Friday, August 30, 2013

Part - 1, Chapter - 21

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 21
ல்லா புராணங்களும் போற்றும் அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.  எல்லா பக்தர்களும், புலவர்களும் துதிக்கும் அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
சரஸ்வதி நதி தீரத்திலே ரொம்ப சிந்தனையோடு - கவலையோடு அமர்ந்திருந்தார் வியாசர். நாரதர் அங்கே எழுந்தருளினார்.
"இவ்வளவு சிந்தை உமக்கு எதற்கு?" என்று வியாசரிடம் கேட்டார்.  சிதா - சிந்தா இரண்டிலே எது உயர்ந்தது என்று கேட்டால் "சிதா" உயர்ந்தது என்று சொல்லி விடலாம்.
சிதா என்றால் சிதை - விறகு - விராட்டிகளினால் ஆன படுக்கை!  சிந்தை என்பது மனத்திலே எழுகிற கவலை.  இந்த இரண்டிலே சிதையே உயர்ந்தது என்றால்...?  சிதையானது பிராணனற்ற சரீரத்தைத்தான் எரிக்கிறது.  சிந்தையோ பிராணனுள்ள சரீரத்தையே எரிக்கிறது!  அதனால் சிதையே தேவலாம்!
"இப்படிப்பட்ட சிந்தைக்கு இடம் கொடுக்கலாமா...?  அந்த சிந்தை போக வேணுமென்றால் ஸ்ரீ கிருஷ்ண புராணத்தை நீர் எழுத வேண்டும் என்று வியாசரிடம் சொன்னார் நாரதர். 
"இதுவரை எழுதின மகாபாரதத்திலே கிருஷ்ண புராணத்தை ஆங்காங்கே கோடி காண்பித்திருக்கிறீர்கள்.  அதை  விரிவாக, ஸ்பஷ்டமாக எடுத்துச் சொல்லவில்லை.  அவன் லீலையைச் சொல்லக் கூடிய ஒரு புராணத்தை இயற்றுங்கள்;  உமக்குத் தெளிவு பிறக்கும்" என்றார் நாரதர்.
அதற்காகவே ஸ்ரீமத் பாகவதம் இயற்றப்பட்டது.  கிருஷ்ணாவதாரத்துக்காகவே எழுந்த பாகவத  புராணத்திலே, "அற்புதமான அவதாரம்" என்று கிருஷ்ணரைச் சொல்கிறார் வியாசர்.  ஆனால் அவரே நரசிம்ஹனைச் சொல்கிறபோது "அதியத்புத அவதாரம்" என்று விளக்குகிறார்!

