிறான் நரசிம்ஹன். யாரேனும் ஒருத்தர் தீவட்டி எடுத்துப் போய் வழிகாட்டினால்தான் உள்ளே போகலாம்.  அந்த மாதிரி குகை...   வேதாந்த குகைக்குள்ளே தத்துவமாய் அடங்கியிருப்பவனை ஓர் ஆசார்யரின் வழிகாட்டலில்தான் சேவிக்க முடியும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறான். அப்படி ஒருத்தர் வழிகாட்ட உள்ளே போய் விட்டோமானால், இன்றைக்கெல்லாம் சேவிக்கலாம். எம்பெருமான் வடிவழகைக் கண்டு ஸ்தோத்திரம் பண்ண எல்லா துன்பமும் போய்விடும் என்கிறது வேதம்.

எப்பொழுதும் பகவானின் பெருமையையே பேசணும் என்று வேதம் காட்டும் வழியைத்தான்  ஆசார்யர்களும் காட்டுகிறார்கள். எம்பெருமானை உபாசனை பண்ணு -  அப்படிப் பண்ண முடியாவிட்டால் அவனை இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே வரும் "விச்வம்" என்கிற சப்தத்தைச் சொல்லி அவன் பெருமையை நினை!
கடினமான கனத்தை (வேதம்) அத்யயனம் பண்ணி மகரிஷிகளைப் போல சிரமப்பட்டு, சரீரத்தை வருத்தி, ஊன் வாட வாட உண்ணாதிருந்து அவனை வேண்டின காலம் மாறி விட்டது.
இப்போது சிரமமில்லாமல் காரியம் செய்ய வலிகள் ஏற்பட்டிருக்கின்றன. அடியேன் பண்ணுகிற இந்த உபன்யாஸத்தையே எடுத்துக் கொள்வோம்.  இதிலே என்ன சிரமம்.  உடம்பு சிரமப் படாமலிருக்க, மின் விசிறி சுற்றுகிறது.  குரல் எல்லோருக்கும் கேட்கும்படியா ஒலிபெருக்கி இருக்கிறது.
ஆனால் ஆதி காலத்திலே முனிவர்கள் பஞ்சாக்கினியின் மத்தியில் நின்று . பகவானை உபாஸித்திருக்கிறார்கள்.   நான்கு பக்கமும் நான்கு அக்னி தகிக்கும்;  தலைக்கு மேலே சூரியன்;  கடும் வெயில் காலம் - சித்திரை,  வைகாசியிலே இது நடக்கும்.  குளிர் காலத்தில் தனுர் மாசத்திலே - கழுத்தளவு ஜலத்திலே நின்று கொண்டு உபாஸனை பண்ண வேண்டும்!  நமது இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவையானதாலே அவற்றை நிக்ரஹம் பண்ணி, ஊன் வாட வாட உண்ணாதிருந்து உயிருக்குக் காவலிட்டு மஹரிஷிகள் எல்லாம் பகவானைக் கண்டார்கள்.  
இப்போது அந்த சக்தியெல்லாம் நமக்கில்லை என்பது ரொம்ப ஸ்பஷ்டமாகத்  தெரிகிறது. கால வெள்ளோட்டத்தில் வேக வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம்...
"அப்படியானால் வேத அத்யயனமே நடப்பதில்லையா? என்று  கேட்டால், நடந்து  கொண்டுதானிருக்கிறது.   மகான்கள் பலர் அதைப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  னால், நம்மால் பண்ண முடியாது என்கிறவர்கள் சுலபமாய் அவனை இந்த விச்வ சப்தத்தினாலே ஆராதித்தால், ஒரு புஷ்பத்தை எடுத்துப் போட்டால்.. அந்த வேத உபாஸனையின் பயனைச் சுலபமாய் அடையலாம்.
விச்வ யோனி; விச்வத்துக்கெல்லாம் காரணமானவன் என்று அறியப்படுகிற அந்த நரசிம்ஹனை ஆராதித்தவர்கள் வேறு நினைப்பே மனத்தில் கொள்ளமாட்டார்கள்.

விச்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிறவன் நரசிம்ஹன் என்று பார்த்தோம்.  அந்த விச்வமாகிய பரபிரும்மம் ஒரு முறை அசுவமேத யாகத்துக்குப் போயிற்று!    எங்கே...? நர்மதா நதி தீரத்திலே நடந்தது அந்த அசுவமேத யாகம்.  
