Monday, November 26, 2012

PART-1, Chapter-7


குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 7

பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார்.  சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார்.  வந்து சேவை  கொடுக்கிறார்.  அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.  ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார்.  அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான்.  இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை  ஆனால் அவர் ரொம்ப சதுரர் - கெட்டிக்காரர் - பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள்.  உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார்.

உடனே பரமாத்மா கேட்டானாம் - இவ்வளவு கேட்கிறீரே ... நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?
உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி? என்றார் பக்தர்.
என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா? பகவான் கேட்கிறார்.
அதைத்  தெரிஞ்சு வச்சுண்டுதான் அதைக் கொடுக்க வந்தேன்.
என்னது அது?
கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா .. அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை.. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்.. என்றார் பக்தர். 
பகவான் பதிலே சொல்லலை.  வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும்.  தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்.
பூரணனான  அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான்.  இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள்ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.  
 
திவ்யாபரணங்கள் அவனுக்கு உண்டா? அவற்றை ஏன் தாங்கியிருக்கிறான்?   விச்வமாய்க் காட்சி அளிப்பவனே;  தாமரைக் கண்ணனே, உனக்கு ரூபம் கிடையாது.  ஆயுதம் கிடையாது, ஆகாரம் கிடையாதுன்னு அதைச் சொல்கிறோமே.. அவையெல்லாம் உனக்கு இருப்பதைப் பார்த்துக் கொண்டே சொல்கிறோமே என்று கேட்கலாம். ரூபம் இருக்கிறது என்றால் அது அவன் பொருட்டு அல்லபக்தர்கள் சேவித்து மகிழ்வதற்காகதான் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்கள் இருக்கிறது என்று சொன்னால், அவை நம் இடுக்கண் களைய அவன் தரித்தவை.  அவன் பொருட்டு அல்லாமல் நம் பொருட்டு தான் அவன் அவற்றை ஏந்துகிறான்ஆபரணங்கள்.  திவ்யமேனியில் இவ்வளவு திருவாபரணங்கள் தரித்திருக்கிறானே. ஆபரணத்துக்கு அழகு செய்யும் பெருமாள்; முன்னழகைக் காட்டிலும் பின்னழகு விஞ்சி நிற்கும் பெருமாள், என்று பராசர பட்டர் ஸ்ரீ ரங்க நாதருக்குக் கட்டியம் சொல்கிறார்.

ஒருத்தர் ஒரு லட்ச ரூபாய் செலவில் பெருமாளுக்கு முத்துக் கொண்டை  செய்வித்தாராம். அதை அணிவித்து கற்பூர ஹாரத்தி காட்டி சேவிக்கிறார்கள் எல்லோரும்.  "ஆஹா" அவன் எவ்வளவு அழகா இருக்கான்" என்கிறார்கள்.  இப்படிச் சொன்ன வார்த்தை ரொம்ப அபசாரமான வார்த்தை.  இந்த முத்துக் கொண்டை இல்லையென்றால் அவன் அழகன்  இல்லையா?

உபசாரமாய்ச் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லணும்.  "அவன் திருமேனி சம்பந்தப்பட்டதனால் அல்லவோ இந்த முத்துக் கொண்டை இவ்வவளவு சோபை பெற்றது" என்று சொல்ல வேண்டும்.  அதே மாதிரி தான் இந்த ஆத்மாவும்.  அவன் திருவடிக்கு அர்ப்பணமானதினாலேதான் அழகு பெறுகிறது.  இந்த சரீரத்திலே அது உட்கார்ந்து கொண்டுருந்தால் அதற்கு அழகு ஏது?இன்னதால் தான் அவனுக்கு அழகும் தேஜசும் உண்டாகின்றன என்று சொல்ல முடியாத அளவுக்கு சர்வத்தையும்தன்னுள்ளே அடக்கி, காத்து, அழிக்கும் படியான ஆற்றல் கொண்டவன் பரமாத்மா. ருக்மிணீ அவனை புவனசுந்தர் என்று அழைக்கிறாள்.  உலகத்திலேயே அழகுடையவன் நீ ஒருவன் தான்.  நீ எல்லா சராசரங்களுக்குள்ளேயும் 
இருப்பதனாலே அவை அழகு பெறுகின்றன.  அதனாலே உலகத்திலே அழகன் நீ ஒருவன்தான் என்று அர்த்தம்.  
ஒருத்தர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார்.  நான் அழகன்தான் என்று அவருக்கு தோன்றுகிறது.  அவரைக் காட்டிலும் பல அழகர்கள் இருக்கலாம்அப்படியும் அவருக்கு அப்படித் தோன்றுவானேன்?  அவருக்குள்ளேயும் பகவான் அந்தர்யாமியாய் உட்கார்ந்திருப்பதினாலே தான் அப்படித் தோன்றுகிறது.