ருக்மிணி பிராட்டி, கண்ணனுக்கு ஓலை எழுதுகிறாள்.  அதிலே ஏழு இடங்களில் பகவானை  அழைக்கிறாள்.  ஓரிடத்திலே கூட "கிருஷ்ணா" என்று அவனைக் கூப்பிடவில்லை. ஏன்...?
"கிருஷ்ணன் பொய் சொல்கிறவன்;  புளுகிலே வல்லவன்" என்றெல்லாம் கோபிகாஸ்த்ரீகள் அவனைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.   "பொய் அவதாரம்" ஆனதினாலே கிருஷ்ணனைக் கூப்பிட்டால் காரியம் ஆகாது!  பொய்யில்லாத பெருமான் யாரென்றால் நரசிம்ஹன்தான்!  அழைத்தவுடனே வந்து ரக்ஷிக்கக் கூடியவன்.  எனவே ருக்மிணியின் இதயம் கவர்ந்த அவதாரமாகிறது இந்த அவதாரம். 
ராமாவதாரத்திலேயும் மாரீசன் ராமனை "நரசிம்ஹா" என்று அழைக்கிறான்.  ஆஞ்சநேயரும் இலங்கையிலே சீதா தேவியிடம் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?  என் முதுகிலே ராமன் வருவான்.  நரசிம்ஹனைப் போல வருவான்" என்கிறார்.
ராமாவதாரத்திலே எங்கு தொட்டாலும் இப்படி நரசிம்ஹ பலம் தெரிகிறது.  
மகாபாரத ஸாரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே, விச்வ சப்தத்தினாலே, விச்வயோனி என்று நரசிம்ஹனைக் காட்டினதாலே... நரசிம்ஹன்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஸாரம் என்று காட்டியிருக்கிறார்கள்.  விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதுமே பாரதத்தின் ஸாரம் என்பதாலே மகாபாரதம் மொத்தமும் நரசிம்ஹனையே கொண்டாடுகிறது என்று தெரிகிறது.
பத்மாவதி கல்யாணத்திலே ஒரு காட்சி.  தாயார் மணவறையிலே மணக்கோலத்திலே அமர்ந்திருக்கிறார்.  எல்லா  உணவு வகைகளும் தயாராகி  நிரம்பியிருக்கிறது.  ரிஷிகள்,  உணவு கொள்ளக்  காத்திருக்கிறார்கள்.  உணவை யாருக்கு நிவேதனம் செய்துவிட்டுப் பரிமாறுவது  எழுகிறது.  
பகவானிடமே கேட்கிறார்கள். "அஹோபில ஷேத்திரத்திலே உள்ள நரசிம்ஹனுக்கு நிவேதனம் செய்து உணவு விநியோகிக்கப்படட்டும்" என்று சொல்கிறார் ஸ்ரீநிவாஸபெருமாள்.  அதனால்தான் ஸ்ரீநிவாஸர் நரசிம்ஹருக்குக்   கைகூப்பி வணங்குவதை இன்னமும் அஹோபில ஷேத்திரத்திலே பார்க்கலாம்.  ஸ்ரீ ராமனாலும், ஸ்ரீநிவாஸபெருமாளினாலும் வணங்கப்பட்டவர் என்பதாலே நரசிம்ஹனை  பெரிய பெரிய பெருமாள் என்று அழைக்கிறோம்.
பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறபோது "அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை" என்று பாடுகிறார்.    அன்று அவன் உக்கிரமூர்த்தியாக இருந்ததாலே யாரும் அருகே போய்ப் பல்லாண்டு பாட முடியவில்லை.  அந்த குறைதீர, பிற்காலத்தில் பாடினார்.
அஹோபில ஷேத்திரத்திலேஅவன் அழகைப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
ஹிரண்யனை சம்ஹாரம் பண்ணியவன் அங்கே காட்சியளிக்கிறான். ஆழ்வார் பார்க்கிறபோது அவருக்கு என்ன தெரிகிறதாம் அங்கே...?  சிம்ஹங்கள் எல்லாம் யானைகளை அடித்துத் தின்றுவிட்டு,  தந்தங்களை வகைப்படுத்தி  வைத்திருக்கிறதாம்.  ஒவ்வொரு தந்தமாக  கொண்டு வந்து நரசிம்ஹனின் திருவடியிலே  இட்டு ஓம் நரசிம்ஹாய நம: என்று அர்ச்சனை பண்ணுகிறதாம். சிம்ஹம் சிம்ஹத்தை அர்ச்சனை பண்ணும் காட்சி சிங்கவேள் குன்றத்திலே!
திருமங்கையாழ்வாரின் அழகிய பாசுரம் ஒன்றிலே நரசிம்ஹனைப் பாடாத பாட்டும் ஒரு பாட்டா? அவனைப் பேசாத நாவும் ஒரு நாவா?  அவன் புகழ் கேளாத செவியும் ஒரு செவியாகுமா? என்று கேட்கிறார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலே கம்பராமாயண அரங்கேற்று மண்டபம் தெரியும்.  அங்கே கம்பர் யுத்த காண்டம் ஆரம்பிக்கும்போது இரணியன்  வதைப்படலத்தைச் சொன்னாராம்.  விபீஷணன் ராவணனுக்கு  பண்ணுகிறான்:   "இப்படி எல்லாம் தீமை செய்யாதே!  இரணியனை அழித்த நரசிம்ஹன் தான் ராமனாக அவதரித்திருக்கிறான். அவனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளாதே" என்று நரசிம்ஹ அவதார கதையைச் சொல்கிறான்...
அரங்கேற்று மண்டபத்தில் இருந்த மகான்கள், பண்டிதர்களெல்லாம் ஆட்சேபித்தார்களாம்.  வால்மீகியின் மூலத்திலே இரணியன் வதைப் படலம் கிடையாது. எனவே, கம்பராமாயணத்திலும் அது இருக்கக் கூடாது.  அதை நீக்கி விட்டு கம்பர் தம் ராமாயணத்தை  அரங்கேற்றலாம் என்றார்களாம்.
கம்பனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.  அப்போது  வித்வான்கள், "இந்த புராணத்தின் தெய்வீக அம்சம் என்ன என்பதைக் காட்டினால் இதை ஒப்புக் கொள்கிறோம்" என்றார்கள்.
கம்பர், அழகிய சிங்கர் சன்னதிக்கு எதிரிலே போய் நின்று கொண்டார்.  "ஒன்றை உரைக்கில் ஒன்றேயாம்" என்ற செய்யுளில் ஆரம்பித்துப் பாட ஆரம்பித்தார். "ஆரடா சிரித்தாய்? என்ற சொல் வந்த  கட்டத்திலே, உள்ளுக்குள்ளே விக்ரஹ ரூபியாய் இருக்கும் பெருமான்  சிரித்து, தலையை ஆட்டி, இருகைகளையும் தூக்கி, "நான் ஏற்கிறேன்" என்று இரணியன் வதைப் படலத்தை ஏற்றானாம்.  ஆகையினாலே, இரணியன் வதைப் படலம் கம்பராமாயணத்திலே இடம்பெற்று அரங்கேறியது.  பகவானே அங்கீகரித்த அவதாரமாகிறது நரசிம்ஹ அவதாரம்.
நம்மாழ்வார் வாக்கிலே வருவதைப் பாருங்கள்.  "அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவன்" என்கிறார்.  நினைத்த இடத்தில் நினைத்த கணத்தில் தோன்றியவனின் காருண்யத்தைச் சொல்கிறார்.  "என் சிங்கப் பிரான்" என்று அவனை  அழைக்கிறார். அந்தப் பாசுரத்தை பிறர் சொல்லும்போது, அனைவருமே அவரவர் நரசிம்ஹனை அபிமானிக்கும்படியாகச் செய்து விட்டார் நம்மாழ்வார்.
காஞ்சி வரதராஜ பெருமாளைப் பார்த்து நரசிம்ஹா என்கிறார் சுவாமி தேசிகன்.  உலகத்தின் எல்லா பதார்த்தங்களிலுமே நிறைந்திருக்கிறான் அவன்.  என்றாலும் அவன் வெளிப்பட்டது ஒரு ஸ்தம்பத்தில் இருந்து தான்.  குழந்தை பிரஹலாதன் எந்த இடத்தைக் காட்டுவானோ? என்று காருண்யத்துடன் எல்லா இடத்திலும் நிறைந்து இருந்தான்.  எங்கு தட்டினாலும் உடனே வர சித்தமாயிருந்தான்.
வேதத்தைப் போல், கருணையும் தயையும் அதிகம் இந்த அவதாரத்திலே!