ஒவ்வொரு நதிக்கும் ஒரு பெருமை உண்டு.   நர்மதா  நதியின் பெருமை கூர்ம புராணத்திலே பேசப்பட்டிருக்கிறது.  சந்தியாவந்தனத்திலே இந்த நதி குறித்த தியானம் வருகிறது.   நர்மதா நதியை தியானம் பண்ணினால் நம் பக்கத்திலே விஷ ஜந்துக்களே வராது.
பிரஹலாதனின் பிள்ளை விரோசனன்.  இந்த விரோசனின் மகன் வைரோசனன்.  இவனுடைய பிள்ளை மகாபலி.   அவன் நர்மதா நதிக்கரையிலே அசுவமேத யாகம் பண்ணினான்.  
அசுவமேத மகா மந்திரம் என்ற ஒன்று அந்த யாகத்தின்போது ஜபிக்கப்படும்.  அந்த மகா மந்திரத்தைக் கேட்டாலே மகாபுண்ணியம்.  அதனால்தான் இப்போது கலிகாலத்திலும் நம்மால் அசுவமேதயக்ஞம் பண்ண முடியாவிட்டாலும், அந்த மந்திரத்தை மட்டும் பாராயணம் பண்ணுவது தொடர்ந்து நடைபெறுகிறது.
சுவாமி தேசிகன், எல்லா மகான்களும் ஒருசேர ஏகாதசியன்று அசுவமேத மந்திரத்தைப் பாராயணம் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.
அஹோபில ஸ்ரீமத் அழகிய சிங்கர் அசுவமேத மந்திர பாராயணத்தை நடத்தி வைக்கிறார்.
இப்படியொரு மந்திரத்தை உள்ளடக்கிய யாகம் என்றால், அது எத்தனை சிரேயஸ் உண்டு பண்ணக்கூடியது!
இந்த அசுவமேத யாகம் என்பது ரொம்ப பெரிய கர்மா என்கிறது வேதம்.
ஓர் அரசன் (மகாபலி அல்ல.. வேறொருவன்..) சங்கல்பம் செய்து கொண்டு இதை நடத்திக் கொண்டிருக்கிறான்.  நடத்திவைக்கும் வேத வித்துக்கள் சர்வ சிரமங்களையும் அனுபவித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பூர்ணாஹூதிக்கு முன்னே அங்க ஹோமம் நடக்கிறது.  48 நாட்களாக சர்வ ஜாக்கிரதையாக ஹோமத்தை நடத்திய வேத விற்பன்னருக்கு அன்றைய தினம் தூக்கம் வந்து விட்டது!  அவருடைய கை மட்டும் அனிச்சையாக திரவியங்களை எடுத்து, அனிச்சையாக அக்னியில் சேர்த்த வண்ணம் இருக்கிறது.
யாகம் நடத்தும் போது தூங்கக் கூடாது என்பது சாஸ்திரம்.  நடத்துபவரும் தூங்கக்கூடாது, அதைப் பார்ப்பவரும் தூங்ககூடாது.  ஆனால், அப்போதுதான் கட்டாயமாகத் தூக்கம் வரும்!   உணவு கொள்ளாமல் விரதமாக இருந்து யாகம் நடத்தும் போதே தூக்கம் வரும்!  அதைக் கட்டுப்படுத்தித் தொடர வேண்டும்.
அரசன் பார்த்துக் கொண்டே இருக்கும்போது, யாகம் பண்ணுகிறவர் தூங்கினார்!  அவரை எப்படி எழுப்பலாம் என்று பார்த்த மன்னன், செங்கோலால் அந்த வேத விற்பன்னரைத் தட்டுகிறான்..
அந்தத்  தூக்கத்திலும் அவருக்கு ஸ்வப்னம் வந்திருக்கிறது!  புலி துரத்துகிற மாதிரி ஸ்வப்னத்தில் வந்த மன்னன் செங்கோலைக் கொண்டு முதுகில் ஒரு குத்து குத்த, ஸ்வப்னத்தில் புலி அப்போது தான் அவர் மேல் பாய..
"ஹா! புலி!" என்று அலறியபடி பிரதான அக்னி குண்டத்திலே விழுந்து விட்டார்.  பஸ்மமாகப் போய் விட்டார்!