சுயக்ஜன் என்றொரு (மாணவன்) வித்யார்த்தி இருந்தான்.  தினமும் குருவின் வஸ்திரத்தைத் துவைத்து வைப்பது அவன் பொறுப்பயிருந்தது. அதை எடுத்து உதறி குரு தாமே உலர்த்திக் கொள்வார்.  ஒருநாள் அப்படி உதறிய பொது, மாண்டு போன மீன்கள் அதிலிருந்து உதிர்ந்தனஅவற்றினால் ஏற்பட்ட அசுத்தம் வஸ்திரத்தில் கறை கறையாகப் படிந்திருந்தது.     
ஆற்று நீரில் வஸ்திரத்தை அலசும் பொது அதில் சிக்கிய மீன்களைக் கவனிக்காமல் சேர்த்துப் பிழிந்திருக்கிறான்.   இவ்வளவு அலட்சியாமா என்று குரு கோபித்துக் கொண்டார்.  உடனே சாபம்தான்.  நீ பன்றியாகக் கடவாய் என்று சாபம் கொடுத்து விட்டார்.  மாணவன் நடு நடுங்கி போய்  விட்டான்.  சுவாமி, பன்றி வாழ்க்கையை நினைத்தாலே நடுக்கமாய் இருக்கு. எப்படியாவது சாபத்தை போக்குங்கள் என்று கெஞ்சினான்.  எனக்கு சாபம் கொடுக்கத்தான் தெரியும், போ, என்று சொல்லி விட்டார் குரு.  சாபம் பலிதமாவதற்குள் சக வித்யார்த்திகளிடம் போனான், நடந்ததைச் சொன்னான்.  
ஆசார்யர் சுமுகமாய் இருக்கிற நேரத்திலே அவரிடம் கேட்டு, நான் எந்த இடத்திலே இருக்கேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  நான் இருக்கிற இடத்துக்கு வந்து என்னை அடித்துக் கொன்று விடுங்கள். என்னாலே அந்த வராஹா ஜன்மத்தைத் தாங்க முடியாது என்று வேண்டிக் கொண்டான்.
உடனே அந்த வித்யார்த்திகள், கூட படிச்சதுக்காக நாங்கள் இதைக் கூட பண்ண மாட்டோமா என்றார்கள்சாபம் பலித்துவிட்டது.  ஒரு நாள் சாயங்காலம் குரு சந்தோஷமாக இருக்கிறார்வித்யார்த்திகள்  அவரிடம் போய் காலில் விழுந்து, சேவித்து கேட்கிறார்கள். சுயக்ஜன் எங்கே பிறந்திருக்கிறான், அவனுக்கு நாங்கள் உதவணும் என்கிறார்கள்

குரு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கே ஒரு பன்றி, ஆறு குட்டிகள் போட்டிருக்கும்  அதில் ஐந்து குட்டிகள் கருப்பயிருக்கும்.  ஒரு குட்டி மட்டும் முன்னும் பின்னும் வெள்ளைத திட்டு உள்ளதை இருக்கும் என்று அடையாளம் காட்டுகிறார்.

சீடர்கள், குரு சொன்ன இடத்தில் போய்ப் பார்க்க, அவர் சொன்னபடியே ஆறு குட்டிகளில் ஒன்று மட்டும் வேறுபட்டுத் தெரிந்தது. குரு சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொன்னார்கள்.  மற்ற குட்டிகளெல்லாம் ஓடிவிட அது மட்டும் அவர்களின் அருகே வந்தது. எல்லா சிஷ்யர்களும் தடியை ஓங்கிக் கொண்டு தயாரானார்கள்.  அந்தப் பன்றிக்குட்டியோ ஓட ஆரம்பித்தது. . நில்லு, நில்லு,  நீ சொல்லித்தான் வந்திருக்கோம் என்றார்கள்.   அப்போ நான் சொல்லியிருக்கலாம்  ஆனால், இப்போது என்னை அடிக்காதீர்கள்.  என் தாயார் என்னிடம் எத்தனை அன்பாக இருக்கிறாள்.  என்ன பட்டான மேனி இது என்றது பன்றிக்குட்டி.   வித்யார்த்திகள்  விக்கித்துபோய் நிற்கையிலே, என்னை அடிக்கவே அடிக்காதீர்கள் என்று அது ஓடிப் போய்  விட்டது

அந்த சிஷ்யர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டு குருவிடமே திரும்பிப் போனார்கள்.  ஆசார்யர், நீங்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமலிருந்தேன்.  உங்களுக்கு வேண்டுமானால் பன்றி பண்ணுகிற காரியம் அருவருப்பாய் இருக்கலாம்.  ஆனால் அதற்கு அது யோக்யமாய்த்தானே இருக்கு. திருப்தியாத்தானே இருக்கு.  அதனுடைய ஆனந்தத்தை நாம் இல்லாமல் பண்ணி விட முடியுமா என்றார்.  இப்படி ஒவ்வொரு உயிருக்குள்ளேயும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் பகவான் என்பதை தெரிவிப்பது தான் சுயக்ஜன் கதை.  அதனால் தான் அவரவர்க்கு அவரவர் உருவம் உயர்த்தியாகத் தெரிகிறது  அதனாலே எந்த உயிரையும் நாம் அலட்சியம் பண்ணிவிட முடியாது.