அளந்திட்ட தூணை அவன் தட்ட
ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர் சிங்க உருவாய்
உளந்தொட்டு இரணியன் ஒண்மார்வகலம் 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி...
என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
அளந்திட்ட தூண்!   தங்கச் செங்கல் கொண்டு ரத்தினங்கள் இழைத்த ஸ்தம்பமாம் அது.  குழந்தை பிரஹலாதனை இழுத்து வந்து, பிரத்யேகமாய் அதைக் காட்டி கேட்டானாம் ஹிரண்யன்.  தானே அருகில் இருந்து கட்டுவித்த தூணில் நாராயணன் இருக்க முடியாது என்ற தீர்மானம் அவனுக்கு!
"ஏன் இருக்க முடியாது" என்று கேட்டது குழந்தை.  உடனே அந்த இடத்திலிருந்து ஆவிர்பவித்தான் பரமாத்மா.   சிம்ஹமாய் - நரம்கலந்த சிம்ஹமாய்த் தோன்றினான்.
ஏன் சிம்ஹமாய்த் தோன்ற வேண்டும்?  புலியாக வரக்கூடாதா? என்றால், நாம் நினைக்கிற, விரும்புகிற ரூபத்தில் தோன்றுகிறவன் அவன்.  குழந்தை பிரஹலாதனை மடியில் உட்கார்த்திக் கொண்டு இரணியன் கேட்கிறான்:
"உலகிலேயே மிகவும் சாது யார்? என்று.
அப்போது பிரஹலாதன் "இதைத்தான் சாது என்று நினைக்கிறேன்.. என நரசிம்ஹனைச் சொன்னானாம்.  எனவேதான் அந்தக் குழந்தை விரும்பிய ரூபத்திலே எம்பெருமான் தோன்றினார்.

"இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாநுதலே" என்று நம்மாழ்வார் பாடுகிறார்.   இவரது ஆசையைப் பாருங்கள்.  வைகுண்டத்திலே போனால் பரவாசுதேவனாக ஆதிசே-ஷன்  கர்ப்பத்தில்... ஒரு கால் மடித்து, ஒரு காலை ஒயிலாகத் தொங்க விட்ட நிலையில் நாராயணனைப் பார்க்கலாம்.  ஆனால் ஆழ்வாரோ அங்கேயும் நரசிம்ஹனையே பார்க்க வேண்டும் என்கிறார்!
சொட்டை நம்பி என்று ஒருவர் ஸ்ரீரங்கத்திலே இருந்தார்.  அவருடைய அந்திம காலம் நெருங்கியபோது சிஷ்யர்கள் எல்லாம் சூழ்ந்திருந்து கேட்டார்கள்: "இப்போது உங்கள் மனத்திலே என்ன நினைப்பு ஓடுகிறது, நினைப்பதை சொல்லுங்கள்" என்றார்கள்.  
அதற்கு அவர் சொன்னார்: எனக்கு நல்ல ஆசார்ய சம்பந்தம்: மோக்ஷத்தைக் கட்டாயம் அடைந்துவிடுவேன்.  திரும்பி வருதல் இல்லாத சாசுவத நிலையை அடைவேன், வைகுண்டம் கட்டாயம் போவேன்.  ஆனால், வைகுண்டத்துக்குப் போய்ப் பார்ப்பேன்.. அங்கிருக்கும்படியான  பரமாத்மா,   நம் க்ஷேத்திர ரங்கநாதரைப் போல் இல்லாவிட்டால் முறித்துக் கொண்டு வந்துவிடுவேன்..!
சொட்டை நம்பி வைகுண்டத்திலேயும் ரங்கநாதரையே சேவிக்க விரும்பிய மாதிரி, ஆழ்வார் மோஹத்திலும் நரசிம்ஹ மூர்த்தியையே சேவிக்க விரும்புகிறார்.

அந்த மூர்த்தியைச் சேவித்தவருக்கு வேறு மூர்த்தியை சேவிக்கப் பிடிக்குமோ?

(தொடரும்)

  


Wednesday, August 21, 2013

Part - 1, Chapter - 20

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 20
 
ரசிம்ஹ அவதாரத்துக்குத் தனியான ஏற்றம் தருவது அவருடைய அத்யத்புத ரூபம்.

"ஸ்தம்பே   த்ருச்யதே" (ஸ்தம்பத்திலே, தூணிலே தெரியலையே) என்று ஹிரண்யகசிபு கேட்டபோது, 
"ஸ்தம்பேந  த்ருச்யதே" (ஸ்தம்பத்திலேதான் தெரிகிறான்) என்று பதில் சொல்கிறான் குழந்தை பிரஹலாதன்.
"எனக்கு தெரியாமல் உனக்குத் தெரிகிறானா? இரு!  இதோ உன் தலை வேறு, உடம்பு வேறுன்னு துண்டிக்கிறேன்.  அது பிரிஞ்சு போய்த் துடிக்கறச்சே தைப்பானா பார்ப்போம்" என்கிறான் அசுரன்.
"அந்த காரியம் அவன் பண்ண மாட்டான்" என்கிறான் பிரஹலாதன்.
"அவன் பண்ணமாட்டான் என்றால் நீ ஏன் அவனை ஆச்ரயிக்கிறாய்"?
"அங்கே ஸ்தம்பத்திலேஇருக்கிறவன் என்ன அவ்வளவு கடினாத்மாவா?.  நீ கத்தி எடுத்து வெட்டறேன்னு சொல்றியே.  அந்தக் கத்தியைக் கழுத்தருகே கொண்டு வர முடியுமா உன்னாலே.  அது வரை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?" என்கிறான் பிரஹலாதன்.
அவ்வளவு விச்வாசம் பகவானிடத்திலே!

அந்த மாதிரி பூரண விச்வாசம் வைத்தால்தான், "என்னை ரட்சிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது" என்று பகவானிடத்திலே உரிமை கொண்டாடலாம்.