அசுவமேத யாகம் பண்ணினால் பிரும்மஹத்தி தோஷம் நீங்கும் என்கிறது வேதம்.  ஆனால், இந்த அரசனோ, அசுவமேத யாகம் பண்ணப் போய் பிரும்மஹத்தியை மூட்டை கட்டிக் கொண்டான்.
யாகத்திலே இப்படியெல்லாம் தவறுகள் நடந்தால் கர்த்தா நாசத்தை அடைவதுடன் பார்க்கிறவர்களும் கஷ்டத்தை அடைகிறார்கள்.
ஹோமத்திலே புகை இருக்கக்கூடாது.  அக்னி ஜொலிக்காத போது  மேலே ஹவிஸைப் போட்டுக் கொண்டேயிருக்கிறார் ஒருத்தர்.  இவ்வாறு போடுகிறவர் குருடராகிறார்!  அதைப் பார்க்கிறவர்களுக்கும் பார்வை போகிறது!
ஹோம குண்டத்தில் நான்கு புறமும் தர்ப்பை போடுவது உண்டு.  இப்படி நாலு பக்கமும் போடுகிற பரிஸ்தரணத்திலே முப்பது முக்கோடி தேவர்கள்  உட்கார்கிறார்களாம்.   நமக்கும் இந்த தேவர்களுக்கும் இடையே பூதகணங்கள் உட்கார்ந்திருக்குமாம்.
அதனால்தான் பரிஸ்தரணத்துக்கு வெளியே எதுவாவது விழுந்து விட்டால் அதை அக்னியிலே சேர்க்கக்கூடாது என்று சொல்வார்கள்.   அப்படிச் சேர்த்தால் யாகம் கெட்டுப் போய்விடும்.  ஏனென்றால் இடம் தப்பி விழும் பொருள் பூதகணங்கள் உட்காரும் இடத்தில் விழுகிறது.  அதைக்கூட பூதகணங்களுக்கேன்றே அப்படி விழும்படியாகப் பண்ணுவது அக்னி பகவான் தான்!
பூர்வ காலத்திலே மகரிஷிகள் ஹோம குண்டம்  தயாரித்து, கையைக் காண்பித்தாலே அக்னி உண்டாகி விடும்.  இது மிகவும் உயர்ந்த நிலை;  இரண்டாவது நிலை, அரணியைக் கடைந்து அக்னி உண்டாக்குவது;  மூன்றாவது நிலை, ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி அடுப்பிலிருந்து தணல்கள் எடுத்து  வந்தோ, கற்பூரத்தை ஏற்றியோ - அக்னி உண்டாக்குவது.
முறையாக பண்ணப்படும் யாகத்தில் மூன்று அக்னிகளுக்கிடையே பகவான் உபாசிக்கப்படுகிறான்.  அக்னிக்கு இடையிலே பரமாத்மா காட்சியளிக்கிறான்.  
இப்படி முறையாகச் செய்யப்படும் அசுவமேத மகா யாகத்திலே உலக ஷேமத்தைப் பிரார்த்திக்கும் மந்திரம் இருக்கிறது.  அதனால் தான் தெற்கே பித்ரு தேவதா  காலங்களிலும், வடக்கே மாங்கல்ய தாரணத்தின் போதும் இதைச் சொல்கிறார்கள்.
தினமும் 1008 காயத்ரி சொல்வதால் இரண்டு புருவங்களுக்கும் மத்தியிலே தேஜஸ் உடையவர்களான வேத வித்துக்கள் இந்த அசுவமேத யாகத்தைச் செய்ய வேண்டும்.
சத்புத்ரன் பிறக்க  வேண்டியும்,மழை வேண்டியும், தானியங்களின் விளைச்சல் வேண்டியும், இந்த யாகம் செய்யப்படுகிறது.  உலகத்தில் உள்ள எல்லோருக்கும் யோக ஷேமம் வேண்டிச் செய்யப்படுகிறது.
யோகம் என்பது வேறு;  ஷேமம் என்பது வேறு. 
கிடைக்காதவை எல்லாம் கிடைப்பது யோகம்.  
கிடைத்த செல்வங்கள் எல்லாம் தங்கி நிலைத்திருப்பது ஷேமம்.

உலகத்தில் அத்தனை பேருக்கும் யோகமும், ஷேமமும் உண்டாகட்டும் என்கிறது அந்த அசுவமேத யாகம்.   இப்படிப்பட்ட உசத்தியான யாகத்துக்குத்தான் அந்த விச்வம் போனது..!
 (தொடரும்)