பத்து லட்ச ரூபாய்க்கு நோட்டுக்  கட்டாக அடுக்கி வைத்திருக்கு.  நமக்கு அந்த ரூபாய் உயர்த்தியாகத் தெரிகிறது.  அதிலே இரண்டு லட்சம் இருந்தால் உபயோகமாய் இருக்குமே என்று நினைக்கிறோம்.  ஆனால், அங்கேயிருந்து நாலு கட்டெறும்பு வரும். அந்த நோட்டுக் கட்டு மேலே ஊர்ந்து மறுபக்கம் போய்க் கொண்டேயிருக்கும். நமக்கு ரொம்ப உயர்த்தியாய்  உள்ள பொருள், கட்டெறும்புக்குப் பிடிக்கிறதா? அதுக்கு அதன் உயர்வு தெரியவேயில்லை. அப்படியும் ஒரு ஜீவன் உலகத்திலே  ஜீவிக்கிறதில்லையா ?  இதனாலே உலகத்திலே எதுவுமே பரமார்த்தம் இல்லைன்னு தெரியறது.  

பரமாத்மாதான் பரமார்த்தம்.

அவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான் புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.

தொடரும் ...



Friday, November 23, 2012

PART-1, Chapter-6

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 6

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு நாமத்துலேயும் நால்  வேத மந்திரங்களும் அடங்கியிருக்கு.  அதனாலே அதைப் பாராயணம் பண்ணினால் வேத பாராயணம் பண்ணின பலன் என்று சொன்னேன்.  அதிலும் ராம நாமத்துக்குத் தனியொரு சக்தி. ராம நாமத்துக்கு எப்படி அதன் சக்தி வருகிறது?  காயத்ரி மந்திரத்தின் பொருளை ராமாவதாரத்தின் போது பகவான் நடித்துக் காடியதாலே.  அதனால்தான் வால்மீகி, ராமாயணத்தில் ஆயிரம் சுலோகத்துக்கு ஒரு தடவை காயத்ரியின் ஒரு அக்ஷரத்தை வைத்தார்  மொத்தம் 24,000 சுலோகம் ராமாயணத்தை பாராயணம் பண்ணினா காயத்ரியைப் பாராயணம் பண்ணின பலன் கிடைக்கும்.
 காயத்ரி மந்திரம் எல்ல மந்திரங்களுக்கும் தாய்.
ஒருமுறை தேவாசுர யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, தேவர்களுக்கே நித்திய ஜெயம் உண்டாகிக் கொண்டிருந்தது.  33வது நாள் அந்த தேவதைகள் படுதோல்வி அடைந்தார்கள். இன்றைக்கு நாம் ஏன் தோற்றோம்? என்று ஆராய்ச்சி பண்ணினார்கள்.  காயத்ரியை ஜபிக்காமல் சென்றதால் என்று பதில் கிடைத்தது.  ஜெயம் வந்தபோது மந்திரத்தை மறந்ததால் தோல்வி உண்டாயிற்று.  மனுஷ சுபாவமே அதுதான்  சரீரத்தைக் கொடுத்த பகவானை மறந்து, உடம்பு தளர்ந்து போகிறபோது மட்டுமே அவனை நினக்கிறோம்.
 அதனால் தான் குந்தி தேவி ஒரு வித்தியாசமான வரத்தைக் கண்ணனிடம் கேட்டாள்.   வாழ்க்கையிலே விபத்துக்களை உண்டு பண்ணச் சொல்லி வரம் கேட்டாள்.   ஏன் இப்படி கேட்கிறாய் என்றான் பரமாத்மா. அப்போதுதானே உன் நினைவு சதா மனத்திலே இருக்கும் என்றாளாம் குந்தி தேவி.
 அதைப் போல தோல்வி வந்தபோதுதான் காயத்ரியை மறந்தோம் என்று உணர்ந்தார்கள் தேவர்கள்.  கடைசியில் அவள் இருந்த இடத்தைத் தேடி அலைந்து போய்க் கண்டுபிடித்து ஸ்தோத்திரம் பண்ணினார்கள்.  ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவுடன் காயத்ரி, தேவர்களின் பக்கம் திரும்பினாளாம்.  ஸ்தோத்திரத்தின் மகிமையைப் பாருங்கள்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் கூட, ஸ்தோத்தரிக்கத் தகுந்தவன் பரமாத்மா: ஸ்தோத்திரப் பிரியன் அவன் என்கிறது.