விச்வாசம் பண்ணுவதற்கு முன்னே சரணாகதி பண்ணினால் எடுபடுமா?

யாகம் பண்ண ஒருவர் திரவிய உதவி செய்கிறார்.  நம்பிக்கை இல்லாமலேதான் செய்கிறார். ஆனால் யாகம் செய்து மழை பெய்த பிறகு அவருக்கு நம்பிக்கை வருகிறது.  சரணாகதி விஷயம் அப்படி இல்லை.  விச்வாசம் இல்லாமல் சரணாகதி பண்ணினால் பலிக்காது.

எம்பார் அவர்கள் காலட்சேப கோஷ்டியிலே இருந்த தமது சீடர்களுக்கு சொல்லுவார் "கர்ம, ஞான, பக்தி யோகம் எல்லாம் பண்ணுவது கஷ்டம்.  அதெல்லாம் பண்ணி அவஸ்தைப்படாமல் சரணாகதியை சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.  ஏனென்றால் சரணாகதிக்கு முன்னாடி மகாவிச்வாசம் என்று ஒன்று இருக்கே.  அது சுலபத்திலே வருவதில்லை.  அக்கம்பக்கத்திலே உள்ளவர்களிடம் ஏற்படும் விச்வாசம் கூட நமக்கு பகவானிடத்திலே வருவதில்லை.  கல எள்ளுக்கட்டு கல எண்ணெய் ஆன கதைதான்" என்பார்.
சொல்லிவிட்டுக் கதையையும் விளக்குவார்:

பூர்வ காலத்திலேயே ஓர் எண்ணெய் வியாபாரி இருந்தான்.  நித்யம் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தான் அவன்.  செக்கு ஆடி, எண்ணெய் பிழிந்து, வியாபாரம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் அவன் செக்கு இரண்டாக உடைந்து போயிற்று!  இன்னொரு செக்கு செய்வதற்கு மரத்தைத் தேடித் போனான்.  ஒரு பிரும்மாண்ட மரம் - செக்குக்கு ஏற்றது என்று நான்கு ஆட்களைக் கூப்பிட்டு மரத்தை வெட்டச் சொன்னான்.  நாலு ஆட்களும் தலைப் பாகையைக் கட்டிக் கொண்டு கோடாரியை எடுத்து ஓங்கிய நேரத்திலே...

அந்த மரத்தில் இருந்து பொத்தென்று ஒன்று குதித்து எண்ணெய் வியாபாரியின் திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.  "இந்த மரத்தை வெட்டாதே!  இதில் ரொம்ப நாட்களாக நான் இருக்கிறேன்.  இதை வெட்டினாயானால் எனக்கு வாசம் செய்ய வேறு இடம் இல்லாமல் போய்விடும்" என்றது.

எண்ணெய் வியாபாரி யோசித்தான்.  அவன் யோசிப்பதைப் பார்த்து அது சொன்னது:
"இந்த எண்ணெய் வியாபாரம் உனக்கு எதுக்கு கையெல்லாம் எண்ணெய் ஒட்டிக் கொண்டு, சங்கடமில்லையா...  நீ எள்ளு வியாபாரம் செய்யலாமே? அதுக்கு நான் உதவி செய்கிறேன்.  தினமும் சூர்ய அஸ்தமன வேளையிலே உன் வீட்டு வாசலில், ஒரு கல எள்ளு ஆகும்படியான அளவுக்கு எள்ளுக் கட்டிக் (எள் விளைந்த கதிர்கள்) கொண்டு வந்து போடுகிறேன்" என்றது.
இவ்வளவு தூரம் அது பேசிய பிறகு அவன் கேட்டான். "இத்தனை அக்கறையாகச் சொல்கிறாயே, நீ யார்"?  "நான் இந்த மரத்திலே ரொம்ப நாட்களாக இருக்கிற பிசாசு" என்றது அது.
நடுநடுங்கிப் போய் விட்டான்.  முதலில் அதனிடம் பேசப் பயபடாதவன் பிசாசு என்றதும் பயந்து விட்டான்.  ஆனால் அது அவன் திருவடியை பிடித்துக் கொண்டு தொடர்ந்து கெஞ்சுவதைப் பார்க்க அவனுக்குத் தைரியம் வந்து விட்டது.
"சரி, மரத்தை வெட்டவில்லை.  ஆனால் சொன்னபடிக்கு நீ எள்கட்டு கொண்டு போடாவிட்டால், நான் என்ன செய்ய" என்றான்.  "நான் என்ன மனிதனா, ஒரு சொல் சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் போறதுக்கு?.  துர்தேவதையானாலும் கொடுத்த வாக்கைக் காப்பேன்" என்றது.  
துர்தேவதைகளும் பரிகசிக்கிற அளவுக்கு நமது நிலை ஆகியிருப்பதைப் பாருங்கள்.

ண்ணெய் வியாபாரி பிசாசு சொன்னதை ஒப்புக்கொண்டு மரத்தை வெட்டாமல் போனான்.
சொன்னது போலவே ஒரு களம் எள் ஆகும்படியான எள்ளுக்கட்டை தினமும் ஆறு மணிக்கு கொண்டு போட்டது பிசாசு.

போகப் போக ஆறு  மணி என்பது ஆறரை ஆயிற்று - அப்புறம் ஏழு .. ஏழரை .. .என்றாகி.. ஒரு நாள் இரவு 1 மணிக்கு கொண்டு  வந்து எள்ளுக்கட்டைப்  போட்டது!

