Saturday, December 22, 2012

PART-1, Chapter-8


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 8

ஒரு பானை இருக்கிறது அது காரியம்.  அதாவது உண்டான வஸ்து.  அந்த வஸ்துவுக்கு - காரியத்துக்கு - மூன்று காரணங்கள். 
முதலாவது உபாதான காரணம்.  பானையை உருவாக்க எது மாறியதோ அது உபாதான காரணம்.  இங்கே பானையை உருவாக்கப் பயனான மண் உபாதான காரணம். 
அடுத்தது மனுஷ்ய சக்தி - அந்த சக்தி தானே பானையை ஆக்குகிறது? இது நிமித்த காரணம் எனப்படுகிறது.  பானையை உருவாக்கியவர் குயவர் நிமித்த காரணமாகிறார்.
குயவருக்குப் பானை செய்ய சக்கரம் வேண்டும்  ஒரு தண்டம் வேண்டும்.  இவை பானை செய்ய அவருக்கு உதவுவதால் சஹகாரி காரணம் எனப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் காரணங்களை ஆராய்ந்து கொண்டே போகலாம். இந்த உலகத்தைக் காரியமாக எடுதுண்டோமானால் பரமாத்மா அதற்கு உபாதான காரணமா? நிமித்த காரணமா? சஹகாரி காரணமா? என்று விசாரிக்கலாம்.
இதைப் பற்றி உபநிஷத் சொல்வதை ஆசார்யர்கள் எல்லாம் விவரிக்கிறார்கள். எல்லாக் காரணங்களுமாய்  அவனே இருந்து வருகின்றான். ஜகத் காரண வஸ்து அவன். பகவானே விச்வமாய் காட்சி அளிக்கிறான். 
தத்வம் அஸி என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் விச்வம் என்று சொல்லணும்.  அந்த விச்வத்தில் நடப்பனவற்றுக்கு எல்லாம் எத்தனை காரணம் சொன்னாலும் ஐந்தாவது காரணமாய் பரமாத்மா இருக்கிறான்.   இந்த உபந்யாஸத்தையே எடுத்துக் கொண்டோமானால், இதற்கு ஐந்து காரணம். 
முதலாவது, உபந்யாஸகரின் சரீரம்.  அது உபந்யாஸம் நடக்கிற இடத்துக்கு வந்து சேரணும்.
சரீரம் மட்டும் உபந்யாசத்துக்குக் காரணம் ஆகிடுமா?   சொல்கிறவனுடைய வாக்கு, கேட்கிறவனுடைய செவிப்புலன் என்கிற இந்திரியங்கள் இரண்டாவது காரணம்.
இந்த இரண்டுக்கும் மேலே, மூன்றாவது காரணம் மனசு. உடம்பு, இந்திரியங்களுடன் மனசும் கூடச் சேரணும்.
ஒருத்தர் ராத்திரி சொகரியமாய் தலையணை வெச்சுண்டு தூங்கறார்.  விடிஞ்சதும் பார்த்தா   தலையணை அடியிலே மூன்று பாம்பு.  அது இருக்கிறது மனசுக்கு தெரிஞ்சிருந்தால் தூக்கம் வருமோ?  மனசும் சேர்ந்து தூங்கினதால் தானே அவராலே தூங்க முடிந்தது. ஆகையினாலே எந்தக் காரியத்துக்கும் மனசும் கூடச் சேரணும்.
நாலாவதாக, சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மா காரணம்.  சாந்தோக்ய உபநிஷத்திலே ஒரு கதை உண்டு  உடம்பின் காது, மூக்கு, கண், வாய், எல்லாத்துக்கும் ஒரேயடியாய் பெரிய சண்டை வந்ததாம்.  எல்லாம் பிரும்மாவிடம் போய் "எங்களுக்குள் யார் பெரியவன்? நீங்களே சொல்லுங்கள்" என்றதாம்.  அதற்கு பிரும்மா சொன்னார் "நீங்கள் ஒவ்வொருத்தராக ஒரு வருஷ காலத்துக்கு தனித்தனியே சரீரத்தை விட்டு பிரிந்து போங்கள், யாரு விலகறதாலே சரீரத்துக்கு அதில் பாதிப்போ அவர் தான் உயர்த்தி". அப்படியே ஆகட்டும்னு முதலில் கண் ஒருவருஷத்துக்குப்  பிரிந்து இருந்ததாம்.  "தீய விஷயங்களைப் பார்க்காமல் நிம்மதியாய் இருந்தேன்" என்றார் உடம்புக்குரியவர்.
அதே போலக் காதும் மூக்கும் மற்ற இந்திரியங்களும் அவரை விட்டுப் பிரிஞ்சு போன போதும் கஷ்டமில்லாமல் இருந்தார்.
ஒரு நாள் அந்த உடலுக்குள் இருந்த பிராணன் புறப்பட்டுப் போனது.  அவ்வளவு தான்,  பிராணன் கிளம்பினதும் மற்ற எல்ல இந்திரியங்களும் மொத்தமாக புறப்பட்டுப் போய் விட்டன.
ஆகவே, எந்த ஒரு செயலுக்கும் பிராணன் நாலாவது காரணம் என்று தெரிகிறது. ஆனால் பிராணன் மட்டுமே தனித்துச் செயல்பட முடியுமா?  உடம்பும் இந்திரியங்களும் மனசும் ஆத்மாவுடன் சேரணும்.  அதோடு இன்னொரு காரணமும் சேருகையில் தான் பூரணத்துவம் உண்டாகிறது.  அது என்னவென்று பார்த்தால் அதுக்கு ஒரு கதை சொல்லலாம் - நடந்த சம்பவம்.
ஸ்ரீரங்கத்திலே எம்பார் காலட்சேபம் பண்ணுறார்.  அப்போ வடக்கு சித்திரை வீதிக்காரர் ஒருத்தர் திண்ணையிலே வீணாகக் காலத்தை போக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் எல்லோரும் அவரை, காலட்சேபத்துக்கு வரக் கூடாதா, இப்படி வீணா காலத்தைப் போக்கறீர்களே என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார்கள்  யார் கேட்ட போதும் அவர் மசியவில்லை; அப்படியே மறுபக்கமா தலையைத் திருப்பிக் கொண்டு விட்டார். இப்படியே பல நாட்கள் கழிந்தன.  திடீரென்று ஒருநாள் திண்ணைக்காரர் தாமே காலட்சேபத்துக்குக் கிளம்பி வந்தார்.
எல்லோரும் ரொம்ப மகிழ்ந்து போனார்கள். பிரவசனம் பண்ணின எம்பார் கேட்டார், "இத்தனை நாளா வராத இவர் இன்னைக்கு வந்திருக்கார் என்றால் அதற்கு யார் காரணம்? ஆசார்யார் காரணமா, அவரை வரச் சொல்லி வற்புறுத்திக் கூப்பிட்டவர்கள் காரணமா?  ஆசார்யார் காரணம் என்று நினைக்கிறவர்கள் கையை உயர்த்தலாம்.  ஆசார்யர்தானே எதிரிலிருப்பவருக்கு எவ்வளவு புரியும் என்று பார்த்து, அதற்கு ஏற்பச் சொல்பவர்? அதனாலே அவர் காரணம்னு நினைக்கறவர்கள் கை உயர்த்தலாம் என்றார்.  கூட்டத்தில் பாதி பேர் கையை உயர்த்தினார்கள்.
சரி, அழைத்தவர்களின் வற்புறுத்தலால் தானே இவர் வந்திருக்கிறார்.  அதனால், இவரை வரச் சொல்லிக் கூபிட்டவர்களே இவருடைய வருகைக்குக் காரணம் என நினைக்கிறவர்கள் கை உயர்த்தலாம் என்றார்.  கூட்டத்தில் இன்னொரு பாதி பேர் கையை உயர்த்தினார்கள்.