அப்படியிருக்கிறது ஒரு பெருமையா என்று கேட்டால், அப்படியிருப்பதும் அவன் கருணை தான் என்று சொல்லணும்.  நமது ஸ்தோத்திரம் அவன் பிரபாவத்தை முழுதும் சொல்ல முடியுமா?  ஏதோ கொஞ்சம் சொல்லலாம்.  அவனிடம் இருப்பதையும் இல்லாததையும் நம்மாலே முழுதும் சொல்லி ஸ்தோத்திரம் பண்ண முடியாது.  நாம் ஸ்தோத்திரம் பண்ணும் போது பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டால் என்ன செய்ய முடியும்?  அப்படிச் செய்யாமல் ஸ்தோத்திரப் பிரியனாக இருந்து நமக்கு அருள் செய்வதே அவன் கருணை. 

பகவான் ஸ்தோத்திரப் பிரியனாக இருப்பதாலே தான் அவனிடமிருந்து தோன்றிய நாமும் ஸ்தோத்திரப் பிரியர்களாக இருக்கிறோம்  மண்ணின் குணம் அதைக் கொண்டு செய்யப்படும் பானைக்கு வருகிற மாதிரி. காரணத்தின் குணம், அதன் பயனான காரியத்துக்கும் வரும்.
ஆக, வேதமந்திரங்கள் எல்லாமே ஸ்தோத்திரம்,  துதி பாடுவதால்தான். ஸ்தோத்திரம் செய்த தேவர்களின் பக்கம் காயத்ரி வந்தாள். அவர்களுக்கு வெற்றி உண்டாயிற்று.  அப்படிப்பட்ட காயத்ரி, தேவர்களுக்கே அனுக்கிரஹம் செய்தாள்  என்றால் அந்த அருள் மேலும் தேவையான நமக்கு எத்தனை செய்வாள்.  அந்த காயத்ரியை தேவர்கள் எப்படித் துதித்தார்கள் என்றால், "விச்வமஸி, விச்வாயு" என்று ஆரம்பித்துத் துதித்தார்கள். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமாக இருக்கிறது.
விச்வம் என்பதன் விரிவான பொருள் என்னஸ்ரீபதியான பகவானுடைய மூச்சுக்காற்றாக விளங்கக் கூடியது வேதம். அதன் மந்த்ரார்த்தத்தைக் கேட்டோமானால் விஷேசமான பலன் கிடைக்கும்.  திருவேங்கட மலையைப் பற்றி சுவாமி தேசிகன் சொல்கிறார்.  வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பே வேதமே பர்வத (மலை) ரூபத்திலே அமைந்திருக்கிறது.  "வேம்" என்றால் "மகா பாவம்" என்று பொருள்.  "கடையத்தி" என்றால் "பொசுக்குதல்".  நமது மகா பாவங்களை நெருப்பிலே பொசுக்கி விடக்கூடிய ஆற்றல் திருவேங்கட மலைக்கு இருக்கிறது. வேதங்களிலே ஏழு காண்டம் உண்டு.  திருவேங்கடத்தில் ஏழு மலை.  அந்த வேதங்களால் தாங்கப்பட்டு நிற்கிறான் திருவேங்கடமுடையான்.  மலை வடிவிலே வேதம் இருக்கு என்று சொன்னால் புரியவில்லையே என்று கேட்கலாம்.  வேதத்தைப் பாராயணம் பண்ணினால் முழுமையாகப் புரிகிறதா? புரியாவிட்டாலும் உயர்த்தியான பாவம் எற்படுகிறதோயில்லையோ, நம்முடைய அந்த பாவத்தை உணர்ந்து பரமாத்மா மேலும் மேலும் புரியும்படியாகப் பண்ணுகிறான்.  வேத வடிவிலே மலை இருக்கிற மாதிரி, சப்த வடிவிலே பரமாத்மா இருக்கிறான்.  அதனால்தான் வேதாந்த விசாரத்திலே கருத்து வேறுபாடு கொண்ட தர்ம தாசார்யர்கள் கூட (சங்கரர், ராமானுஜர், மாத்வாச்சர்யர்) "வேதம் நித்தியமாய்" இருக்கக்கூடியது என்று ஒப்புக் கொண்டார்கள்.
பிரளய காலத்தில் கூட வேதம் அழிவதில்லை.  அதைத் தாங்கிக்கொண்டு வெளியே விடுகிறான் பரமாத்மா. வேத கோஷத்தின் உயர்ந்த சப்தத்துக்கு பிரும்ம கோஷம் என்று பெயர்.  "சமே, சமே" என்ற ஒலி மீண்டும் மீண்டும் ஒலிக்கக் கேட்கலாம்.  "சமே" என்றால், அது எனக்கு உண்டாகட்டும் என்று அர்த்தம்.  பகவானிடத்திலே என்ன கேட்க வேண்டும் என்பதைக் கூட வேதம் நமக்குச் சொல்லித் தருகிறது.  நாமாக கேட்டால் அல்பமான விஷயத்தைத்தான் கேட்போம்.   இந்திரனுடைய தாயாரான அதிதி சொல்கிறாள் - கற்பக விருஷத்திடம் போய் கௌபீனம் கேட்டாற் போலே" என்று.  அப்படியல்லாமல், மங்களம் கீர்த்தி, ஷேமம் எல்லாம் உண்டாகட்டும் என்று வேதம் கேட்கிறது. விச்வம் சமே என்பதும் கோரிக்கைகளும் ஒன்று.  விச்வத்தை எனக்கு கொடு என்று கேட்டால் உலகம் மொத்தமும் கிடைக்குமா?  அது பெருங்கோரிக்கை இல்லையா? 