ஏன் என்று பார்த்தால் .. பிசாசுக்கு எள் பயிரிட முடியுமா...?  யார் யாரோ பயிரிட்டதை அறுத்துக் கொண்டு வந்து அது போட்டு விடுகிறது.  நிரந்தரமாக எள் பயிர் செய்பவர்கள் கிடைப்பார்களா என்ன...?  அதனாலே அந்த எள்ளுக்காக பிசாசு பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை!.  நாலா திக்கிலும் போய்த்  தேடி  அவஸ்தைப் படுகிறது.   ஒரு நாள் இரவு 2 மணிக்கு எள்ளுக்கட்டை கொண்டு வந்து போட்டுவிட்டு அது யோசிக்க ஆரம்பித்தது.

இந்த வேலையை தினமும் பண்ணுகிறோமே.. எதற்காகப் பண்ணுகிறோம்?  குடியிருந்த அந்த மரத்தை ரக்ஷிக்கத்தானே பண்ணுகிறோம்.  ஆனால் இந்த வியாபாரியிடம் வாக்கைக் கொடுத்த பிறகு ஒரு நாள் கூட அந்த மரத்திலே போய் உட்கார முடியலையே... இந்த நிலையை விட அவன் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு போகவே அனுமதித்திருக்கலாம் போலிருக்கிறதே...!
3 மாத காலமாக வீணான காரியத்தை அல்லவோ நாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்... இன்றைக்கு எப்படியாவது ஒரு நிமிஷமாவது அந்த மரத்திலே போய் உட்கார வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டது.

ப்படி பிசாசுக்கு வந்த  விவேகம் மனிதனுக்கு வருமா? என்று கேள்வி எழுப்புவார் எம்பார்!
மனிதன் உட்கார்ந்து அறியான்!  எத்தனை நாள் ஆனாலும் தேக சஞ்சாரம் பண்ணுவதற்கே சரியாயிருக்கிறதே... எப்போது மனிதனுக்கு விவேகம் வருமோ? என்பார்.

இன்றைக்கு எப்படியாவது நேரத்திலே போய் உட்காரணும் என்று தீர்மானித்த பிசாசு அந்த மரத்திடம் போனது.  அங்கே போனால்... அந்த மரத்திலே வேறொன்று உட்கார்ந்திருந்தது!  நூதனமான புதுப் பிசாசு அது!
புதுப் பிசாசைப் பார்த்துப் பழைய பிசாசு, "நீ யார்?" என்று கேட்டது.
புதுப் பிசாசு சொன்னது: "உன்னைப் போல ஒரு பைத்தியம் உண்டா?  மனுஷனைப் பிடித்துக் கொண்டு பிசாசு ஆட்டும் என்பார்கள்.  உன்னைப் பிடித்துக்கொண்டு அந்த மனுஷன் ஆட்டுகிறானே...!  உன்னைப் போல அசடு உண்டா?  நீ போன பிறகு மூன்று மாதமாக இந்த மரத்திலே வசித்து வருகிறேன்,  இப்போது நீ வந்திருக்கிறாய், உன்னை விரட்டி அடிக்க நான் தயாராயில்லை.  ஒன்று செய்கிறேன் - அந்த என்னை வியாபாரியை கொன்றுவிட்டு வருகிறேன்.  அதன் பிறகு எனக்கும் இந்த மரத்திலே இருக்க நீ இடம் கொடுப்பாயா? என்றது.

"அந்த காரியத்தை நீ பண்ணினால், நீயும் நானும் சௌக்கியமாக இருக்கலாம்".
"சரிதான்" என்று கிளம்பிய புதுப் பிசாசு, நேராக எண்ணெய் வியாபாரி வீட்டின் புழக்கடைக்கு போனது.  அங்கே  இரண்டு மாட்டுக் கொட்டகைகள் இருந்தது.  ஒன்றில் 20  இருந்தன.  இன்னொன்றில் ஒரே ஒரு மாடு தனித்து இருந்தது.  அந்த இரண்டாவது கொட்டகையிலே போய் உயரத்திலே உட்கார்ந்து கொண்டது புதுப் பிசாசு.  விடியற்காலை எண்ணெய் வியாபாரி கொட்டகைப் பக்கம் வந்தால் அவனை அமுக்கிக் கொன்று விடலாம் என்று காத்துக் கொண்டிருந்தது.

ஆனால் விடிந்து நேரமாகியும் எண்ணெய் வியாபாரி மாட்டுக் கொட்டகைக்கு வரவே இல்லை.  ஒரு அரச மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டு மாடுகளுக்கு லாடம் அடிக்கும் வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒவ்வொரு மாடாகப் பிடித்து அழைத்து  பணியாட்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.
"அதோ அந்தக் கொட்டகையிலே இருக்கிற புதுப் பிசாசைப் பிடித்துக் கொண்டு வா!" என்று ஒரு கட்டளை  வரவும் நடுநடுங்கிப் போய்  விட்டது புதுப் பிசாசு!