அந்த சமயத்திலே ஆசார்யர் எம்பார் சொல்கிறார், "இப்போ சொன்ன எதுவுமே காரணமில்லை.  இவரை இங்கே வரவழைச்சதுக்குக் காரணமானவன் பரமாத்மா தான். இத்தனை நாளாக இல்லாமல் திடீரென்று இங்கே வரணும் என்று அந்த புத்தியைக் கொடுத்ததே அந்த பரமாத்மாதான்"என்றார்.
உலகத்தின் சகல காரியங்களுக்கும் ஐந்தாவது காரணமாய் இருப்பவன் அந்த பரமாத்மாதான்.  
ஆடு மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை பகவான்.  ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலே சுதந்தரத்தைக் கொடுக்கிறான்.  நல்லது இது - கெட்டது  இதுன்னு காட்டிக் கொடுத்து அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான்.  "மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா? என்று சோதித்துப் பார்ப்பது அவனுடைய லீலை.

ஆகையினாலே, விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், 'ஜகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்.  அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான்.  விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே,  ஆனதனாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்'.  இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.  சுவாபாவிகமாக - அதாவது இயற்கையிலேயே எண்ணிறந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.  பகவான் என்றால்?  புத்தி உடையவன், புத்திமான், குணமுடையவன், குணவான், பகத்தை உடையவன் பகவான்.  என்ன குணங்கள்?  ஆறு குணங்களை அவனுக்கே உரியவையாக விவரிக்கிறார்கள்.  பகம் என்றால் ஆறு குணங்கள்.