இந்த கோரிக்கைக்கு என்ன வியாக்யானம் பண்ணுகிறார்கள் என்றால், விச்வ சப்தத்துக்கு பகவான் என்று அர்த்தம்.  விச்வம் என்றால் பகவான்.  சஹஸ்ர நாமத்திலே முதல் சப்தம் விச்வம். அந்த சப்த்ததினாலே பரமாத்மா சொல்லப்படுகிறான்.  அவனையே நாம் அடைய வேண்டும் என்பது கோரிக்கை.  அந்த பரப்ரும்மத்தையே நாம் அடைய வேண்டும்.  
அந்த பரமாத்மாவை, வா, வா - வந்து என்னை ரக்ஷி என்று பிரார்த்திப்பதுதான் விச்வம் சமே.  சுவாமி, நீ வரமாட்டாயா? சீக்கிரமாக வரமாட்டாயா?  காலம் குறுகாதா? என்று நெக்குருகி ஒருவர் உபன்யாசம் பண்ணுகிறார்.
பகவான் கருடாரூடராய் வந்து இப்பவே வா, கருடனில் ஏறிக் கொண்டு போகலாம் என்று அழைத்தால் போக முடியுமா?  அவனே வந்து  கூப்பிட்டாலும் போவதற்கு எத்தனை பேர் சித்தம்?
ஆகையினாலே பிரபுவினிடத்திலே என்ன சொல்ல வேண்டும்?  நான் கூப்பிட்டால் நீ வந்துவிடுவாய்.  ஆனால், நீ கூப்பிட்டால் நான் வருவேனா?  ஒன்று செய்.  இந்த சரீரம் கீழே விழுகிற வரையிலே அதிலே இருந்து கொள்கிறேன். அதற்குப் பிறகு இன்னொரு சரீரத்தைக் கொடுத்து விடாதே என்று பிரார்த்திக்கணும்.
அதற்கும் அவன் சித்தமாயிருக்கிறான் எண்ணும்போது, அவன் தயையை  என்னவென்று சொல்வது.  பகவான் தயையைக் குறித்து தயா சதகம் என்றே பாடியிருக்கிறார் சுவாமி தேசிகன்.   எத்தனையோ குணமிருந்தாலும் தயைகுணம் இல்லாமல் பிரகாசிக்காது.  அம்மா தாயே, நீ பகவானிடத்தில் இல்லையென்றால் மற்றைய குணங்களெல்லாம் அவனுக்கு தோஷமாகுமே ஒழிய குணங்களாக என்கிறார்.  நாம் அழைத்ததும் தயையினாலே ஓடி வருகிறவனைப் பார்த்து இப்போது நான் சித்தமாக இல்லை; அப்புறம் என்னை அழைத்துப் போ என்று சொன்னால் அதற்கும் அவன் தயார்.   இப்படிப்பட்ட தயாளனான பரமாத்மா நமக்குக் கிடைப்பது விச்வ சப்தத்தினாலே.. விச்வ சப்தத்தை தியானம் பண்ணினால், ஓம் விச்வஸ்மை நம: ஓம் விச்வாய நம: என்று அதைச் சொல்லி அர்ச்சனை பண்னினால், அவன் தயை இல்லாமல் போகுமா, கிருபை கிடைக்காமல் போகுமா?
விச்வம் என்கிற சப்தத்துக்குப் பூரணத்துவம் என்றும் ஒரு பொருள் உண்டு.  பகவான் எதிலும் குறைவில்லாதவன் என்று அர்த்தம்.  அதனால்தான் பூரணன், கொள்ளக் குறைவிலன் என்றெல்லாம் அவனைப் பாடியிருக்கிறார்கள்  சுவாமி தேசிகன் சொல்கிறார்: தனதனைத்தும் அவர்தமக்கும் வழங்கியும் தான் மிக்க விளங்கக் கூடியவன் பரமாத்மா.  கொடுத்ததினாலே அவனிடத்திலே குறைவில்லை. பகவான் கொள்ளக் கொள்ளக் குறைவிலன்.  கொள்ளமாளா இன்பவெள்ளம் அவன் என்கிறார் ஆழ்வார்.  கொடுக்கக் கொடுக்கக் அவனிடத்திலே விருத்தியாகிக் கொண்டேயிருக்கிறது.  அதனால் அவன் பூரணன் ஆகிறான்.
எல்லாம் அவனிடத்தில் இருக்கிறது என்றால் அவனுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்?  தேங்காயை அவனிடத்தில் சமர்ப்பிக்கிறோம்.  அவனிடத்திலே தேங்காய் இல்லையா? புஷ்பத்தை சமர்ப்பிக்கிறோம்.  அவனிடத்திலே புஷ்பம் இல்லையா?  இந்த கேள்விகளுக்கான பதில் ஒரு அழகான கதையிலே அடங்கியிருக்கிறது - அதை அடுத்த அத்தியாயத்திலே பார்ப்போம்.