எண்ணெய் வியாபாரி குறிப்பிட்டது தனியே கட்டியிருந்த மாட்டை.  அது சந்தையிலே பிடித்த புது மாடு.  முரண்டு பண்ணி மற்ற மாடுகளை இடித்ததால் தனியே கட்டி வைத்திருந்தான்.
நிஜப் பிசாசோ, தன்னைத்தான் எண்ணெய் வியாபாரி பிடித்து லாடம் அடித்துவிடுவான் என்று பயந்தது!  ஓடிப் போய்  அவன் திருவடிகளில் விழுந்து, "என்னை ஒன்றும் பண்ணிவிடாதே"! என்று கெஞ்சியது.
"நீ  யாரு" என்று கேட்டான் அவன்.  "நான் தான் புதுப் பிசாசு"
"புதுப் பிசாசா?" 
"என்னை ஒன்றும் செய்யாமல் விட்டாயானால் அந்தப் பழைய பிசாசைக் காட்டிலும் உனக்குச் சகாயமாய் இருப்பேன்.  அது ஒரு களம் எள்ளு ஆகும்படியான எள்ளுக்கட்டை தினமும் உனக்குக்  கொண்டு போட்டது.  நான் ஒரு களம் எண்ணெயே பிழிந்தெடுக்கும் அளவுக்கான எள்ளுக்கட்டை தினமும் கொண்டு போடறேன்..."
"கட்டாயம் போடுவாயா..?
"கட்டாயம் போடுவேன்"..
"அப்படியானால் போ!.. என்றான் எண்ணெய் வியாபாரி.
தலையை சொறிந்தபடி போய் பழைய பிசாசைப் பார்த்தது புதுப் பிசாசு!
"என்ன, போன காரியம் முடிந்ததா?" என்று அது கேட்க, இது நடந்த கதையைச் சொல்ல... "நான் ஒப்புக் கொண்டதைக் காட்டிலும்  அதிகமாக அல்லவா நீ ஒப்புக் கொண்டிருக்கிறாய்.. உனக்கெங்கே இந்த மரத்துக்கு வர நேரம் இருக்கப் போகிறது" என்றது அது.

லம் எள்ளு கலம் எண்ணெய் ஆனகதை இதுதான்.

கர்ம யோகமும் ஞான யோகமும் கடினமானவை. சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று நாம் எண்ணினால் இந்த கலம் எண்ணெய் போல ஒரு  விஷயம் குறுக்கே வருகிறது.  அந்த விஷயம் தான் மகா விச்வாசம்!  கலம் எண்ணெய்க்கான எள்ளுக்கட்டை தினமும் அடைவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு  கஷ்டம் சரணாகதிக்கான மகா விச்வாசத்தை  எய்துவது.

பகவான் எதிரே இருக்கிறான் என்ற பாவனையில்  தூபம், தீபம், நைவேத்தியம் என்று சமர்ப்பிக்கிறோம்.  அவன் வாஸ்தவத்தில் அங்கே உட்கார்ந்திருக்கிறான், நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற எண்ணம் வர வேண்டாமா?  பூரணமான விச்வாசம் வர வேண்டாமா?  அது  சிரமம்.

அந்த விச்வாசம் பிரஹலாதனுக்கு இருந்தது.  அதனாலேதான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னதுபோல உறுதியுடன் அவனால் பேச முடிந்தது!














தொடரும்...

Monday, August 12, 2013

Part - 1, Chapter - 19

குறையொன்றுமில்லை (முதல் பாகம்)

அத்தியாயம் 19

நரசிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் என்று ஒன்று உண்டு.   முப்பத்திரண்டு அஷ்ரங்கள்.  ஒவ்வொரு அஷ்ரமும் ஒரு பிரும்ம வித்தையை நமக்கு உபதேசம் பண்ணக்கூடியது.  ஆகவே 32 பிரும்ம வித்தைகளாலும் ஆராதிக்கப்படுகிறவர் நரசிம்ஹர் என்று கொள்ளலாம். 
ஏதாவது ஒரு பிரும்ம வித்தையை நம்மால் கற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியுமா? என்றால்,  ஒன்றைக் கூட நம்மால் அனுஷ்டிக்க முடியாது.
ஆனால், நரசிம்ஹனைப் பார்த்து ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை செய்ய முடியும்!  அந்த நரசிம்ஹனை தியானம் பண்ண முடியும்.  அப்படி தியானம் பண்ணிவிட்டால் எல்லா பிரும்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.  அத்தனை பிரும்ம வித்தைகளின் நிலைக்களன் அந்தப் பரமாத்மா தான்.
பூர்வ காலத்திலேயே ஜான சுருதி என்றொருவன் இருந்தான்.  வாரிவாரி வழங்கும் வள்ளன்மை மிக்கவன்.  எல்லோருக்கும் வாரிவாரிக் கொடுப்பான்.  தானம், தைரியம் போன்ற குணங்கள் இயல்பாக அமையனும்.  அவனுக்கு அது அமைந்திருந்தது.
ஏழு அடுக்கு உப்பரிகையிலே ஜான சுருதி படுத்துக் கொண்டிருந்தான்.  இரவு நேரம்....  இரண்டு பரதேசிகள் அவனுக்கு உபதேசிக்க எண்ணினார்கள்.
வானத்தில் ஒரு ஹம்ஸ கூட்டம் (அன்னப் பறவை) பறந்து போய்க்கொண்டிருந்தது.  தாங்களும் ஹம்ஸப் பறவைகளாக மாறி, கூட்டத்துடன் பறந்தனர்.   ஜான சுருதி படுத்திருந்த இடத்துக்கு நேர்மேலே வந்தபோது, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள்.
ஒரு பறவை சொன்னது: "மந்தமான பார்வையுடைய நண்பா! கீழே படுத்திருப்பவனைப் பார்த்தாயா? இவன் எப்பேர்ப்பட்டவன் என்று உனக்குத் தெரியுமா?"
மற்றது பதில் பேசியது:  இவனொன்றும் அப்படி உயர்ந்தவன் இல்லை.  ரைக்குவரைக்  காட்டிலும் இவன் எப்படி உயர்ந்தவனாக முடியும்?" 
உரையாடல் தொடர்ந்தது.
"அது யார் ரைக்குவர்?  
உனக்கு ரைக்குவரைத் தெரியாதா?  நான் காட்டுகிறேன், வா .."

படுத்திருந்த ஜான சுருதி எழுந்து விட்டான்.  தன்னைக் காட்டிலும் உயர்ந்த ரைக்குவரைத் தெரிந்து கொள்ள அவனுக்குப் போருக்க முடியாத ஆவல்.