முதலாவதாக ஞானம். குறுகுதல், விரிதல் என்பது பகவானுடைய ஞானத்துக்குக் கிடையாது. மனித ஞானம் மாதிரி இ ல்லை அது.  மனிதர் ஒருவர் தத்துவம் படிக்கிறார்.  அவர் புத்தி ஒருநாள் அதை கிரஹிக்கிறது போல் இன்னொரு நாள் கிரஹிப்பதில்லை.  ஏன்?  அந்த புத்திக்கு சங்கோச விஹாசம் இருக்கிறதனாலே  அது அப்படி நடந்து கொள்கிறது.  சில நாள் குறுகிப் போயிடறது;  சில நாள் சாத்விகமான ஆகாரம் சாப்பிடாததாலே ஒத்துழைக்கிறதில்லை.  இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் பகவானுக்கு கிடையாதே.  நமக்கு இந்த்ரியங்கள் எல்லாம் வேண்டியிருக்கு.  அப்படியில்லை பரமாத்மா.  பகவானுடைய ஞானம் சங்கோச விஹாசம் இல்லாத ஞானம்.

பலம் என்பது பகவானின் இன்னொரு குணம்.  எல்லாவற்றையும் தாங்கும்படியான பலம். பதினாலு லோகத்தையும் தாங்கறான் பரமாத்மா.  நாம் அவஸ்தைப் பட்டுத்தாங்கற மாதிரி தாங்கறானா? அதெல்லாம் இல்லை. சங்கல்ப ஆதீனத்திலே - அப்படி இருக்கணும் என்று அவன் நினைக்கிறதாலேயே மட்டுமே தாங்குகிற பலம் அவனுக்கு இருக்கிறது.

ஐச்வர்யம் மூன்றாவதான குணம்.  நித்ய விபூதி என்று சொல்லப்படுகிற வைகுண்டம். லீலாவிபூதின்னு சொல்லக் கூடிய இந்த உலகம். உலகத்தைச் சேர்ந்தவை - அதன் உரிமைக்காரர் ஒருத்தர்,  காவல்காரர் இன்னொருத்தர்.   காவல்காரருக்கு மாம்பழத்தை அனுபவிக்கும் உரிமை இல்லை.  இந்த லோகத்தின் உரிமைக்காரனும், காவல்காரனும் அவனே.
அர்ச்சனை பண்ணும்போது எந்த மந்திரம் சொன்னாலும் நம: (நமஹ - உச்சரிப்பு) என்று முடிக்கிறோமே... இதற்கு அர்த்தம் என்ன?  நம: என்றால் இல்லை என்னுடையது என்று பொருள்.  அதாவது அத்தனை விஷயங்களையும், என் பொருட்டில்லை, உனக்காக என்று அவனிடம் சமர்ப்பிக்கிறோம்.
எனதில்லை என்று சொல்வதுதானே வழக்கம்.  இல்லை என்னுடையது என்று ஏன் வர வேண்டும்?  எனது என்று முதலில் சொல்லி விட்டாலே அப்புறம் இல்லை என்று சொல்ல மனம் வராமல் போய் விடுமோ என்கிறதுக்காகத்தான் இல்லை என்னுடையது என்று சொல்ல வைத்தது.   ஐச்வர்யம் அத்தனையும் அவனுடைய குணம்.  ஜெயிக்கும் தன்மை.  உயர்ந்த பராக்கிரமத்தாலே சர்வத்தையும் அடக்கி, ஆளும்படியான ஆதார குணம்.
 
சக்தி - ஐந்தாவது குணம்.  உலகத்திலே அததுவும் அதனதன் இடத்திலே நிற்பதற்கு ஆதார சக்தியாக இருக்கக் கூடியவன். 

ஆறாவது குணம் - தேஜஸ்.  ஒளிப் பிழம்பாய், சூரியனாகவும், சந்திரனாகவும், நட்சத்திரங்களாகவும் ஜொலிக்கிறான் பகவான்.

இந்த ஆறு குணக்கூட்டங்களுக்குப் பகம் என்று பெயர்.  இவற்றை உடையவன் பகவான். விச்வ சப்தத்துக்கு பகவான் என்று பொருள் ஆனதினாலே அப்படிப்பட்ட பகவானை விச்வம் என்று சொல்லி நாம் ஆராதனை பண்ண வேண்டும். 
சஹஸ்ரநாமத்தின் முதல் நாமாவான விச்வம் என்பதற்கு அப்படியொரு முக்கியத்துவம்.

தொடரும் ...