தொடரும்...
 



PART-1, Chapter-5

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)
அத்தியாயம் 5

நால் வேதங்களிலே அதர்வ வேதம் ஒரு பரிசோதனைக் கூடம் மாதிரி.  மற்ற  மூன்று (ரிக், யஜுர், சாம) வேதங்கள் சொல்வதைப் பரிசோதித்துப் பார்க்கிற கூடம்.  இன்றைக்கும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளபடற  பல உண்மைகள் இந்த அதர்வ வேதத்திலே இருக்கிறது.  தீர்த்தம் என்பது இரண்டு வாயுக்களின் கூட்டுப் பொருள்.  ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் அதில் உள்ளது என்கிறோம்.
        
        
H2O, H2O என்று மனப்பாடம் பண்ணுகிறோம்  அதர்வ வேதம் இதையே "பிராணம் ஏகம் அன்யத்வே" அதாவது பிராண வாயு ஒரு பங்கும் இன்னொரு வாயு இரண்டு பங்கும் தண்ணீரில் இருக்கிறது என்கிறது.  அங்கிரஸ் மகரிஷியை தியானம் பண்ணச் சொல்கிறது வேதம் - எல்லா தோஷங்களையும் நிவர்த்தி பண்ணுகிற அளவுக்கு அவர் ஹோமங்கள் பண்ணியிருக்கிறார் என்பதால்.  சயன யக்ஞம்  என்று ஒரு ஹோமம் பண்ணினார் அவர்.  அதற்கு சந்திர லோகத்திலிருந்து மண் எடுத்து வந்து பூவுலக மண்ணுடன் கலந்து பிசைந்து ஹோம குண்டம் தயாரிக்கணும் என்று சாத்திரம் "சந்த்ரமஸி கிருஷ்ணம்" என்று வேதம் சொல்கிறது. (சந்திர மண்டலத்து மண் கருப்பாகயிருக்கிறது என்று இதற்குப் பொருள்)
கல்கத்தா, பிர்லா  பிளானடோரியத்துக்கு அடியேன் போனபோது சந்திர மண்டலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.  கருப்பாக இருந்த அதைப் பார்த்ததும் "சந்த்ரமஸி கிருஷ்ணம்" என்கிறதுதான் நினைவில் வந்தது. வேதம் சொன்ன வாக்கியம் பொய் இல்லை. ஆனால் அன்றைக்கு அவர்கள் ராக்கெட்டில் பறந்து போய் சந்திரனிலிருந்து மண்ணைக் கொண்டு வரல்லை.  அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு, "ஹே, சந்திர மண்டலத்து மண்ணே  வான்னா" வந்துடும்.  மூடின கண்ணைத் திறந்து பார்த்தால் மண் அங்கே இருக்கும்.  இப்போது நாம் இயந்திர சக்தியைத் தான் நம்ப வேண்டியதாயிருக்கிறது.  ஆனால் எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது மந்திர சக்தி.
மந்திரம் அபரிமிதம் (வரையறையற்றது). யந்திரம் பரிமிதம்(வரையறைக்குட்பட்டது) என்கிறது அதர்வ வேதம்.  எதிர்காலத்தில் வரவிருந்த யந்திர சக்தி பற்றிக் கூட வேதத்தில் சொல்லியிருக்கிறது பாருங்கள்.  இப்போது நான் பேசுவதை டேப் ரெகார்டரில் அப்படியே பதிவு பண்ண முடிகிறது.  இதை நாம் ஏதோ முன்னேற்றம்னு  நினைக்கிறோம்  ஆனால் அப்படியில்லை அது.  டேப் ரிகார்டர் செய்யறதை செய்யக் கூடிய சக்தியுடையவர்களாய் நாம் இருந்தோம்  ஒரு முறை கேட்டால் அப்படியே மனசுல பதிஞ்சுபோயிடும் .  இப்போது நாம் சக்தியை வேறே விஷயங்களிலே ஏத்தி வச்சிருக்கோம்  அதனாலே அந்த ஆற்றல் இல்லை நமக்கு.