தான் ஏழு அடுக்கு உப்பரிகையில் படுத்திருந்தால் ரைக்குவர்  பதினாலு அடுக்கிலே படுத்திருக்க வேண்டும் என்று எண்ணி, ஆட்களைக் கொண்டு நகரம் தோறும் தேடச் செய்தான்.  ஒரு நகரத்திலும் அவர் அகப்படவில்லை.  பிறகு  கிராமம்,குக்கிராமம் என்று தேடி, ஒரு வழியாக ரைக்குவரைக் கண்டு பிடித்தார்கள் .
எங்கே?
மிகச் சிறியதொரு குக்கிராமத்தில், ஒரு சேரியில் இருந்தார் ரைக்குவர்.  அங்கே ஒரு கட்டை வண்டி இருந்தது. அதிலே முதுகைத் தேய்த்தபடி நின்றார்!  அவர் உடல் முழுவதும்புளுத்து நெளியும் புண்கள்!
 
ஜான சுருதியினால் நம்ப முடியவில்லை.  இவரைத் தவிர வேறு ரைக்குவர் கிடையாது என்றதும், இரண்டு யானைகள் மீது தங்கத் தாம்பாளத்தில் பட்டு, பீதாம்பரம், செல்வம் என்று குவித்து எடுத்து வருகிறான்.  அத்தனையையும் அவர் முன் சமர்ப்பித்து அனுக்கிரஹம் பண்ணப் பிரார்த்திக்கிறான்.  
"ஒரு புழுவுக்குச் சமம்" என்று தம் உடம்பிலிருக்கும் ஒரு புழுவைக் காட்டிச் சொல்கிறார் ரைக்குவர்.  உன் நிலைக்கு இதெல்லாம் உயர்வாகத் தெரிகிறது.  நான் இருக்கும் நிலைக்கு நீயும் வந்தால், என்னைப் போல்தான் நீயும் இவற்றைப் பார்ப்பாய்" என்றார்.
"இவ்வளவு செல்வத்தையும் புழுவாய் நினைக்கும் ஒரு நிலை இருக்கிறதா? என்று வியக்கிறான் ஜான சுருதி.  
"ஏன் இல்லை?"
"அப்படியானால், அதை அடைய நான் என்ன பண்ண வேண்டும்?"
இப்படிக் கேட்ட ஜான சுருதியிடம் ரைக்குவர் யாரை உபாசிக்கச் சொல்லி உபதேசம் பண்ணினார் என்றால்... நரசிம்ஹனையே உபாசிக்கும்படி உபதேசித்தார்!  அவனும் அவர் சொல்படி நரசிம்ஹனை உபாசித்து மோக்ஷத்தை அடைந்தான்.

ஆக, யார் தன்னை உபாசிக்கிறார்களோ அவர்களுக்குப் பலனைக் கொடுக்கக் கூடியவன் நரசிம்ஹன்.
"அடித்த கை - பிடித்த பெருமாள்" என்று பெயர் அவனுக்கு!  "எங்கடா"? என்று அடித்துக் கூப்பிட்டால், "இதோ" என்று வந்து நம் கையைப் பிடித்துக் கொள்வான்.  வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா!