இவ்வளவையும் எதற்குச் சொல்கிறேன் என்றால் வேதம் சொல்வது ஏதோ மாய மந்திரமில்லை, ஆதாரமுள்ள விஞ்ஞானம் என்கிறதுக்காக.
போன அத்தியாயத்தில், விஷ்ணு சஹாச்ற நாமத்திலே நரசிம்ஹா அவதாரம் விஷேசமாக  சொல்லப் பட்டிருக்கிரதாகச் சொன்னேன்.   அந்த நரசிம்ஹ அவதாரம் பற்றி அதர்வ வேதம் விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறது  பிரஹலாதனுக்கும் ஹிரண்ய கசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம், நரசிம்ஹ அவதாரத்தை மின்சக்தி  என்கிறது.  பிரஹலாதன் அஸ்தி  (உண்டு) என்று சொல்கிறான்.  ஹிரண்ய கசிபு நேதி  (இல்லை) என்கிறான்  அஸ்தி என்கிற பாஸிட்டிவ் தத்துவனும் நேதி  என்கிற நெகடிவ்வும் மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம்.  ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம்.  அவனுடைய அட்டகாசம் ஏழு உலகம் தாண்டிப் போய், பிரும்மா அமர்ந்திருந்த தாமரையை ஓர் அடி அடித்ததாம்.  பிரும்மாவைக் கீழே தள்ளியதாம். பிரும்மாவை மட்டும் ஏன் தள்ள வேண்டும்? இருக்கிறவனுக்கெல்லாம் வரத்தைக் கொடுத்துவிட்டு, நீ மட்டும் ஜபமாலையை உருட்டிக் கொண்டு மனைவியின் (சரஸ்வதி) வீணா கானத்தைக் கேட்டிண்டிருக்கியே என்றுதான் பிரும்மாவை தள்ளியதாம்.
ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்  முல்லர் கூட நரசிம்ம அவதாரத்தை An Electrical Phenomenon என்றுதான் விவரிக்கிறார்  நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு. ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும் சஹஸ்ர நாம தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பிரணவத்தோடு ஆரம்பித்து "விச்வம்" என்று முதல் நாமாவை விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சொல்கிறோம்.  விச்வம் என்கிற சப்தம் என்ன?  அது ஒரு நாமம், ஒரு பதம் மட்டுமில்லை.  வேதத்திலே வரும் பொருள் அது.  பகவானே விச்வம் என்று சொல்வதாக ஆகிறது  விச்வம் என்றால் பிரபஞ்சம்.  நாம் பார்க்கிற உலகம் பார்க்கப்படுவதால்தான் அதற்கு லோகம் என்று பெயர்.
உபநிஷத் சொல்கிறது: காரணமாகிய பரப்ருஹ்ம்மத்தை நாம் உணர வேண்டும். எதைக் கொண்டு தெரிந்து கொள்வதாம்?  சாஸ்திரத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம். சாஸ்திரமாகிய உபநிஷத், காரணமாகிய பரப்ருஹ்ம்மத்தைத் தெரிந்து கொள்ள, காரியமாகிய பிரபஞ்சத்தைப் பார் என்கிறது. எதனிடத்திலிருந்து பிரபஞ்ச வஸ்துக்கள் எல்லாம் உண்டாயிற்றோ, எதனால் அவை ரக்ஷிக்கப்படுகின்றனவோ எதனிடத்தில் அவை லயமடைகின்றனவோ அதுவே இதற்குக் காரணம் என்று பரப்ருஹ்ம்மத்தைக் குறித்துச் சொல்லப்படுகிறது.   காரணம் காரியம் இரண்டும் ஒன்றே.   பரமாத்மா ஒருவன்.  ஒருவனே பலவாகி நிற்கிறான், பலவும் அவன்தான்,  ஒன்றும் அவன்தான்.  விச்வம் என்பதற்கு இதுவே பொருள்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே ரொம்ப முக்கியமான பகுதி எது என்று சிலர் கேட்கலாம்  இப்படிக் கேட்டால் கீதை பாராயணம் பண்ண முயன்ற ஒருவருடைய கதை நினைவில் வருகிறது.  பகவத் கீதை கற்றுக் கொள்ள  போன சிஷ்யர், குருவிடம் "எந்த பகுதி முக்கியம்" என்று கேட்டானாம்.  "முதல்லேருந்து பதினேழு அத்தியாயங்களை விட்டுவிடு, பதினெட்டை மட்டும் விடாதே. அது மோக்ஷ சந்நியாச யோகம்,  அதைத் தெரிஞ்சுண்டா போதும்" என்றார் குரு. பதினெட்டைப்  புரட்டிப் பார்த்தவர், அதிலே ஏகமா சுலோகம் இருக்கே, எந்தெந்த சுலோகம் முக்கியமோ அதை மட்டும் குறிச்சுக் குடுங்களேன் என்றார். பதினெட்டிலே முன்னேயும் பின்னேயும் விட்டுவிடு, இரண்டு சுலோகம் மட்டுமே மனனம் பண்ணு, என்று எளிமைப் படுத்தினாராம் குரு. "அதிலேயும் முக்கியமான சொற்களை மட்டும் சொல்லுங்களேன், எல்லாவற்றையும் மனனம் செய்வது கஷ்டம்" என்று சிஷ்யர் சலித்துக் கொள்ள, கடைசியில், நீ எதை விட்டாலும் விடு.. மா சுச என்கிறதை மட்டு விட்டுடாதே என்றாராம் குரு.  மா சுச - இதுதான் பகவத் கீதையின் சாரம்.  ஸ்ரீ  பகவானுவாசா மா சுச: பகவான் சொன்னான் "கவலைப்படாதே".  நாம் எப்படியிருந்தால் கவலைப்படாமலிருக்கலாம் என்று பகவான் சொன்னான்.  அவன் சொன்னபடி நடந்தால் கவலைப்படாமல் இருக்கலாம் என்றான்.  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் சொன்னான்? என மீண்டும் கேட்டால், அதற்கு கீதையின் முதல் அத்தியாயத்துக்குத்தான் திரும்பவும் போக வேண்டும்.

ஸ்ரீ  பகவானுவாசா மா சுச: என்பதை கீதையின் சாரமாகச் சொன்னது போல விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சாரமாக எதைச் சொல்லலாம்?   நித்தியம் சஹஸ்ர நாமம் பாராயணம் பண்ணுகிற ஒருவர், ஒரு திடீர் அவசரத்தின் போது நேரமில்ல்லாமல் போனால் சுலபமாகச் சொல்லலி முடிக்க வழி இருக்கிறதா?  இதை அன்றைக்கே பார்வதி பரமசிவனிடம் கேட்டு விட்டாள்.  "ஆயிரம் திருநாமங்களை இலகுவான உபாயத்திலே சொல்வதற்கு வழி உண்டா?  அதற்கு ஈச்வரன் அழகாக பதில் சொல்கிறார்.
ஈச்வரோ வாசா:
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே

வரானனே - அழகான திருமுக மண்டலம் கொண்டவளே என்று பார்வதியைக் கொண்டாடுகிறார் பரமசிவன்.  "ராமா ராமா ராமா" என்று மூன்று தடவை சொன்னால், சஹஸ்ரநாமத்துக்கு அது துல்யமானது என்கிறார்.   அதற்காக நித்தியமே நாம் "ஸ்ரீ ராம ராம ராம" என்று சொல்லிவிடலாம்னு வைத்துக் கொள்ளக் கூடாது.  நித்யம் சஹஸ்ரநாம பராயணம் பண்ணணும்.  அது அபூர்வமாக முடியாமல் போகிற தினத்தில் "மூன்று முறை ராம நாம சொன்னால் போதும்" என்று ஈச்வரனே பேசுகிறார்.
மூன்று முறை சொல்வது ஆயிரம் நாமங்களுக்கு ஈடாகும்?   திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்திலே எண்ணில் அடங்கி  

மூன்று முறை சொல்வது ஆயிரம் நாமங்களுக்கு எப்படி ஈடாகும்?   திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தத்திலே எண்ணில் அடங்கி உள்ள தத்துவத்தை எடுத்து சொல்கிறார்  வேத சமக மந்திரமும் எண்ணிக்கையைக் கொண்டாடுகிறது.  ராமா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ர  வர்க்கத்திலே ரா என்பது இரண்டாவது எழுத்து.  ம என்பது ஐந்தாவது எழுத்து (வடமொழியின் ப  ப  ப  ப  ப  ம  வரிசை) இரண்டை ஐந்தால் பெருக்கினால் கிடைப்பது பத்து.  ஆக ராம என்ற ஒரு சொல்லுக்குரிய எண் 10, ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண்  10 x 10x 10 அதாவது ஆயிரம்.  ஆக, ராம, ராம, ராம என்று மும்முறை சொல்வது ஆயிரம் திருநாமங்களுக்கு துல்யமானதுதானே.  ராம நாமத்தின் மகிமையை கம்பன், வாலி வதைப் படலத்திலே சொல்கிறான்.  ராமனின் அம்பில் அவன் நாமத்தை வாலி கண்டதை விவரிக்கிறான்:
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
இதனினும் உயர்வு ஒரு நாமத்துக்கு என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?

தொடரும் ...