விச்வத்துக்குக் காரணமானவனும் வேதாந்தத்திலே சொல்லப்பட்ட வித்யைகளுக்குப் பொருளாய்  இருக்கக் கூடியவனும் நரசிம்ஹன்தான்.
அப்படிப்பட்டவனை வெறும் உக்ர ரூபியாக இல்லாமல், லக்ஷ்மியோடு கூடிய லக்ஷ்மி நரசிம்ஹனாக  நாம் உபாசிக்க வேண்டும்.
ஈஸ்வரனே ஆச்சர்யமாய், நரசிம்ஹனை உபாசிக்கும் படியான மந்திரத்தைச்  சொல்கிறார். அதை யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஆரோக்கியம், வித்யை, செல்வம் எல்லாம் சம்பவிக்கும்.
முக்கண்ணனே முக்கண்ணனின் பெருமையைச் சொல்லும் இந்த ஸ்தோத்திரம் அஹிர் புத்ரிய சம்ஹிதை என்பதில் உள்ளது.
எனவே,எல்ல அவதாரங்களிலும் உயர்ந்தது நரசிம்ஹ அவதாரம் எனக் கொள்ளலாம்.  இதை உபசாரமாகவோ, அதிசயோக்தியாகவோ சொல்லவில்லை.. காரணமிருக்கிறது!
நரசிம்ஹ அவதாரம் எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், ஹிரண்ய கசிபுவை சம்ஹரிப்பதற்காக ஏற்பட்டது என்று சாதாரணமாய் பதில் கிடைக்கும்.
ஆனால் ஹிரண்ய சம்ஹாரத்துக்காக ஏற்பட்டது அல்ல இந்த அவதாரம்.
சரி, பிரஹலாதனை காப்பதற்காக எற்பட்டதா இந்த அவதாரம் என்றால் அதுவும் இல்லை.
அக்கினியில் தூக்கிப்போடும்போதும், மலையில் இருந்து உருட்டும் போதும், சமுத்திரத்தில் எறிந்த போதும், யானையைக் கொண்டு இடறச் செய்த போதும், விஷப் பாம்புகளிடையே விடப்பட்ட போதும் பிரஹலாதனை யார் காப்பாற்றினார்கள்?
அப்போதெல்லாம் அவதரிக்காத நரசிம்ஹன், பிரஹலாதனின் வார்த்தையைக் காப்பாற்றத்தான் அவதரிக்கிறான்!
"எங்குமுளன் கண்ணன், அவன் இல்லாத இடம் கிடையாது" என்று பிரஹலாதன் சொன்னபோது அதை உண்மையாக்க பரமாத்மா அவசரத் திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்தான்!
இப்படி அவனை அவதரிக்க செய்த பிரஹலாதனே அவன் பெருமையைப் பேசுகிறான்.
அவசர அவசரமாகப் போட்டுக் கொண்ட அவதாரமாம்.  யோசித்து எடுத்த ராமாவதாரம் போல் அன்றி, தேவதைகளின் பிரார்த்தனைகளுக்கிரங்கி தோன்றிய கிருஷ்ணாவதாரம் போல் அன்றி, நினைத்த மாத்திரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
அவசரத் திருக்கோலம் என்றாலும் அதுதான் மிகவும் அழகான அவதாரமாக அமைந்திருக்கிறது!
மிக ஏற்பாடாக விருந்து சமைக்கும் போது எல்லாம் பிரமாதமாக அமைவதில்லை.  ஆனால், ஊரிலிருந்து வரும் திடீர் விருந்தினருக்கு அவசரமாய்த் தயாரிக்கப்படும் எளிய உணவு அற்புதமாக அமைகிறது!
நரசிம்ஹ அவதாரம் இந்த அவசர உபசரணை மாதிரி... 
அதன் அழகைச் சொல்லி முடியாது.
பிரஹலாதனின் வாக்கை மட்டுமின்றி பிரும்மாவின் வாக்கைக் காப்பதற்காகவும் எடுக்கப்பட்டது நரசிம்ஹ அவதாரம்.
ஹிரன்யகசிபுவுக்கு எசகுபிசகான நிபந்தனைகள் அடங்கிய வரத்தைக் கொடுத்தவர் அவர்தானே...
"இரவிலும், பகலிலும், மனிதராலும், மிருகத்தாலும் எனக்கு அழிவு வரக்கூடாது" என்றெல்லாம் கேட்டான் அல்லவா.
பிரும்மா கொடுத்த அத்தனை வாக்கையும் காப்பாற்றிக் கொடுத்து, அதே சமயத்தில் ஹிரண்யகசிபுவை சம்ஹாரமும் பண்ணப் பரிவுடன் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
பிரும்மா வாக்குக் கொடுத்துவிட்டால் என்ன? என்று அதை மீறும் வல்லமையும், உரிமையும் பகவானுக்கு இல்லையா என்ன? ஆனால் அவன் பிரும்மாவின் வாக்கைக் காப்பாற்றிக் கொடுக்க பிரயத்தனத்துடன் அவதரித்தான்.  ஏன்..?
அந்த வாக்கு மீறப்பட்டால்,  பிரும்மாவின் வரம் செல்லாது என்று ஆகிவிடும்!  அப்புறம்  ஸ்தோத்திரம் பண்ணுவார்களா?  ஏற்கெனவே அவருக்கு ஸ்தோத்திரமும் கோயிலும் குறைவு... அவர் தொடர்பான மந்திரங்களை தொனிகுறைத்துத்தான் சொல்ல வேண்டும் என்று வாக்கு தேவதையின் சாபம் வேறு இருக்கிறது.
ஒரு ஊரில் உபன்யாசகர் இராமாயண உபன்யாசம் 48 நாள்  முடித்து, வீட்டுக்குக் கிளம்புகிறார்.  உபன்யாசத்தை ஏற்பாடு செய்தவருக்குச் சந்தேகம்.
"சுவாமி, இந்த 48 நாட்களும் ராமன், ராமன் என்றும் ராவணன், ராவணன் என்றும் ராக்ஷசன், ராக்ஷசன் என்றும் சொல்லிக் கொண்டேயிருந்தீர்.  
இதிலே ராக்ஷசன் யார் ? ராமனா ? ராவணனா? என்று கேட்டாராம்.
உபன்யாசகர் தமது மூட்டைகளைக் கட்டுவதை நிறுத்திவிட்டார்.
சந்தேகப் பேர்வழி தொடர்ந்து கேட்டார்.
இப்ப கேட்ட சந்தேகம் இந்த 48 நாட்களா உண்டானதுதான். அதற்கும் மேல், ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.  பிரும்மவுக்கு நம் தேசத்தில் ஏன் கோயில்களே இல்லை?
உபன்யாசகர் சொன்னாராம்.
"உம்மையும் படைச்சு, எம்மையும் படைச்சு, உம்மெதிரே எம்மை 48 நாள் உபன்யாசம் பண்ண வைத்தாரே அந்த பிரும்மா!  அதனாலேதான் அவருக்குக் கோயிலே இல்லை போலும்...
ஆக, பிரும்மவுக்கு ஏற்கெனவே ஸ்தோத்திரமும் கோயில்களும் குறைவு.  இந்த நிலையிலே, பகவான் அவரை மதிக்கலைன்னா...   வேறு யார் மதிப்பார்கள்?  அதனால்தான் பிரும்மாவின் வாக்கைக் காப்பாற்ற நரசிம்ஹ அவதாரம் எடுத்தான்.

நாராயணின் நாபியில் இருந்து உருவானவன் நான்முகன்.  அவன் நாபிக் கமலத்தில் தான் அமர்ந்திருப்பதை உணர்வதற்கே அவனுக்கு ரொம்ப நாட்கள் ஆயிற்றாம்.  ஆயிரம் கோடி யுகங்கள் தவம் பண்ணி, நாராயணனே நமக்கு மூலம் என்று உணர்ந்தான் பிரும்மா.  அந்த தேவதைக்கு ஒரு அகௌரவம் வரக்கூடாது என்கிற பரிவினால் அவன் கொடுத்த வரத்துக்கு எந்த வித பங்கமும் இல்லாமல், "அகடிதகடனா" சாமர்த்தியத்தோடு அவதரித்தான் பகவான்.  

அவனுக்கு எத்தனை காருண்யம் பாருங்கள்.

(தொடரும்)